ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

நமசிவாயம் 395

 இறைவா  நீயிங்கே  வருவாயா -எனக்கு
பிறவா  வரமொன்று  தருவாயா
கரையினில்  ஒதுங்கிய  மீனினைப்  போல -கதி
கலங்கி த்  தவிக்கும்  நிலையுமானேன்   (இறைவா )

உனையே  நினைந்து  உருகியே  கிடப்பேன் -நான்
உய்யும்  வழியினை  காணவே  நடப்பேன்
நினையே  நினைந்து  நெஞ்சம்  மகிழ்வேன் --என்றும்
நிலைப் படியாக  நானுன்  கோவிலில்  கிடப்பேன்  (இறைவா)

கருணை வெள்ளம்  கண்களில்  தெரியும் -உந்தன்
காலடி  ஒன்றே  என்னுள்  நடக்கும்
ஒருமுறை  பார்த்திட  உள்ளம்  களிக்கும் -தினம்
உன்பெயர்  சொல்லிட  என்மனம்  இனிக்கும்  (இறைவா)

திருவே  உருவே  தீந்தமிழ்ச்  சுடரே -இங்கே
திருநாள்  போல நீ  வரும்  நாள்  எப்போ
உருவாய்  ஒளியாய்  உன்னத  நிலையாய் -நீ
வருவாய்  என்றே  வந்தனை  செய்வேன் (இறைவா)

நாவினில்  இனிப்பது  நமசிவாயமே -உலகில்
நான்மறை  தொழுதிடும்  நந்தா  விளக்கே
ஆலமரத்தடியில்   அமர்ந்திட்ட  அண்ணலே -நினது
அருமைகள்  சொன்னோம்  நீயும்  அகமகிழ்வாயே (இறைவா)

ஜீவன்  வாழ்ந்திட  சிவனே  நற்கதி -சதா
சிவனை  நினைந்திடில்  மாறிடும்  தலை விதி
பாவம்  நீங்கிட  பக்தரைக்  காப்பாய் -தமிழில்
பணிந்தேன்  தொழுதேன்  பரமெனும்  சிவமே (இறைவா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக