புதன், 25 ஏப்ரல், 2018

சண்முகன் 381

                              பல்லவி :
வந்தால்    வர ச்    சொல்லடி -தோழி
வடிவழகன்   முருகன்   வள்ளி மணாளன்   (வந்தால்)
                             அனுபல்லவி
புள்ளி மயில்  ஏறிவரும்   பொன்னிற   ரூபன் -இந்த
பூமியைக்    காத்திடும்    புண்ணிய   சீலன்  (வந்தால் )
                             சரணங்கள்
சூரனை   வதைத்திட்ட   எங்கள்  சுப்ரமண்யன் -குண
சுந்தரி   தெய்வ யானை   சுகம்  பெறும்   பாலன்
ஆறுமுகம்  கொண்ட   அமிழ்தினும்   இனியன் -தினம்
அடியவர்   தொழுதிட    நலம்  பெறுவார்   என்றே  (வந்தால்)

முத்தமிழ்   காத்திடும்    மூர்த்தியும்    அவனே -வரும்
மோக   இருள்    நீக்கும்    மோகனன்   அவனே
எத்திசையும்    போற்றும்    எங்களின்   பெருமானே -தூய
ஈசனார்    திருமகனே    ஏழைகள்    தலைவனே   (வந்தால்)

வேலினைக்   கொண்டே   வரும்  வினைகள்   தீர்ப்பான் -கொடும்
வெஞ்சமர்   களத்தினில்  வெற்றியே   குவிப்பான்
காலினில்   சிலம்பு   கொஞ்ச  நம் கந்தனும்   வருவான் -இளம்
கன்னி    எனைகூடியே   களிப்பினை   தருவான்  (வந்தால்)

மலையினில்   குடியிருக்கும்   திருமாலின்   மருகன் -வாடும்
மக்களின்   துயர்  நீக்கும்   பொக்கிசம்   குகனே
கலைகளின்    அதிபன்    கண்கவர்    முருகனே -நல்ல
கற்பகத்    தருவாய்    பல  அற்புதங்கள்    செய்பவன்  (வந்தால் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக