திங்கள், 16 ஏப்ரல், 2018

திருமகள் 354

திருமகளே  உனையன்றித்   துணை யாரம்மா -உந்தன்
திருவடி   ஒன்றுதான்   கதியே  அம்மா
பெருமாளின்   திரு மார்பில்   உறைபவளே -அழியா
செல்வங்கள்  பல கோடி  தருபவளே 

கடல் நீரின்   நடுவில்   அன்றோ   குடி இருப்பு -இங்கு
கதியற்றோர்    நல  வாழ்வு   உன்பொறுப்பு
உடல் ஆவி   பொருள்  யாவும்   உனதல்லவா -என்றும்
உயர்வாக   நான் வாழ    வழி செய்யம்மா

கண் திறக்க   வரும் கவலை   பறந்தோடுமே --கொடிய
கரு நாகக்   குடைக் கீழே   அமர்ந்தவளே
மண் சிறக்க   மனைதோறும்   வருபவளே -உலகில்
மகாலட்சுமி   எனும் நாமம்   மகத்தானதே

அழகான   திருமாலும்   உனக்கானவர் -நீயோ
அழைத்திடும்   போது வரும்  கணக்கானவள்
நிலம் யாவும்   செழித்தோங்க வரம்  தாருமே -எனது
நினைவெல்லாம்   மலராக்கி   உனைப்  பாடுவேன்

உலகோர் கள்   நலம் வாழ   வழி செய்கவே -உயிர்கள்
உள்ளத்தில்  உண்மை யன்பு  நிறைந்தோங்கவே
கலகங்கள்    போர் மூளும்   நிலைமாறவே -எங்கள்
கஜலட்சுமி   தாயே உந்தன்   அருள் வேண்டினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக