திரு விளக்கு ஏற்றி வைத்தேன் -உலகில்
எந்தன் தெய்வம் நீயம்மா
தெண்டனிட்டு நான் வணங்குகிறேன் -என்னை
சற்று திரும்பி பாரம்மா
மாடு மனை சிறக்க வேண்டும் மங்கலமாக -இந்த
மண்டலமே செழித்து மகிழ்ச்சி என்றாக
நாடி வந்தோர் குறைகள் எல்லாம் தீர வேண்டுமே -இள
மங்கையர்கள் மகிழ மணம் முடிக்க வேண்டுமே
உழவர் இல்லம் உன்னதமாய் செழிக்க வேண்டுமே -வயலில்
உழைத்ததற்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமே
கலைகள் எல்லாம் நாட்டினிலே வளர வேண்டுமே -நீ
கண்ணசைத்தால் கவலை எல்லாம் பறந்து போகுமே
மங்கையர்கள் சமஉரிமை பெற்றிட வேண்டும் -பெண்கள்
மண வாழ்வில் மங்களமும் நிலைக்க வேண்டுமே
பொங்கு தமிழ் உலகமெலாம் ஆளவேண்டுமே -என்றும்
பூவுலகில் மும்மாரி பொழிந்திட வேண்டும்
வரம் தருவாய் என்று எண்ணி உன் வாசல் நிற்கிறேன் -உனது
வற்றாத கருணை எண்ணி மனமும் மகிழ்கிறேன்
திறந்திடுவாய் மனக்கதவை திரும்ப சொல்கிறேன் -இந்திய
தேசமதைக் காக்க வருக தினமும் அழைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக