சனி, 28 ஏப்ரல், 2018

பொன்மகள் 390

கூடு விட்டு  தினம்  தினம்  வெளியினிலே -ஒரே
கூட்டமாய்  பறந்திடும்  பறவைகளே
வாடும்  என்கதை  கேளீரோ -காதில்
வாங்கியே  ஒருபதில்  சொல்வீரோ

தன்னந்  தனியாக  இருந்தேனே -அவளால்
தவறியே  சேற்றினில்  விழுந்தேனே
மின்னும்  அழகினை  நன்மையென -நான்
மீளாத  சிறையினில்  அகப்பட்டேன்

ஆசைத் தீயினை   தினமும்  வளர்க்கின்றாள் -என்னை
அடிமை   போலவே  நினைக்கின்றாள்
காசினைக்  கண்டதும்  சிரிக்கின்றாள் -எனோ
கவலைகள்  நிறையவே  தருகின்றாள்

உற்றார்  உறவுகள்  இழந்தேனே -எனது
உயிராய்  அவளையும்  நினைத்தேனே
மற்றவர்  முன்னே  தலைகுனிய -அந்த
மங்கை  எதற்கு  முடிவெடுத்தாள்

குற்றம்  எதுவும்  செய்யவில்லை -அவளிடம்
கொடிய   வார்த்தைகள்  பேசவில்லை
பற்று மிக  வைப்பது  பாவமெனில் -நான்
பார்த்து  ரசித்த்து  மோகமென்பேன்

என்னுடன்  வாழ்ந்திட  வைப்பீரே -இனியேனும்
இனிமையாய்  பழகிடச்  செய்வீரே
பொன்மகள் தன்னுடன்  என்வாழ்வு -அவள்
புரிந்திட  மறுத்தால்   பெரும்  தாழ்வு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக