ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

குமுதம் 393

 வேலினை  நினைத்தேன்  வெற்றி  குவியுது -அவனை 
விரும்பித்  தொழுதேன்  நன்மையே  நடக்குது 
பாலினைப்  போன்ற  பளிங்கு  மனமே -எந்த 
பக்தனும்  தொழுதிடில் பரவசமாகும்  அவன்  குணமே (வேலினை )

அமுதமெனும்  தமிழினை  அள்ளியே  குடிப்பான் -என்றும் 
அடியவர்  குறைகளை  சொன்னதும்  முடிப்பான் 
குமுத மலர் போலக்  குறுநகை  புரிவான் -தன 
கோல விழிகளாலே   குவலயம்  காப்பான் (வேலினை )
வள்ளியின்  கணவன்  வந்தாலே  போதும் -நம் 
வாசலில்  செல்வங்கள்  வரிசையாய்  குவியும் 
அள்ளிடக்  குறையாத  அமுத   சுரபி -வாடும் 
அடியவர்  குணம் பெற  அவனே  கருவி   (வேலினை )

அவ்வைக்  கிழவியின்  ஆருயிர்  நண்பன் -தன்னை 
அண்டியோர்  மனதிலே  ஆட்சி  செய்பவன் 
மண்ணகம்  காத்திடும்  மகிமையே  சக்தி -புள்ளி 
மயிலோன்  அருள்  தான்  மனதிற்கு  முக்தி  (வேலினை )

சக்தியின்  மகனென சரவணன்  தோன்றினான் -அன்று 
சமரினில்   சூரனை யன்று  சம்ஹாரம்  செய்தான் 
பக்தி மிகுந்தவர்  பரம்பொருள்  காணலாம் -நாளும் 
பரமனின்  மகனை  நினைந்தவர்   வாழலாம் (வேலினை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக