செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கண்ணா 377

நீராடும்     பொழுதிலே    என் தோழி -அவா
நினைவு    எங்கும்    பொங்குமே   தோழி 
போராடும்    மனதினைக்    கொண்டேன் -உடனே 
புறப்பட்டு    வருவாரென    வாசலில்    நின்றேன் 

யார்  யாரோ    வந்திங்கு    சென்றார் -என் 
அய்யன்    இன்னும்    வரக் காணேன்  சகியே 
ஊர்       மாறிப்    போனாரோ    அவரே -நான் 
உறவின்றி   உணர்வின்றி    நிற்கும்   மண் சுவரே 

காலங்கள்    நில்லாது    ஓடும் -என் 
கண்ணாளர்    இல்லாத    நிலையென்று    தீரும் 
கோலங்கள்    மாறிடவும்    வேண்டும் -இந்த 
கோதைக்கு    புது வாழ்வு    வந்திடுமோ   தோழி 

மலருக்கு    மலர்     தாவும்     வண்டு -அவரது 
மனதிலே     மணக்கின்ற    வாச மலர்ச்    செண்டு 
உலா வரும்  தென்றலை    தூது    கேட்பேன் இனி 
உடன் வந்து   எனைக்காக்க   வரமொன்று    கேட்பேன் 

ஒரு பிள்ளை    எனக்காக    வேண்டும் -அவரது 
உறவு சொல்ல    எனைக்காக்க    துணையாக  வேண்டும் 
பெரும் பிழைகள்    நான்  என்ன    செய்தேன் ?-இந்த 
பேதை மனம்   களித்திட   இவண்  வாயென்   கண்ணா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக