நீராடும் பொழுதிலே என் தோழி -அவா
நினைவு எங்கும் பொங்குமே தோழி
போராடும் மனதினைக் கொண்டேன் -உடனே
புறப்பட்டு வருவாரென வாசலில் நின்றேன்
யார் யாரோ வந்திங்கு சென்றார் -என்
அய்யன் இன்னும் வரக் காணேன் சகியே
ஊர் மாறிப் போனாரோ அவரே -நான்
உறவின்றி உணர்வின்றி நிற்கும் மண் சுவரே
காலங்கள் நில்லாது ஓடும் -என்
கண்ணாளர் இல்லாத நிலையென்று தீரும்
கோலங்கள் மாறிடவும் வேண்டும் -இந்த
கோதைக்கு புது வாழ்வு வந்திடுமோ தோழி
மலருக்கு மலர் தாவும் வண்டு -அவரது
மனதிலே மணக்கின்ற வாச மலர்ச் செண்டு
உலா வரும் தென்றலை தூது கேட்பேன் இனி
உடன் வந்து எனைக்காக்க வரமொன்று கேட்பேன்
ஒரு பிள்ளை எனக்காக வேண்டும் -அவரது
உறவு சொல்ல எனைக்காக்க துணையாக வேண்டும்
பெரும் பிழைகள் நான் என்ன செய்தேன் ?-இந்த
பேதை மனம் களித்திட இவண் வாயென் கண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக