ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தில்லை சிதம்பரநாதன்391

தில்லையை  ஆண்டிடும் சிதம்பர நாதா -உனது 
திருவருளாலே  தேசத்தைக்  காக்க  வா 
உள்ளதென்பார்  இல்லை யென்பார் -உலகோர் 
ஒருநாள்  இந்த  உண்மையை  அறிவார்   (தில்லை )

ஆயகலைகள்  எனும்  அறுபதும்  நீயே -அம்மை 
பார்வதியின்  அருமைக்  கணவனே 
சேய்கள்  செய்யும் சிறு பிழை எல்லாம் -என்றும் 
சித்தமிறங்கி  சற்றுப்  பொறுத்தருள்வாயே  (தில்லை )

காலினைத்  தூக்கியே  ஆடிடும்  தெய்வமே -உனது 
கருணையைப்  போற்றி  நின் கழலடி  வணங்கினோம் 
வேளை  வருமோ  விடியல்  தருமோ -இந்த 
ஏழையர்  மீதிலே  உனது  இரக்கம்  படுமோ  (தில்லை)

தப்பாய்  ஆட்டம்  ஆடிடும்  தருக்கரை -நீயும் 
தரணியில்  அழித்தே  தர்மம்  செழிக்க  வா 
அப்பனே  உன்னருளில்  வாழுவோம் -இந்த 
அடியரை  மறந்திடில்  எங்குதான் போகுவோம் (தில்லை)

தில்லையை  மிஞ்சவே  ஒரு தேசமும்  இல்லை உனது 
திருவருள்  அன்றி  உயர் கதி  இல்லையே 
எல்லை யில்லா   சுகம்  தரும்  வடிவே -எங்கள் 
இதயங்கள்  குளிர்ந்திட  இன்றே  வருவாய்  (தில்லை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக