வசந்தத்தில் ஓர் நாள் வந்தவர் சென்றார் -அவர்
இன்னும் வந்திடக் காணேன் தோழி
கசந்திடும் நினைவோ கவலைகள் மிகவோ -நீ
போய் கண்டு வந்து சொல்லடி
சுகம் பெறும் நாளைத் தினமும் நினைப்பேன் -அந்த
சுந்தரன் என்னிடம் வரவில்லை தோழி
சுற்றமும் சொந்தமும் சொல்வது கேலி --எனோ
உற்ற துணை எனக்கென்று யாரடி தோழி
கண்களால் அழைத்தார் கட்டியே அணைத்தார் -அன்று
ககனத்தில் பறந்து சென்றேன் நானே
பெண்களில் என்போல் பிதற்றிடல் உண்டோ -இதனை
நன்றாய் அறிவாயடி எனது நாயகன் வருவாரோடி
இரவென்றால் தொல்லை என் இளமையும் தொல்லை -இனி
எதிர்காலம் எனக்கு நல்லதோ தோழி
உறவினை மதித்தேன் ஊரினை எதிர்த்தேன் -நானுமவருடன்
ஒன்றெனக் கலந்து உலகினில் வாழ்வேனோ
உணவை மறந்தேன் உழன்று திரிந்தேன் -என்
ஊனில் கலந்த நல் உத்தமன் அவரே
கனவில் வருவதால் கண்ணீர் பெருகுது -அந்த
காமன் கணைகளோ இந்தக் கன்னியை வாட்டுது
நாட்டில் உள்ள நல்லவர் பேசுக -வெறும்
ஏட்டில் எழுதிடும் இன்பமா காதல் ?
வேட்டை யாடிட விருப்பமா சொல்வீர் -இன்றே
விரும்பிய பெண்களை விரைவீர் மணக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக