கலைந்து ஓடும் மேகங்களே -என்
கண்ணீர் கதைதனை கேளுங்களேன்
அலைந்து களைத்தன என்விழிகள் -நான்
அறியாமல் போனது நல்வழிகள்
விளைந்த நிலமாய் நானிருக்க-தினம்
வேண்டும் அளவுக்கு மழை பொழிய
தனித்த மனத்திலோ சாந்தியில்லை -என்னை
தழுவி அணைத்திட துணையுமில்லை
போனவர் திரும்பிட மனமுமில்லை -இந்த
பொம்பளை மனசும் தெரியவில்லை
ஆனது போதுமென ஓடிவிட்டார் -இங்கு
அகப்பட்ட நானோ வாடிவிட்டேன்
வயிற்றில் புது உயிர் வளர்ந்ததம்மா -ஊரார்
வம்படி பேச்சுகள் வாட்டுதம்மா
கயிற்றினில் முடிக்க லாமெனிலோ -பாழும்
கருணையில் மனமும் தடுக்குதம்மா
தண்டனை என்பது ஒருவருக்கா -இல்லை
தழுவிய இரண்டு பேர்களுக்கா
நிந்தனை சொல்பவர் திருந்திடுக -இதனை
நினைத்து நாளுமே வருந்திடுக
காதல் என்பது உண்மையெனில் -அந்த
கடவுள் தருவது நன்மையெனில்
கலங்கிய என்முகம் மலரட்டும் -எனது
காதலர் திருந்தியே வரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக