ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

மோகம் 324

கலைந்து    ஓடும்   மேகங்களே -என் 
கண்ணீர்   கதைதனை   கேளுங்களேன் 
அலைந்து  களைத்தன    என்விழிகள் -நான் 
அறியாமல்   போனது   நல்வழிகள் 

விளைந்த   நிலமாய்   நானிருக்க-தினம் 
வேண்டும்   அளவுக்கு   மழை  பொழிய 
தனித்த   மனத்திலோ   சாந்தியில்லை -என்னை 
தழுவி      அணைத்திட   துணையுமில்லை 

போனவர்   திரும்பிட   மனமுமில்லை -இந்த 
பொம்பளை   மனசும்   தெரியவில்லை 
ஆனது    போதுமென   ஓடிவிட்டார் -இங்கு 
அகப்பட்ட    நானோ    வாடிவிட்டேன் 

வயிற்றில்   புது உயிர்    வளர்ந்ததம்மா -ஊரார் 
வம்படி     பேச்சுகள்   வாட்டுதம்மா 
கயிற்றினில்   முடிக்க  லாமெனிலோ -பாழும் 
கருணையில்   மனமும்   தடுக்குதம்மா 

தண்டனை  என்பது   ஒருவருக்கா -இல்லை 
தழுவிய  இரண்டு   பேர்களுக்கா 
நிந்தனை   சொல்பவர்   திருந்திடுக -இதனை 
நினைத்து   நாளுமே   வருந்திடுக 

காதல்   என்பது   உண்மையெனில் -அந்த 
கடவுள்   தருவது   நன்மையெனில் 
கலங்கிய    என்முகம்  மலரட்டும் -எனது 
காதலர்   திருந்தியே   வரவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக