வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வசந்தத்தில் ஓர் நாள் 386

வசந்தத்தில்  ஓர் நாள்  வந்தவர்  சென்றார் -அவர்
இன்னும்  வந்திடக்  காணேன்  தோழி 
கசந்திடும்  நினைவோ  கவலைகள்  மிகவோ -நீ 
போய் கண்டு  வந்து  சொல்லடி 

சுகம்  பெறும்  நாளைத்  தினமும்  நினைப்பேன் -அந்த 
சுந்தரன்  என்னிடம்  வரவில்லை  தோழி 
சுற்றமும்  சொந்தமும்  சொல்வது   கேலி --எனோ 
உற்ற துணை  எனக்கென்று  யாரடி  தோழி 

கண்களால்  அழைத்தார்  கட்டியே  அணைத்தார் -அன்று 
ககனத்தில்  பறந்து  சென்றேன்  நானே 
பெண்களில்  என்போல்  பிதற்றிடல்  உண்டோ -இதனை 
நன்றாய்  அறிவாயடி  எனது  நாயகன்  வருவாரோடி 

இரவென்றால்  தொல்லை  என் இளமையும்  தொல்லை -இனி 
எதிர்காலம்   எனக்கு  நல்லதோ  தோழி 
உறவினை மதித்தேன் ஊரினை  எதிர்த்தேன் -நானுமவருடன் 
ஒன்றெனக்  கலந்து  உலகினில்  வாழ்வேனோ 

உணவை  மறந்தேன்  உழன்று  திரிந்தேன் -என் 
ஊனில்  கலந்த  நல்  உத்தமன்  அவரே 
கனவில்  வருவதால்  கண்ணீர் பெருகுது -அந்த 
காமன்  கணைகளோ இந்தக்  கன்னியை  வாட்டுது 

நாட்டில்  உள்ள  நல்லவர்  பேசுக -வெறும் 
ஏட்டில்  எழுதிடும்  இன்பமா  காதல் ?
வேட்டை  யாடிட  விருப்பமா  சொல்வீர் -இன்றே 
விரும்பிய  பெண்களை  விரைவீர்  மணக்க  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக