வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பிருந்தாவனம் 387

திரு நாள்  இதுபோல்  வருமோ தோழி -என்
திருமால்  அழகன்  வரும்  நாள் எதுவோ
கனி வாய்  சேர்த்து  கவிதை  சொன்னான் -நல்ல
கவனமாய் அணைத்து  கண்களை மறைத்தான்

தனியே  இருக்கையில்  தழுவிக்  கொன்டேன் -நான்
தவியாய்  தவிக்கையில்  தாவியே  இழுத்தான்
இனிமேல் எனக்கு  ஒரு பிறவியும்  வேண்டாம் -அவனது
இடப்புறம்  தனியே எனக்கிடம்  வேண்டும்

குழலினை  ஊதியே  கொள்ளை  அடித்தான் -ஒருநாள்--
குடையாய்  மலையினைக்  கொண்டே  தடுத்தான்
மழலையர் விரும்பிடும்  மகிழ்ச்சியே  கண்ணன் -திரு
மாலவன்  வேங்கடன்  மங்கள நாயகன்

இலக்குமி  தன்னையே  மார்பினில்  கொண்டான் -என்றும்
ஏழையர்  சுகம்பெற  இன்னருள்  புரிவான்
கலக்கம்  தீர்த்திட  இங்கே  கண்ணனும்  வருவான் -தமிழ்
கவிதையால்  துதித்தோம்  காத்திட  வருக

எண்ணம்  எதிலும்  எழிலாய்  திகழ்பவன் -வரும்
இன்னலைத்  தீர்ப்பதில்  இறைவனும்  அவனே
மண்ணினைக்  காத்திட  வந்திடு  கண்ணா -உந்தன்
மலரடி  தொழுதோம் எங்கள்  மாதவா   வருக

சங்கை  எடுத்தான்  தர்மம்  தழைக்க -அன்று
தன   கை  கொடுத்தான்  தங்கை  பிழைக்க
கங்கைக்  கரையினில்  அமைந்தது  பிருந்தாவனமே -கண்ணன்
காலடியில்  மயங்குது   எங்கள்  மனமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக