வேலினை நினைத்தேன் வெற்றி குவியுது -அவனை
விரும்பித் தொழுதேன் நன்மையே நடக்குது
பாலினைப் போன்ற பளிங்கு மனமே -எந்த
பக்தனும் தொழுதிடில் பரவசமாகும் அவன் குணமே (வேலினை )
அமுதமெனும் தமிழினை அள்ளியே குடிப்பான் -என்றும்
அடியவர் குறைகளை சொன்னதும் முடிப்பான்
குமுத மலர் போலக் குறுநகை புரிவான் -தன
கோல விழிகளாலே குவலயம் காப்பான் (வேலினை )
வள்ளியின் கணவன் வந்தாலே போதும் -நம்
வாசலில் செல்வங்கள் வரிசையாய் குவியும்
அள்ளிடக் குறையாத அமுத சுரபி -வாடும்
அடியவர் குணம் பெற அவனே கருவி (வேலினை )
அவ்வைக் கிழவியின் ஆருயிர் நண்பன் -தன்னை
அண்டியோர் மனதிலே ஆட்சி செய்பவன்
மண்ணகம் காத்திடும் மகிமையே சக்தி -புள்ளி
மயிலோன் அருள் தான் மனதிற்கு முக்தி (வேலினை )
சக்தியின் மகனென சரவணன் தோன்றினான் -அன்று
சமரினில் சூரனை யன்று சம்ஹாரம் செய்தான்
பக்தி மிகுந்தவர் பரம்பொருள் காணலாம் -நாளும்
பரமனின் மகனை நினைந்தவர் வாழலாம் (வேலினை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக