திங்கள், 16 ஏப்ரல், 2018

திரு முருகன் 357

இறைவன்   முருகன்   வருவாரா -மனதில்
இந்த ஏழைக்கோர்   இடம்   தருவாரா
கரையில்   மோதும்   அலையானேன் -அவரது
காதலில்   உருகிடும்  மெழுகானேன்

அல்லும்   பகலும்   நினைக்கின்றேன் -அவரை
அடியாள்   மனதில்   தொழுகின்றேன்
கொல்லும்  இரவையும்  வெறுக்கின்றேன் -அந்த
கோல   முகத்தினை  ரசிக்கின்றேன்

மயில் மீதில்   ஏறியே  வருவாரென்றே -என்
மனதில்  ஆசைகள்   வைத்துள்ளேன்
குயிலின்   பாட்டும்   பிடிக்கவில்லை -எனது
குறையை   தீர்த்திட   வருவாரா

உணவும்   எனக்கு    ருசிக்கவில்லை -உள்ள
உறவும்   எனக்கேனோ   இனிக்கவில்லை
கனவில்   வந்திட்ட   திரு முருகன் -எந்தன்
கரங்கள்   பற்றிட   வருவாரா

மயில்கள்   ஆடிடும்   சோலைதனில் -இள
மங்கை   நானும்     இருப்பேனே
உயிரில்    கலந்த   செந்தில்   வேலன் -இன்றே
உகந்த    பதிலினைத்   தருவாரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக