புதன், 25 ஏப்ரல், 2018

கலைமகள் 383

அறிவான    தெய்வம்    நீதானம்மா -இந்த
அடியேனுக்கு    அருள்   செய்ய   வருவாயம்மா
புரியாத    கேள்வியின்    விடை-    நீயம்மா-பெரும் 
புகழ்   வேண்டி    உன்பாதம்    பணிந்தேன்   அம்மா

கண்ணாலே   நீ  பார்க்க   நான்   கவியாகினேன் -உன்
கனிவான    சொல்லே    எனது    வழிகாட்டியே
எண் ணா லும்  எழுத்தாலும்   என்னை    மாற்றினாய் -இந்த
எளியோனுக்    கருள்தந்து    புகழ்  ஏற்றினாய்

பொன்னாலும்   மணியாலும்    துதிப்பேன்  அம்மா -உனது
புன்னகை    பலத்தாலே   நானும்   ஜெயிப்பேன்  அம்மா
மண்ணுள்ள   காலம்   முழுதும்    மருந்தாகினாய் -உந்தன்
மலரடி    தொழுதவர்க்கு    அறிவு   விரிந்தாகினாய்

அழியாத   பல செல்வம்    நீ   தந்தது -உன்
அருளாலே    அல்லவா    இந்தப்   பெயர்    வந்தது
விழி சிந்தும்    கண்ணீரில்    விளக்கேற்றுவேன் --தலை
விதி   மாற்றி    அருள்  கூட்ட    உனை   வேண்டினேன்

எந்நாளும்     உனைஎண்ண    மறவேனே -உன்
எழில் கண்டு   பல   பாடல்    புனைவேனே
கண்ணாக    உனையெண்ணி   தினம்   போற்றுவேன் -தமிழ்
கவிதையின்    வழியாக     உந்தனை     வேண்டினேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக