வியாழன், 5 ஏப்ரல், 2018

கண்ணம்மா 330

ஆடி வரும்  மயிலே  -கண்ணம்மா 
எந்தன்  அழகு  நிறை  பெட்டகமே 
பாடி வரும்   குயில்  தான் -உனக்கு 
பருவக்   கதை   சொல்லியதோ 

தென்றலைத்  தூது  விட்டேன்  -கண்ணம்மா
திரும்பி   நீயும்   பார்க்கவில்லை 
ஒன்றுபட  நினைத்தேன்  -கண்ணம்மா 
உரிய  பதில்   நன்கு   சொல்லு 

 எட்டாப்  பெருங்கிளையில்  கண்ணம்மா 
நீ   எதற்கு  அமர்ந்து   கொண்டாய் 
தொட்டால்   சுடுவதென்ன  கண்ணம்மா 
கூடும்  சுகமது   எனக்கில்லையா 

ஆற்றங்  கரை தன்னிலே  -கண்ணம்மா 
அருகினில்   நீ  இருக்க 
நேற்று  கனவு    கண்டேன்  -கண்ணம்மா 
மனதில்   நிம்மதி   இல்லையடி 

முல்லைக்  கொடியோரம்  -கண்ணம்மா 
மோகன  முழு நிலவில் 
தொல்லைகள்   செய்ய  வந்தேன் -கண்ணம்மா 
என் தோளில்   சாய்ந்து   கொள்ளு 

ஏக்கப்   பெரு மூச்சு  கண்ணம்மா 
என்னை  இரவிலும்   வாட்டுதடி 
தூக்கம்  என்பதனை  மறந்தேன் -கண்ணம்மா 
பல்வகை  துன்பங்கள்  சூழ்ந்ததடி 

பார்க்கும்  இடங்கள்  எல்லாம்  -கண்ணம்மா 
பதிவது   உன்  முகமே 
என்னில்   கலப்பதற்கு  -கண்ணம்மா 
இளகும்    மனம்  இல்லையோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக