வெள்ளி, 8 நவம்பர், 2013

ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் -211.

எனையாளும்  பெருமாளே   நீதானய்யா -உன்னை
 எந்நாளும்  துதிக்கின்ற  உயிர் தானையா
 நினைவோடு   வாழ்கின்ற  இப்பூமியில் -என்றும்
 நினையன்றி  யாருண்டு  எப்போதுமே    (எனையாளும் )

 மலர்களும்   தோட்டத்தில்  மலர்ந்தாடுது -உனது
 மலர்ப்பதம்  வேண்டியன்றோ   விழுந்தோடுது
 கலையாவும்   உன்னிடமே  குடிகொண்டது -நீ
 கதியென்று  வருவார்க்கு  நற்பலன்  கூடுது  (என்னையாளும் )

 சிலையான   கல்கூட  ஜீவன் பெற்றது -நீ
 சிரித்தாலே  முத்துக்கள்  சிறப்பானது
 நிலையாக   நின்றாயே  மலைமீதிலே - உனை
 நெஞ்சார   நினைத்தாலே  சுகமானது   (என்னையாளும் )

 அலைமேவும்  கடல்மீதில்   குடியேறினாய் -உனது
 அடியார்கள்   துயர்நீக்க  விரைவாகினாய்
 பிழையேதும்  செய்தேனோ  பொறுப்பாய்  ஐயா -இனி
 பின்னாளில்  உன்பாதம்   கிடப்பேன்   ஐயா   (என்னையாளும் )

 மதுராவை   அரசாளும்  மகராசனே -எல்லா
 மனங்களை   ஆள்கின்ற   எழில் வாசனே
 வினைதீர்க்க   வந்த     எங்கள் வேங்கடேசனே -நீ
 விரைந்தோடி  வருவாயே  இப்புவி காக்கவே   (எனையாளும் )

வியாழன், 7 நவம்பர், 2013

காதல்மலர் -210.

அலையாடும்  கடல்  மீது  சிறு படகாகினேன் -உன்
 அருள்வெள்ளம்  எனில் பாய்ந்து  தடுமாறினேன்
 கலையாத    மெருகொடும்   எழில்வன்னமே -நினைக்
 கண்டாலும்   எனிலூறும்  புது  வெள்ளமே

 நிலையாக  புதுவாழ்வு  நிதம்  காணலாம் -பிறர்
 நினையாத  செல்வங்கள்  நாம்  சேர்க்கலாம்
 விலைகேட்டு  வந்தோர்கள்  விரைந்து ஓடுவார் -இந்த
 விவரம்  அறிந்தாரோ  தடம்  மாறுவார்

 அழகிற்கே  அழகென்று  பெயர்  பெற்றவள் -நீ
 அமுதூட்டி  நலம்  சேர்க்கும்  விருந்தானவள்
 களைப்பினை  மாற்றும்  நல்ல  மருந்தானவள் -நான்
 கவிபாடத்  தமிழினில்  வெல்லப் பொருளானவள்

 பார்க்கின்ற  மனிதர்க்கு  கடும்பசி  ஊட்டுவாள் -காதல்
 பசியாற  வந்தோர்க்கு  துயர்   கூட்டுவாள்
 போர்க்கருவி  போலாகும்   பொன்மேடையே -இந்தப்
 புவிவெல்ல  நீ காட்டு  உந்தன்  கண்ஜாடையே

 வாழ்நாளும்  உன்கூட  நான்  வரவேண்டுமே -அந்த
 வற்றாத  தேனாறு   நிதம்  வேண்டுமே
 ஒருநாளில்  எனைத்  தேடி  நீயும்   வரலாகுமா -உன்
 இதயத்தில்   என்காதல்   மலர்  பூக்குமா  

புதன், 6 நவம்பர், 2013

சிரஞ்சீவி 209 .

நீரால்  மடிந்தவர்  எத்தனையோ -கள்ள
 நினைவால்  முடிந்தவர்  எத்தனையோ
 போரால்  மறைந்தவர்  எத்தனையோ -பிறர்
 பொருளால்  அழிந்தவர்  எத்தனையோ

 வாளால்  அழிந்தவர்  எத்தனையோ -இங்கு
 வாயால்   கெட்டவர்  எத்தனையோ
 கோளால்   குறைந்தவர்  எத்தனையோ -கெட்ட
 குணத்தால்  இழந்தவர்  எத்தனையோ

 இரவு   என்றுமே  நிலைப்பதில்லை -அந்த
 இயற்கை   நமக்கு   எதிரியில்லை
 உறவுக்காக  நாமும்  கைகொடுத்தால் -இனி
 உலகம்   நம்மிடம்  நெருங்கிவரும்

 களவு   செய்வது  கயமையடா -அதனை
 காண்பவர்   வெறுப்பது  உண்மையடா
 உளவு  சொல்வது   பெருங்கேடு -இதனை
 உணர்ந்து  நடந்திடு  அன்போடு

 கற்றதை  வாழ்வினில்  கடைப்பிடிப்பாய் -வரும்
 காலத்தை   எண்ணியே  முடிவெடுப்பாய்
 அற்புதம்   செய்திட நீ   நினைத்தால் -செல்வம்
 அனைத்தையும்   பிறர்க்கு  தந்துவிடு

 வந்தவர்  போகிற  காலமதில் -அவருடன்
 வருவது   அவர்செய்த  நல்வினையே
 சிந்தனை    வாசலைத்  திறந்துவிடு -இங்கு
 சிரஞ்சீவியாய்  உலகத்தில்   நிலைத்துவிடு 

நம்பிக்கை -208.

நம்பிடு   கைகளை   நம்பிடு -அது
 நம்பிக்கை  என்பதை  வளர்த்துவிடும்
 அம்பிகை  மனது   வைத்திடிலோ -இங்கு
 அனைத்தும்  நலமாய்  முடிந்துவிடும்

 பொன்னில்  ஆசையினைக்  கொள்ளாதே -பிறர்
 புகழ்ச்சியில்  தலைக் கனம்  பொல்லாதே
 பெண்களை   என்றுமே  இகழாதே -அது
 பெருமையை  அழித்திடும்  மறவாதே

 சூதும்   வாதும்  வேதனையே -வரும்
 சுகமும்   ஒருநாள்  சாதனையே
 போதும்  என்ற  மனம்  வேண்டும் -உலகை
 பொறுமையால்   வென்றிடும்  நிலைவேண்டும்

 வாதம்   செய்வதை  விட்டு விடு -நீ
 வானத்தின்  எல்லையைத்  தொட்டுவிடு
 தாயைப்  போற்றிடத்  தயங்காதே -வெறும்
 தாகத்தில்  என்றுமே  மயங்காதே

 இல்லை  என்பது  இல்லையடா --இதனை
 எண்ணியே  முயன்றால்  வெல்லுமடா
 தொல்லைகள்  கோடி  சூழ்ந்திடினும் -நாளும்
 தொடர்ந்து   உழைத்திடில்  வெற்றியடா 

செவ்வாய், 5 நவம்பர், 2013

கந்தவேல் 207

இறைவன்   பெருமை  தன்னையே -வானில் 
 எடுத்து   செல்லும்  பறவையே 
 உறைவிடம்  நோக்கி  செல்கையில் -இந்த 
 உண்மை   அறிதல்  நல்லதே 
 
 வானம்  பொழிந்த  மழையினால் -நம் 
 வயல்கள்  விளைச்சல்  காணுது 
 தானம்   பலரும்  செய்வதால்  -உலகில் 
 தர்மம்   நன்கு   நிலைக்குது 
 
 கரையைத்  தொடும்  அலைகளோ -நமக்கு 
 கடவுள்     கருணை யைச்   சொல்லுது 
 இரையைத்  தேடும்  மிருகமோ -அதன் 
 எதிரில்   வந்தால்   கொல்லுது 
 
 நாளை   இரவு   தேடுது -இங்கு 
 நன்மை   தீமை  உள்ளது 
 சோலை   மலர்கள்   சிரிக்குது -வீணில் 
 சோம்பல்   மனத்தைக்  கெடுக்குது 
 
 உழைக்கும்  வியர்வை  உயர்ந்தது -என்றும் 
 உண்மை   ஒன்றே    வெல்லுது 
 களைப்பவர்க்கு    நீயும்  கைகொடு -உனது 
 கையை  நம்பி  உழைத்திடு 
 
 வந்த  மனிதர்   போகலாம் -ஏன் 
 வாழ்வின்  பாதையும்  மாறலாம் 
 கந்தவேலை  நினைக்கும்  மாந்தரும் -மண்ணில் 
 கவலைகள்   நீங்கியே   வாழலாம் 

திங்கள், 4 நவம்பர், 2013

அழகோவியம் -206 .

மலைமீதில்  வசிக்கின்ற  மாதவா -உன்னை
 மனதார   நினைத்தாலே  வளம்  சேருமே
 அலைபாயும்  கடல்மீது  வாழ்கிறாய் -நினது
 அடியார்கள்  மனவீட்டில்  ஆள்கிறாய்

 நிலையாக  நிற்பது     எழில் கோலமே -தினம்
 நெஞ்சாரத்   துதித்தாலே  சுகமாகுமே
 கலையாவும்  குடிகொண்ட  அழகோவியம் -உன்னை
 கண்டாலே  உருவாகும்  பலகாவியம்

 திருமகள்  உறைமார்பும்  உனதல்லவா -திவ்ய
 திருநாமம்  வெற்றிக்கு  வழியல்லவா
 ஒருநாளும்  மறவாமல்  உனைப் பாடுவோம் -உனது
 ஒப்பற்ற   புகழ் சொல்லி   நாம் ஆடுவோம்

 அவதாரம்  பலதந்த   அருளாளன் நீ -என்றும்
 அடியாரைக்   காக்கின்ற  அமுதமும நீ
 புவனங்கள்    உன்சொல்லுக்  கிசைவாகுமே -இங்கு
 புண்ணியம்  உன்வாசலில்  தவமாகுமே

 காக்கின்ற   உனைத்தேடிக்  கரையேறலாம் -உன்
 கண்பட்டால்  பாவங்கள்  கரைந்தோடலாம்
 பாரதப்  போர்  வென்ற  பரந்தாமனே -உலகில்
 பக்தரைக்   காப்பதுன்  திருநாமமே

 திருமாலே  பெருமாளே  நீ தேனானவன் -மண்ணில்
 திக்கற்ற    பல பேருக்குத்   தாயானவன்
 வரவேண்டும்  புவிமீதில்   திருநாளிலே -எங்கும்
 வழிந்தோடும்  இன்பங்கள்  அப்போதிலே 

சனி, 2 நவம்பர், 2013

பொற்சிலை -205.

உன்னை   நினைக்கையிலே -கண்ணம்மா
 உள்ளம்  கள்ளமாய்ப்  போனதடி
 பொன்னை  உருக்கிய  பொற்சிலையே -அன்பு
 பொங்கிடும்  காதல்  பூந்தளிரே    (உன்னை)

 என்னை மறந்து  நானும்  தவிப்பதென்ன -என்
 இதயத்தில்   பூமழை  பொழிவதென்ன
 எண்ணத்தில்  நிறைந்து  இருப்பதென்ன -நீ
 இன்னமும்  ஏனென்னை  வெருப்பதென்ன

 இரவு  நேரத்தில்   அமைதியில்லை -என்
 இருவிழி  ஏனென்றும்  உறங்கவில்லை
 சிறகு   இழந்த    பறவையென  - நான்
 சித்தம்   கலங்கித்  தவிப்பதென்ன

  வாலை   வயதுக்  குமரியடி -உன்னை
 வாரி  அணைத்திட  ஆசையடி
 நாளை  எண்ணிநீ   தள்ளுவதோ -என்
 நாயகி   நீயென்னைக்  கொல்லுவதோ

 காலம்  வருமெனக்   காத்திருந்தேன் -என்
 கண்மணி  உன்முகம்  பார்த்திருந்தேன்
 வேளை   வருவதும்  தெரியவில்லை -எனக்கு
 விடிவது   எப்படி  புரியவில்லை

 நெஞ்சில்  நினைவு  உள்ளவரை -உன்னை
 நித்தம்  நானும்  நினைத்திருப்பேன்
 கெஞ்சும்  அழுகுரல்  கேட்கலையோ -எனது
 கேள்விக்கு  உன்னிடம்  பதிலிலையோ 

வெள்ளி, 1 நவம்பர், 2013

வேலும் மயிலும் 204.

நேரில்  நடந்ததோ -என்
 நினைவில்  மலர்ந்தது
 நினைவில்  வந்ததோ -நம்
 நெஞ்சில்   வளர்ந்தது

 கூட்டில்  வளர்ந்ததோ -இங்கு
 குடியாய்  பிறந்தது
 ஏட்டில்  உள்ளது -சிலர்க்கு
 எழுத்தாய்  தெரிந்தது

 நாட்டில்  உள்ளவை -மண்ணில்
 நமக்காய்   ஆனது
 பாட்டில்  உள்ளது -நல்ல
 பதமாய்  தோன்றுது

 நீரின்   அடியிலே -நல்ல
 நிலமும்  உள்ளது
 நேசம்  உள்ளதே -பின்பு
 பாசம்   ஆனது

 வாய்மை  வழியிலே -நமது
 வாழ்வும்   அமைவது
 தாய்மை   வழிதான் -உலகில்
 தர்மவழி   ஆனது

 நாளும்  கோளும் -நமக்கு
 நன்மை   தருவது
 வேலும் மயிலுமே -என்றும்
 வெற்றி   தருவது 

வியாழன், 31 அக்டோபர், 2013

விருந்து 203.

கன்ன    கரு குயில் -நம்
 காதல்  இள மயில்
 பின்னி  எடுத்தாளடி -அதனை
 பேச  மறுததா ளடி

 மாலை  நேரத்தில் -நல்ல
 மல்லிகை  வாசத்தில்
 ஆளைக்  கவர்ந்தாளடி -கிளியே
 அசந்து  போனேனடி

 கொட்டும்  பனியினில் -கடும்
 கூதல்   காற்றினில்
 கட்டிப்  பிடிப்பாளோடி -கிளியே
 கண்டு  மகிழ்வேனோடி

 வாலைப்  பருவத்தில் -அவளுக்கு
 வந்த  மயக்கத்தில்
 சேலை  கலைந்ததென்ன -கிளியே
 செம்மை  படர்ந்ததென்ன

 ஆற்று  மணலினில் -இரவில்
 ஆடிக்   களைத்தவள்
 தோற்றுப்  போவாளோடி -கிளியே
 தேற்றும்   நிலைபாரடி

 விருந்து  கொடுத்தவள் -இன்னும்
 விடியத்   திளைத்தவள்
 திரும்பி  வருவாளோடி -கிளியே
 தேடிநீ    அறிவாயடி 

முன்னேற்றம் -202.

வண்ண    நிலவினில் -நல
 வானத்  தழகுகள்
 என்னை   அழைக்குதடி -மனம்
 எங்கோ  இழுக்குதடி

 நீலப்   பட்டாடையில் -அந்த
 நிலவுப்   பெண்ணவள்
 கோல   அழகியடி -அவளைக்
 கொஞ்சத்  துடிக்குதடி

 சலசலவெனத்  சப்தமிட்டு -மழைச்
 சாரலும்  பெய்யுதடி
 சஞ்சலம்   மீறுதடி  -ஒரு
 சங்கமம்  தேடுதடி

 கூவும்      குயில் ஓசை -கேட்க
 கொள்ளை  இனிமையடி
 கொஞ்சும்  தமிழோசை -நம்
 நெஞ்சை   அள்ளுதடி

 வாழப்   பிறந்தவர் -மண்ணில்
 வாழ  வகையின்றி
 வாயில்லா  ஊமையானார் -நாளும்
 வறுமையில்   வாடலானார்

 வறுமைகள்  தீர்ந்திட -இங்கு
 வளம் பெற்று   வாழ்ந்திட
 வழிவகையினைக்  காண்போம் -அவர்
 வாழ்ந்திட  வைத்திடுவோம் 

புதன், 30 அக்டோபர், 2013

குழந்தை -201.

கன்னத்தில்   குழி -நமைக்
 காணும்    இருவிழி
 எண்ணிடப்  புதுமையடி -அட
 என்ன   மகிழ்ச்சியடி

 முத்துச   சிரிப்பினில் -அதில்
 மூளும்    எழிலினில்
 பித்துப்   பிடித்ததுவே -புது
 பிரேமையும்  கூடியதே

 கத்தும்   குரலோசை -நம்
 காதில்  குழலோசை
 கானம்  ஆனதுவே -வரும்
 காலம்  மறந்ததுவே

 தத்தும்  தளர்நடை -இங்கு
 தாவி   விழுவதும்
 நித்தம்  புதுமையன்றோ -என்றும்
 நினைக்க   இனிமையன்றோ

 பட்டுத்  தளிர்மேனி -அதனை
 தொட்டு   இழுக்கையில்
 பரவசம்   எறிடுமே -நெஞ்சில்
 பாசம்   ஊறிடுமே

 இந்த   நினைவுகள் -இனிய
 இளமைக்  கனவுகள்
 எங்கள்   குழந்தையம்மா -அது
 இறைவன்   கருணையம்மா 

செவ்வாய், 29 அக்டோபர், 2013

வாயுபுத்திரர் -200 .

வாயுவின்  புத்திரர்  -நல 
 வளர்களைத்  தூயவர் 
 பாயும்   புலியவர் -தம் 
 பக்தரைக்  காப்பவர் 
 
 இராமனின்  சேவகர் -அன்று 
 இலன்கைக்குச்  சென்றவர் 
 சீதைக்கும்  தூதுவர்  -உலகில் 
 சிரஞ்சீவி   ஆனவர் 
 
 அனுமனெனும்   பேரிலே -இந்த 
 அவனியில்     ஆள்பவர் 
 அனுதினம்  தொழுபவர் -தம் 
 அவதியைத்  தீர்ப்பவர் 
 
 இராவணன்  செருக்கினை -நேரில் 
 எதிர்த்துமே  வென்றவர் 
 இலங்கையை  தீயினால் -முற்றும் 
 எரித்துமே  மகிழ்ந்தவர் 
 
 ராமநாமம்  சொல்லுமிடத்திலே -அங்கு 
 அனுமன்வருகை  ஆவது நிச்சயம் 
 வீரமளிப்பவர்  வெற்றிதருபவர் -காணில் 
 யாருண்டுலகில்  அனுமனைப் போலே 

நல்லது 199.

இரவினில்   ஆடி
 இன்பத்தைத்   தேடி
 உறவினை   இழந்தனரே -சிலர்
 ஊமைகள்     ஆனாரே

 வரவுகள்  குறைந்து
 செலவுகள்  கூடிட
 வறுமையில்  ஆழ்ந்தனரே -ஏனோ
 வகைஇன்றிப்  போயினரே

 ஏய்த்துப்   பிழைத்து
 எல்லோரையும்   வதைத்து
 நாளைக்  கழித்தனரே -முடிவில்
 நாசம்  அடைந்தனரே

 கொள்ளைகள்   செய்து -பல
 குடும்பத்தைக்  கெடுத்து
 வல்லமை  காட்டினாரே -மண்ணில்
 வாழ்வின்றிப்  போயினரே

 இறைவன்  ஒருவன்  -உலகில்
 இருப்பதை  மறந்து
 எல்லாமே  தானென்றார் -எங்கோ
 பறந்து   விட்டார்

 ஆட்டம்  போட்டவர் -இங்கே
 சேட்டைகள்  செய்தவர்
 அழிந்து   போவாரே -இதனை
 அறிந்திடல்  நன்மையன்றோ 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தில்லை நடராஜர் 197.

                            பல்லவி :

      நடனம்   ஆடுகிறார் -வெகு
 நாகரிகமாய்   நயமுடன்  தில்லையில்  (நடனம்)

                        அநுபல்லவி

 உடனுடன்  தாளமொடு   இசைமுழங்க -இந்த
 உலகினர்   கண்டதும்  மதிமயங்க  (நடனம்)

                       சரணங்கள்

 1.காலினை   மாற்றியே  ஆடுகிறார் - அந்தக்
 கனக சபையில்   கச்சிதமாகவே   நித்தியமூர்த்தி
 வேலினை  வென்றிடும்   விழியழகு -பிறர்
 வேதனை  தீர்ப்பதில்  தனியழகு     (நடனம்  )

 2.ஆலின்   அடியிலே  அமர்ந்தவராம் -தன
 அடியவர்   மனக்குறை  தீர்ப்பவராம்
 நூலின்   நுண்பொருள்  உரைப்பவராம் -இங்கு
 நுண்ணிய  கலைகளின்  வடிவினராய்  (நடனம்)

 3.நந்தியின்   மத்தள  ஓசையிலே -இந்த
 நானிலம்   மயங்குமே  ஆசையிலே
 எண்டிசை  எங்கிலும்  இசைமயமே -நம்
 எல்லோர்  மனதிலும்  இறைமயமே  (நடனம்)

கதிகாமன் -196.

                              பல்லவி

வடிவேலன்  வருவாரோடி -சகியே
 வள்ளலை  நினைத்து  வணங்கினால்   (வடிவேலன்)

                       அநுபல்லவி :

 படியேறி   வருவோர்க்கு  விருந்தானவன் -பிறர்
 பாவங்கள்   தீர்க்கின்ற  மருந்தானவன்  (வடிவேலன் }

                        சரணங்கள்

  1. கனிக்காக   சினம்கொண்டு  மலையேறினார் -தமிழ்க்
 கனியாக  உருமாறி  நமை  யாள்கிறார்
 இனிதாக   குருநாதன்  புகழ்  பாடலாம் -நமது
 இதயத்தில்   குடியேற  அவர்   நாடலாம்   (வடிவேலன்)

 2.அசுரர் படை  அழிக்கவந்த  அமரேசனே -அவர்
 அடியாரைக்   காத்து நிற்கும்  குமரேசனே
 சிவனாரை  மகிழ்விக்கும்  சிவநேசனே -நீதி
 சிறப்பாக  காக்கின்ற  விசுவாசனே

 3.மலைதொறும்  குடியேறும்  மணவாளனே -நம்
 மனவாசை    தீர்க்கின்ற   மதிரூபனே
 கலையாவும்   குடிகொண்ட  கந்தவேலனே -என்றும்
 கருணைக்குப்  பெயர்பெற்ற  கதிர்காமனே (வடிவேலன் )

வெள்ளி, 25 அக்டோபர், 2013

யார் யார் ....?-195

வானதது  சேலையில்
 வர்ண  நிறங்களை 
 வாரி   இறைத்தது  யார்

 மோனத்து  சூழலில்
 மூளும்   கடலினில் 
 முத்துக்கள்  வளர்த்தவர்  யார்

 வெட்ட    வெளியினில்  
 வட்ட  நிலவிற்கு 
 வெளிச்சம்  தந்தது  யார்

 தொட்டுத்  தொடர்ந்திடும் 
 தோகை    மலருக்கு 
 சொகுசினைத்  தந்தது  யார்

 மேனியைத்  தழுவிடும் 
 மெல்லிய  காற்றுக்கும் 
 கானம்  உரைத்தவர்  யார்

 ஏறியே   பாய்ந்திடும் 
 எண்ணிலா  அலைகளை 
 இயக்கி  வைப்பவர் யார்

 கத்தும்   கடலிற்கு 
 காலம்  முழுதிற்கும் 
 கர்ஜிக்க  வைத்தது  யார்

 கொட்டும்  மழையோடு 
 குளிரையும்  சேர்த்து 
 கொடுத்து  விடுபவர்  யார்

 மீனிற்கு  நீச்சலும் 
 மிருகத்தின்  பாய்ச்சலும் 
 மேவிடச்   செய்ததுயார்

 உலகிற்கு  நீதியும் 
 உண்மைக்குள்  ஜோதியும் 
 உலவிட  விட்டவர் யார்

 கல்லுக்குள்  தேரையும் 
 கரும்புக்குள்  இனிப்பையும் 
 கருத்தாய்  அமைத்தவர்  யார்

 புல்லுக்குள்  நீரையும் 
 பொருளின்  மேலாசையும் 
 பொங்கிட  வைத்தவர்  யார்

திங்களை  நிலவை 
 தீதில்லா  விண்மீன்களை 
 மகிழ்வுடன்  தந்தது  யார்

 மாந்தர்கள்  அனைவரும் 
 மண்ணிலே  சுகம் பெற 
 மனதில்  நினைப்பவர் யார்

 வேண்டுதல்  கேட்டதும் 
 விரைந்தங்கே  வந்துமே 
 வினைகளைத்  தீர்ப்பது யார்

 இரவிற்குப்  பகலையும் 
 பகலுக்குள்  இரவையும் 
 இணைத்து  வைப்பது  யார்

 நீருக்குள்  நிலத்தையும் 
 நிலத்தினுள்  நீரையும் 
 நேர்மைப் படுத்துவது யார்

 உடலுக்குள்  உயிரையும் 
 உயிராகும்  கருவையும் 
 ஒற்றுமைப்  படுத்துவது யார்

 வேருக்குள்  நீரையும் 
 வெம்மணல்  வெப்பமும் 
 வியந்திட  வைப்பது யார்

 நன்மைக்கு  தீமையும் 
 நலத்தையும்  கேட்டையும் 
 நயம்பட  வைப்பது  யார்

 இத்தனை மாற்றங்கள் 
 இங்கே  செய்வது 
 இறைவனின்  திருவருளே

 மறையவனின்  திருப்பாதம் 
 மனதினில்  நினைந்திடில் 
 மங்கலம்  பொங்கிடுமே

 இங்கிவன்  பெருமையை 
 இப்படி  இயம்பிட 
 எளியேனைப்  படைத்தாரோ  

வியாழன், 24 அக்டோபர், 2013

கிளியே 194.

விண்ணில்  நிலவொளி -அந்த
மேக   மழைத் துளி
 கண்ணைப்  பறித்ததுவே -அது
 மண்ணை  நனைத்ததுவே

 பொன்னைத்  தேடிடும்  -இந்தப்
 பொல்லாங்கு  மாந்தர்கள்
 தன்னை  மறந்தனரே -நல்ல
 தன்மை  துறந்தனரே

 கோடி   குவித்தவர்  -தினம்
 கொள்ளை  யடித்தவர்
 பேடிகள்  ஆயினரே -கிளியே
 ஒடியே    போயினரே

 பொய்யை  தினம் பேசி -இங்கு
 புரட்டுக்  காரர்கள்
 ஐயம்  அடைந்தனரே -கிளியே
 அன்பைத்  துறந்தனரே

 கண்ணால்  கதை பேசி -வரும்
 காசைப்  பறித்தவர்
 தன்னால்  அழிந்தனரே -கிளியே
 தர்மம்  மறந்தனரே

 வாரிக்  குவித்ததை -பிறர்க்கு
 வழங்க  மறுத்தவர்
 வாழ்வை   இழந்தனரே -கிளியே
 வற்றி  மடிந்தனரே

 ஊருக்கு  உழைத்தவர் -என்றும்
 உண்மை  பேசுவோர்
 பேருக்குள்  பேறு  பெற்றார் -கிளிடே
 பெருமை  யடைந்தனரே

 கல்வியைக்  காசிற்கு -நன்கு
கச்சிதமாய்  விற்போர்
 புல்லினும்  கீழாவார் -கிளியே
 புதைக்கப்  படுவாரடி

 நன்றி  மறந்தவர் -மனதில்
 நஞ்சினைக்  கொண்டவர்
 சென்று  ஒளிவாரடி -கிளியே
 செத்துத்  தொலைவாரடி

 பெண்ணால்  பிறந்தவர் -பின்பு
 பெண்ணைப் பழித்தவர்
 கண்ணை  இழந்தனரே -கிளியே
 கதியின்றிப்  போவாரடி 

புதன், 23 அக்டோபர், 2013

நீலக் கருவிழி -193.

நீலக்  கருவிழி
 நெஞ்சின்  அலைகளில்
 நீந்தத் திரியுதடி

 கோலக்  குறுநகை
 கொஞ்சும்  இதழ்களில்
 குலவி  மகிழுதடி

 வட்ட  நிலவொளி
 சுட்டு  எரிக்கையில்
 வாலிபம்  மீறுதடி

 கட்டில்  அறைகளில்
 களவுத்  தொழில்களோ
 கவனத்தை  இழுக்குதடி

 விட்டில்  பூச்சிகள்
 வெளிச்சம்  தாங்கியே
 விடியக்   காவலடி

 தொட்டில்  குழந்தைகள்
 தூங்கிட  வழியின்றி
 சோம்பிக்  கிடக்குதடி

 நட்ட   நடுநிசியிலும்
 நல்ல  மனிதர்கள்
 நாடகம்   ஆடுகிறார்

 துட்டுகளை  எண்ணி
 தூக்கி   வைப்பவர்
 தூக்கத்தைத்  தேடுகிறார்

 கொட்டும்  மழையிலும்
 குளிரின்  நடுக்கத்தில்
 குடும்பம்  நடத்துகிறார்

 வெட்ட  வெளியிலும்
 விண்ணின்  அழகுகள்
 கொட்டிக்  கிடக்குதடி

 தொட்டுச்  சுவைத்திட
 துணையினைத்  தேடியே
 சிட்டுப்  பறக்குதடி

 கண்ணைப்  பறித்திடும்
 வண்ண  விளக்குகள்
 காணக்  கொடுமையடி

 எண்ணெய்   தலைக்கின்றி
 ஏழை    சிறுவர்கள்
 எத்தனை  கோடியடி

 கோடி  கொடுத்தாலும்
 குணமிகு  நல்லோர்கள்
 கொள்கை  மாறாரடி

 ஆட  நினைத்தவர்
 ஆட்டிப்  படைத்தவர்
 அடக்கம்  ஆவாரடி


 நாடி   வந்தோர்க்கு
 நன்மைகள்  செய்வோர்கள்
 நாட்டில்  ஒருசிலரே 

புல்லாங்குழல் -192.

காற்றில்  ஆடும்  மலர்களே -என்
 கண்ணன்  போனதை  அறிவீரோ
 நேற்று  எங்கயோ  போனவன் -அந்த
 நிர்மலன்  என்னதான்  ஆனான்

 ஒருநாள்  திருநாள்  மணநாள் -அவன்
 உறவைப்  பெற்றிட்ட  பெருநாள்
 மறுநாள்  மாயமாய்  போனான் -அந்த
 மாதவன்   இன்னமும்  காணோம்

 காதல்   கலைகளைக்  கற்கவே -எனக்கு
 கண்ணனே  கணவனாய்க்  கிடைத்தான்
 மோதல்  என்னிடம்  ஏதுமில்லை -அவனால்
 மூண்டது  பிரிவெனும்   காதல் தொல்லை

 வானில்  தெரிவது  மேகம் -ஏனோ
 வாடி  வதங்குது  என் தேகம்
 காணில்   அவனிடம்  சொல்லுங்கள் -இந்த
 காரிகை   படுகின்ற  பாட்டை

  புல்லாங் குழலிசை  கேட்டேன் -வண்ணப்
 புதுமலர்  அழகினை  ரசித்தேன்
 எல்லா  நூல்களைப்  படித்தேன் -என்
 இருவிழிக் கண்ணீரையும்  வடித்தேன்

 ஒருநாள்  என்னிடம்  வருவான் -நான்
 உள்ளவை  அனைத்தையும்  தருவேன்
 புதுநாள்   வருமோ  அந்நாள் -அதுவரை
 பொறுத்திட  முடியுமோ  என்னால் 

இயற்கை

அழகிய  புது  மலர்  ஒன்று -ஏனோ 
 ஆசையில்  துடித்த்து  அன்று 
 பழகிட  வேண்டும்  என்று -அது 
 பாசத்தி ல்  நினைப்பது நன்று 
 
 நிலவினில்  அழகுகள்  தெரியும் -அதனை 
 நினைத்திட  ஆசைகள்  விரியும் 
 களவுக்கு  ஏதம்மா  எல்லை -மனிதர் 
 காதலும்  மனதிற்கு  தொல்லை 
 
 மலரினை  வண்டுகள்  நாடும் -அதில் 
 மதுவினைத்  தேடியே  பாடும் 
 களவுகள்  இரவிலே  நடக்கும் -ஓடும் 
 காலங்கள்   இதனையும்  கடக்கும் 
 
 சில்லென  வீசிடும்  காற்று -தானும் 
 சிரித்து  ஆடுதுபார்  நாற்று 
 நில்லெனச்  சொன்னேன்  நேற்று -சற்றே 
 நிற்குமோ  என்னிடம்  காற்று 
 
 உண்டவர்  கொஞ்சம்  அயர்வார் -நாளும் 
 உழைத்தவர்  ஒருநாள்  உயர்வார் 
 கண்டது  கேட்பது   உலகம் -நீ 
 கவனத்தை  இழந்தால்  கலகம் 
 
 இருத்ததை  நடப்பதைச்  சொல்வேன் -என்றும் 
 இயற்கை   ரசிப்பினைக்  கொள்வேன் 
 விருந்தெனக்  கண்களில்  காட்சி -நம்மை 
 விட்டுவிலகுமோ  இறைவனின்   ஆட்சி 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

muthukkal-190.

அற்புத  அழகினைக்  கண்டேன் -அவள்
 அழகினை  அள்ளியே  உண்டேன்
 கற்பனை  செய்திடில்  காவியம் -நல்ல
 கலைஞன்  கைவண்ண  ஓவியம்

 காமனின்  துணைவி  ரதியாகும் -உன்னைக்
 காண்பவர்  தோற்பது  விதியாகும்
 நாலடி  நடந்திட  நாடகமாம் -அந்த
 நங்கை  உடலோ   பொன்  ஆடகமாம்

 விழிகள்  சுலன்றிடப்  பொர்க்களமே -எனது
 வெற்றி  உன்னிடம்  அடைக்கலமே
 இனியும்  ஏனடி  தாமதம் -நீ
 எது செய்தாலும்  எனக்கினி  சம்மதம்

 இருப்பதை  உனக்கே  தருகிறேன் -இனி
 எழிலே  அருகிலே  வருகிறேன்
 பொறுப்பினை  உணர்ந்து  முடிவெடுப்பாய் -எனது
 பொறுமையை   மதித்து  பிடிகொடுப்பாய்

 வாழ்ந்தால்  உன்னுடன்  வாழ்ந்திடுவேன் -நீ
 வரவில்லை  என்றால்  மாய்ந்திடுவேன்
 தாழ்வும்  வாழ்வும்  உன்மடியில் -அடி
 தங்கமே  நானுனது  கைப்பிடியில்

 இத்தனை சொன்னது  போதாதோ -என்
 இருவிழி  அழுவது  தெரியாதோ
 சித்திரை  மாதத்தின்  முழு நிலவே -நீ
 சிரித்தால்  உதிர்வது  நல்முத்துக்களே 

kudumbam-189.

கனியிதழ்  ஊறுது  கற்கண்டோ -உனைக்
 கலந்திட  அமுதினில்  ருசிஉண்டோ
 இருவிழி  வாசலில்  வரவேண்டும் -அதற்கு
 இணையென  நானென்ன  தரவேண்டும்

 முனிவரும்  மயங்கிடும்  முன்னழகு -என்
 முப்படை  தோற்றிடும் பின்னழகு
 இனியிவள்  ஒன்றே  பேரழகு -உன்
 இதயத்தில்  கனிவுடன்  நீபழ்கு

 வேல்முனை  மழுங்கிடும்  உன்விழிகளிலே -நான்
 விரகத்தில்  துடிப்பது  என்விதியே
 பால்மணம்  மாறிடாப்  பதுமையடி -உன்னைப்
 பார்ப்பது  எனக்கென்றும்  புதுமையடி

 நாளென்ன  பொழுதென்ன  நம்மிடையே -இனி
 நலம்பெற  வாழ்தல்  வெளிப்படையே
 நால்வகைக்  குணமுள்ள  நங்கையடி -என்னை
 நாயகன்  ஆக்கிடும்  புனித கங்கையாடி

 வானத்தில்  ஜோடியாய்  வலம்வருவோம் -நம்
 வாழ்வினில்  வசந்தத்தை  ரசித்திடுவோம்
 மானத்தை   பெரிதென  மதித்திடுவோம் -இந்த
 மண்ணிலே  சொர்க்கத்தை  படைத்திடுவோம்

 ஈருடல்   ஒருவராய்  வாழ்ந்திடுவோம் -என்றும்
 இன்பத்தில்  துன்பத்தில்  பங்கெடுப்போம்
 சீர்பெற  சிந்தித்து  முடிவெடுப்போம் -இங்கு
 சிறந்த  குடும்பமாய் வடிவெடுப்பொம் 

kudip pazhakkam -188.

தில்லாலங்கடி  தில்லாலங்கடி
 தில்லாலங்கடியோ  அடி  தில்லாலங்கடியோ
 இரவு எது  பகலும் எது  எனக்குப்  புரியலே -நான்
 இரண்டு  நாளா  குடிச்சும்கூட  இன்னும் ஏறலே

 அவள் :
 கண்ணை  மூடி  சும்மாநீ  கிடந்து  தூங்கணும் --நீ
 காசு  வந்தா  பத்திரமா  சேத்து  வைக்கணும்
 பொண்ணை  ஏன்னா  கேவலமா  நீயும்  நினைக்கிறே -நான்
 போட்டேன்னா  பொழைக்க மாட்டே  புரிந்து  நடந்துக்கோ

 அவன் :
 என்காசில்  குடிக்கிறேன்  என்னடி நீ  மிரட்டுறே -கொஞ்சம்
 ஒழுங்கா  இருந்தா  உதை  விழாது  தெரிஞ்சுக்கோ
 தலையும்  உடம்பும்  சும்மா  தானே  ஆடும் -அப்போ
 தாளம்  கூடவே சேர்ந்து  தப்பாய்   போகும்
 அவள்:
 குடிச்சுக் குடிச்சு உனக்குத்தானே  குடலும்  வெந்தது -நம்ம
 குடும்பம்  போற  போக்கிலே என்குலையும்  நடுங்குது
 எடுத்து எடுத்து  குடிச்ச்சதாலே   எலுமபும்  தெர்யுது -நா
 எவ்வளவோ சொன்னபோதும்  எங்கே  ஏறுது
 அவன் :
 எனக்கு ஏறும் போதை கூட உனக்கெங்கே  விளங்குது -என்
 இளவயசில் வந்த  பழக்கம்  விட்டு  எங்கே  போகுது
 கணக்கில்லாமே  குடிச்ச்சதாலே  நமக்கு  கடனும்  ஆனது -என்
 கண்ணாட்டி  உன்னைநினைச்சா எனக்கு கண்ணும்  கலங்குது
 அவள்:
 நமக்குப்  பிள்ளை குட்டி  அதிகம்  ஆச்சு -நமக்கு
 இங்கே  பெரிய  குடும்பம்  ஆகிப்  போச்சு
 நா சொல்லுறதை  கவனமா நீ  காதில்  வாங்கிக்கோ -நமது
 குடியைக்  கெடுக்கும் குடியை மறந்து திருந்தப் பார்த்துக்கோ
 அவன்:
 மனைவிசொன்ன  மந்திரமும்  என்மனசில் பட்டது -நான்
 மாபாவி என்னால் தானே நம்ம  மதிப்பு  கேட்டது
 இனியுமிந்த குடிபழக்கம் நானும் மறந்து  வாழுவேன் -நல்ல
 இந்தியனாய்  உலகினிலே இனியென்றும்  விளங்குவேன்

திங்கள், 21 அக்டோபர், 2013

tamilth deivam-187.

குன்றிலாடும்   குமரனை
 குறவள்ளி  நாதனை
 மன்றாடித்  துதிப்பவர்
 மகிழ்வினைக்  காணலாம்

 கனிக்காக   அன்றுமே
 கடுங்கோபம்  கொண்டவன்
 தனியாகப்  பழனியில்
 தங்கமாய்   ஜொலிப்பவன்

 பழ்நிஎனும்  தலமதில்
 பக்தர்களைக்  காப்பவன்
 கழனி வாழ்  உழவர்க்கும்
 நற்கதியை  தருபவன்

 வடிவேலைத்  தாங்கியே
 வரங்களை அளிப்பவன்
 அடியாரின்  குறைகளை
 அன்போடு   தீர்ப்பவன்

 தனியாக  நின்றவன்
 தமிழ்த்   தெய்வமானவன்
 இனிதான  முருகனை
 எந்நாளும்  போற்றுவோம் 

enakkup pidikkum -186.enakkup pidikkum

எனக்குப்  பிடிக்கும் -இதுவே
 எனக்குப்  பிடிக்கும்
 ஈரமுள்ள  மண்ணில்  நடக்க
 எனக்குப் பிடிக்கும்

 இதயத்திலே  ஈரமிருக்க
 எனக்குப் பிடிக்கும்
 உதயகால  கதிரைக் கூட
 எனக்குப் பிடிக்கும்

 உழைக்கின்ற  மக்களையும்
 எனக்குப்  பிடிக்கும்
 ஊரைக் கூவி  யழைக்கும்
 சேவல்  எனக்குப் பிடிக்கும்

 அங்கமெலாம்  தங்கமாக
 எனக்குப் பிடிக்கும்
 அளந்ததனை  பார்க்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 பெண்கள் பூசும்   மஞ்சள்கூட
 எனக்குப்  பிடிக்கும்
 பெருமையுடன்  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 கண்களாகும்  கல்விகூட
 எனக்குப்  பிடிக்கும்
 காலமுழுதும்  கற்பதுவும்
 எனக்குப் பிடிக்கும்

 சிறுவரின்   மழலைமொழி
 எனக்குப்  பிடிக்கும்
 சீறிவரும்  காற்றின் ஓசை
 எனக்குப்  பிடிக்கும்

 பொங்கிவரும்  கடலலைகள்
 எனக்குப்  பிடிக்கும்
 பூமிப் பந்து  சுழலுவதும்
 எனக்குப்  பிடிக்கும்

 மழையிலே  நனைவதும்
 எனக்குப் பிடிக்கும்
 மானத்தோடு  வாழ்கிறதும்
 எனக்குப் பிடிக்கும்

 தாய் மடியில்  துயிலுவது
 எனக்குப்  பிடிக்கும்
 தமிழனாக  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 நோயின்றி  வாழ்வதுவும்
 எனக்குப்  பிடிக்கும்
 நூறு ஆண்டு  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 வானத்தில்   பறப்பதுவும்
 எனக்குப்  பிடிக்கும்
 வாழ்க்கையிலே  நல்லவைகள்
 எனக்குப்  பிடிக்கும் 

ulaa-185.

வானிலே  புது நிலா
 வாழ்விலே  ஒரு கனா
 நாணிலா   நீஇலா
 நாமினி  அன்பிலா

 தேனிலா  சுவையிலா
 தீங்கனி இதழிலா
 வானிலா  மண்ணிலா
 வரவிலா  செலவிலா

 உறவிலா  பகையிலா
 உள்ளத்தின்  அருகிலா
 தெரிலா   தெருவிலா
 தீந்தமிழ்  சுவையிலா

 மலரிலா  மரத்திலா
 மதுவிலா  மார்பிலா
 மங்கையின் உடலிலா
 மாங்கனி  இனிப்பிலா

 இரவிலா   பகலிலா
 இன்பங்கள்  நிலையிலா
 அருகிலா  தொலைவிலா
 அன்பிலா  அழகிலா

 நீரிலா  நிலத்திலா
 நெஞ்சிலா  நினைப்பிலா
 பேரிலா  பேச்சிலா
 பிஞ்சிலா  மனத்திலா

 ஒன்றிலா இரண்டிலா
 ஒளியிலா  ஒலியிலா
 கண்களா  காதலா
 கவிதையின்  சிறப்பிலா

 பெண்ணிலா  பெ யரிலா
 பெருமையின் குணத்திலா
 எண்ணிலா  எழுத்திலா
 இதயத்தின்  துடிப்பிலா

 வாழ்விலா  முடிவிலா
 வல்லமை  செயலிலா
 தாழ்விலா உயர்விலா
 தாய்மையின்  மடியிலா

 பெரிதிலா  சிறிதிலா
 பிள்ளையின்  சிரிப்பிலா
 அரிதிலா  எளிதிலா
 அடக்கத்தின்  வழியிலா

 நாவிலா  நடையிலா
 நங்கையின்  முகத்திலா
 பாவிலா  பண்ணிலா
 பல்கலை  அறிவிலா

 சிரிப்பிலா  வெறுப்பிலா
 சிந்தனைச் செறிவிலா
 இருப்பிலா  பொறுப்பிலா
 இளமையின்  கனவிலா


kaadhal kadai-183.

நிலவால்  முகம்  மறைத்தாள் -என்
 நெஞ்சில்  வலை  விரித்தாள்
 கனவில்  தினம் வதைத்தாள் -அவள்
 காதல்  கடை  திறந்தாள்

 கடந்தாள்  வெகு  தூரம் -அதனால்
 வந்த  கவலை  பெரும் பாரம்
 இருந்தாள்  எந்தன் இதயத்திலே -அந்த
 இனிமை  வருமோ  உதயத்திலே

 ஒருநாள் திருநாள்  வருமோ -என்
 உள்ளம்  சுகமினி  பெறுமோ
 தனிமை  தானெனக்கு  விதியோ -அது
 தர்மம்  செய்திட்ட சதியோ

 என்றுநீ  வருவாய்  என்னருகில் -எனது
 இதயம்  துடிப்பது  உன்மடியில்
 நன்றி  மறப்பது  தவறல்லவா -எந்த
 நாளும்  வளர்வது  உறவல்லவா

 களங்கம்  இல்லாத  முழுநிலவு -உன்னைக்
 கண்டாலே  வருமே  மனநிறைவு
 விளக்கம்  இனியென்ன  சொல்வதற்கு -நீ
 வரைந்து  வாயென்னிடம்  வாழ்வதற்கு 

ragasiyam-182.

வானில்  பறக்கும்
 வண்ணத்துப்  பூசிகளே
 வீணில  அலையும்
 விவரம்  சொல்வீரோ

 சிட்டெனப்  பறக்கும்
 சிட்டுக் குருவிகளே
 விட்டதை  தேடியே
 விரைவாகச்  செல்வீரோ

 சுற்றிச்  சுழலும்
 சூறாவளிக்  காற்றே
 பற்றுகளை  அழிக்கும்
 பாதகத்தை விடுவீரோ

 ஆர்த்து  எழுகின்ற
 அழகுக்  கடலலையே
 ஈர்த்து  இழுக்கின்ற
 இரகசியம்  சொல்வீரோ

 மொட்டு அவிழ்ந்த
 முல்லை  மலரினமே
 தொட்டு  ரசித்திட
 துணைக்கு  வருவீரோ

 வானப் பெருவெளியில்
 வலம்வரும்  வெள்ளிநிலா
 கானகத்துக்  குரலோசை
 கவர்ந்து  இழுத்திடுமோ

 சுண்டி  இழுக்கின்ற
 சுடர்விடும்  நட்சத்திரம்
 கண்டு  சிரித்திட்ட
 காரணம்  சொல்லிடுமா 

thozhiyae -181.

அழகெனும்  சொல்லே  நீயடி -உனது
 அடிமை  என்றுமே  நானடி
 பழகிட   இனிக்கும்  பைங்கிளி -நான்
 பார்த்ததும்  நெஞ்சிலே  பனித்துளி

 நானென  எதுவும்  இல்லையே -இங்கு
 நம்மிடை  பேதம்  தொல்லையே
 மீனெனத்  துடித்திடும்  கயல்விழி -புது
 மின்னலாய்  தாக்குதல்  உன்வழி

 தொட்டால்  துவளும்   கொடி இடை -அன்பே
 தோல்வியில்  மூடினேன்  எனது கடை
 பட்டால்  நெய்தது  உன்னுடல் -புதிய
 பரவசமானதால்  எழுதினேன்  ஒருமடல்

 மனதினைக்  கிள்ளியே  எடுப்பாயோ -இனி
 மகிழ்வினை  அள்ளியே கொடுப்பாயோ
 தினம் தினம்  தவிப்பது  எனது கதை -உனைத்
 தேடி அலைவதும்  புதிய வதை

 நீயும்  நானும்  ஒன்றே யடி -இந்த
 நினைவே  மனதிற்கு  நன்றே யடி
 காயும்  நிலவு   வீணடி -உனது
 கண்ணில்  தெர்யுது மீனடி

 காலங்கள்  ஓடியே  போகலாம் -வரும்
 கவலைகள்  கூடுதல்  ஆகலாம்
 வாழ்வு  என்பது  உள்ளவரை -இங்கு
 நாமினி  ஒருவராய் வாழலாம்

 மாற்றம்  என்பது  வெளிப்பாடு -நம்
 மனதின்  காதலோ  வழிபாடு
 தோற்றம்  என்பதும் வெளிக்கூடு -எனது
 தோழியே  வாராய் நீ  அன்போடு

kaaviyak kavignar vaalee-180.

வானப்  பெரு  வெளியில்  வந்து  கலந்தீரோ
 மோனை   சுவைஇனிலே  முத்தெடுக்கப்  போனீரோ
 கந்தன்  அருளாலே  கனிந்த பழமாணீர்
 உந்தன்  திறமை  உலகம்  அறிந்ததய்யா

 இரண்டு  திலகத்திற்கும்  இசைந்த பொருளானீர்
 திரண்ட செல்வம்  சினிமாவில் பெற்றதய்யா
 அரங்கன் திருத்தலத்தில்  அழகாய் பிறந்தவரே
 அழகன்  திருநாமம்  அருளோடு  அமைந்த்தய்யா

 நாடகத்    துறைக்கு  நல்ல தொண்டு  செய்தீரே
 நானிலம்  போற்றிடவே  நல்ல பெயர்  பெற்றீரே
 ஊடகத்  துறையில்  ஓங்குபுகழ்  பெற்றீரே
 துட்டுக்குப்   பாட்டெனும் துணிச்சலும்  கொண்டீரே

 காவியக் கலைஞரென  கற்றோர்கள்  போற்றினரே
 கலைஞர் நட்புக்கு  காரணமாய் நின்றீரே
 கவியரசர்க்கும்  கவின்மிகு  தோழர்  ஆநீரே
 கற்பனைப்  பாடல்  கருத்தான  பாடலாச்சு

 அற்புதமாகிய  அருட்பெரும்  சுடரின்
 பொற்பதம்  சேர்ந்த  புண்ணிய மூர்த்தி
 எத்தனை  காலம்  ஏங்கியே  இருப்போம்
 இங்கிவன்  மீண்டும் எழுந்து நீர்  வருகவே 

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

thankak kural-annant.m.s.179.

கானகத்துக்  குயில்  ஒன்று-இரு
 கண்  மூடி  தூங்குதையா
 வானகத்துக்  தேவர்  கூட்டம் -வந்தே
 வழி  காட்டி  அழைத்தனரோ

எம் கே  டி  போல இனிய குரலழகு -நமது
 எம் ஜி யாருக்கும்  இசைந்த புது மெருகு
 சிங்கமெனச்  சீரும் சிவாஜி  கணேசனுக்கோ -நல்ல
 தங்கமாய்  அமைந்தது  தமிழின்  பெருமையன்றோ

 மதுரையில்  பிறந்த  மாமணியே  கண்ணுறங்கு -நம்
 பொதிகையில் பிறந்த  பூந்தென்றல்  கண்ணுறங்கு
 விதி ஒன்று வந்து  விளையாடி விட்டதம்மா -வேறு
 கதி இல்லை  என்றே  கனக்குது  தமிழர் குளம்

 வெள்ளித்  திரையின்  வெற்றித்  திருமகனே -உலகம்
 வியக்கும்  குரலசைவில்  வெற்றி  குவித்தவரே
 அள்ளி  யனைத்தன்று  ஆசிபல சொன்னவரே -இதனை
 சொல்லித் துடிக்குதையா  சோதரன்  எந்தன்  மனம்

 வானத்து வீதியிலே  வலம் வருமே உனது குரல் -அந்த
 வள்ளி    மனவாளனால்  வளர்ந்ததே  உனதுபுகழ்
 கானப்   பெருவிளக்கே  கருணைமனம் கொண்டவரே -எந்த
 நாளும் உன்னை மறவோம் நன்றியுடன்  நினைத்திடுவோம்

 எத்தனையோ  பேர்கள்  இனியும்  வருவார்கள் -ஆயின்
 அத்தனையும் உன்போல  அமைந்திட  வேண்டாமோ
 சித்தனாய்  வாழ்ந்து  சிரஞ்சீவி  ஆனவரே -உனது
 பக்தன்  பாடுகிறேன்  பாசமுடன்  கேட்டிடுங்கள் 

kaadhalthodhu-178.

வானத்து  நிலவென  வந்து  விட்டாள் -என்
 வாழ்வுக்கு  அர்த்தத்தை  தந்து  விட்டாள்
 கானத்துக் குயில்  தரும் இனிமையிலே -அவளைத்
 கலந்திடத் துடித்தேன்  நான் தனிமையிலே

 சிரித்தால்  சீர்பெறும்  நல்ல பல்வரிசை -ஒரு
 சிலைபோல்  செய்தது  இறைவன் கைவரிசை
 விரித்திட்ட  வாழையின்  மடல் போல -சற்று
 வியந்து  பார்த்தால்  பொங்கும்  கடல்போல

 நடந்தால்  கிடைப்பது  புதிய  நாடகமே -அந்த
 நால்வகை  குணங்களும்  அவள்   வசமே
 படர்ந்தாள்  மல்லிகைக்  கோடி போலே -உற்று
 பார்த்தவர்  மனதில்   பெரும்  இடி போலே

 தோழி  உடன்வர   தினம்  செல்லும் -பின்
 தொடர்ந்தால்  அவரது உடல்  சாயும்
 வேலி  இல்லாத  விளை  நிலமாய் -தினம்
 வெற்றிக்  கொடி  பவனி  வருகின்றாள்

 மனதில்  உள்ளதை  நானே  சொல்வதற்கு -ஏனோ
 மற்றவர்  போல பயம்  எனக்கெதற்கு
 கனவில்  வந்திட்ட  கதை  சொல்வேன் -அவளது
 காலடி  மண்ணையும்  நான் தொழுவேன்

 கவிதை  படித்திடும்  செல்லக் கண்மணிகாள் -அவளைக்
 கண்டால்  கனிவுடன்  இதைச்  சொல்வீர்
 புவியில்  வாழ்வது  அவளை  ரசிப்பதற்கே -எனது
 புலம்பல்  தீர்ந்திட  நல்வழி  சொல்வீர் 

gangaik karai -177.

கண்ணிலே  தெரிவதென்ன  கண்ணம்மா -அந்தக்
 கண்ணனின்  திருமேனி  கண்ணம்மா
 பெண்ணிலே  பேரழகி  தானம்மா -வாய்
 பேசாத  பொற்சிலை  நீயம்மா

 நிலவுவரும் நேரத்திலே  கண்ணம்மா -உனது
 நெஞ்சம்  விம்மிப்  பொங்குவதேன் கண்ணம்மா
 கனவில் வந்தசுகம்  கண்ணம்மா -இனி
 காலத்திலும்  நிலைத்திருக்கும்  கண்ணம்மா

 புல்லாங்குழல் இசைத்தால் கண்ணம்மா -ஏனோ
 பொழுதெலாம்  மயங்குகிறாய்  கண்ணம்மா அள்ளக்
 குறையாதவன்  தான் கண்ணம்மா -தினம்
 அவனை நினைத்து  ஏங்குகிறாய்  கண்ணம்மா

 கங்கைகரைத்  தோட்டத்திலே  கண்ணம்மா -அன்று
 கண்ணனின்  மடிபுகுந்தாய்  கண்ணம்மா
 தங்கமெனத்  ஜோளிக்கிறானே  கண்ணம்மா -அவனைத்
 தழுவியணைத்து  மகிழ்ந்திடடி  கண்ணம்மா

 மாடுமேய்க்க  வந்தவன்  கண்ணம்மா -இள
 மனதில்வந்து  மேய்கிறானே  கண்ணம்மா
 கூடு விட்டு  கூடுபாய்ந்தான்  கண்ணம்மா -இந்தக்
 கொள்ளையை  எங்கு சொல்வேன்  கண்ணம்மா

 இரவுக் காலப்  பொழுதினிலே  கண்ணம்மா -இன்னும்
 எத்தனை  நாள்  காத்திருப்பாய்  கண்ணம்மா
 உறவுக்காக  துடிதுடிக்கும்  கண்ணம்மா -உடனே
 உன்னையாள  வந்திடுவான்  பாரம்மா 

iraivan-176.

என்னைப்  படைத்தவன்  இறைவனே
 எனக்கு  அவனே  தலைவனே
 பொன்னைப்  பொருளைத்  தந்தவன்
 புவனத்தை  என்றுமே  வென்றவன்

 தந்தை  தாயும்  ஆனவன்
 தர்மத்தை உலகிலே  காத்தவன்
 பந்தமும்  பாசமும் அற்றவன்
 பாடிடும் தமிழிற்கு  ஏற்றவன்

 வானும் கடலும்  எல்லைகள்
 வணங்க  மறுத்தால் தொல்லைகள்
 கூனும்  குருடுமவன்  பிள்ளைகள்
 குவலயத்தில்  எத்தனை  நன்மைகள்

 இல்லார்  சிரிப்பினில்  அவனிருப்பான்
 ஏற்றமும்  புகழும்  அவனளிப்பான்
 காற்றாய்  எங்கிலும் கலந்திருப்பான்
 கற்புடை  மாதர்க்கு உதவிடுவான்

 சோதனை  அதிகம்  தருபவன்
 சுகத்தினை  முடிவில்  அளிப்பவன்
 சாதனை  செய்திடத்  துணையவன்
 சரித்திரம்  படைத்திடும் வல்லவன்

 வலியோர்  தம்மையும் வதைப்பவன்
 வாய்மை  விதைகளை  விதைப்பவன்
 எளியோர் நெஞ்சினில்  இருப்பவன்
 எல்லா  செயலுக்கும் பொருப்பவன் 

mayakkam-175.

மனதின்  மயக்கம்  கனவாகும்
 கனவின்  தொடக்கம் நினைவாகும்
 மலரின்  மயக்கம் ஏதுவாகும்
 மணக்கும்  நிலையே உருவாகும்

 இளமை  மயக்கம்  துணையாகும்
 துணையின்  மயக்கம் தூதாகும்
 தூதின் மயக்கம்  தொடராகும்
 தொடரின்  மயக்கம்  நலமாகும்

 நலத்தின் மயக்கம்  நாடாகும்
 நாட்டின்  மயக்கம் நலமாகும்
 நலத்தின்  மயக்கம் வளமாகும்
 வளத்தின் மயக்கம் வாழ்வாகும்

 வாழ்வும்  தாழ்வும்  சமமாகும்
 வந்தவர்  போவது  நிஜமாகும்
 நிஜமே  ஒருநாள்  பொய்யாகும்
 நிலைமையை  உணர்வது  மெய்யாகும்

 இருப்பவர்  ஒருமுறை  இறப்பவரே
 இறப்பவர்  மறுபடி  பிறப்பவரே
 பிறப்பும்  இறப்பும்  பொதுவாகும்
 பின்னணி  அறிவது  சுகமாகும்

 சுகமும் சோகமும்  ஒர்நிறையே
 சூதும்  வாதும்  ஒர்குறையே
 நிஜமே   மாந்தர்க்கு  நிம்மதி
 நிம்மதி  மனதிற்கு  வெகுமதி

utthaman-174.

சிறுவர்  சிறுமியர் வாருங்களேன் -இந்த
 சிறியேன் சொல்வதைக்  கேளுங்களேன்
 அறிவால்  உயர்ந்திடப்  பாருங்கள் -உலகில்
 அதுதான்  சிறப்பெனக் கூறுங்கள்

 அரிதான செல்வம்  கல்விதான் -நாம்
 அதனை மறந்தாலே தோல்விதான்
 தெரிந்து  நல்வழி செல்லுங்கள் -இங்கு
 தீயென  என்பதை தள்ளுங்கள்

 உடலிற்கு உழைப்பு தேவையே -அதனை
 உணர்ந்து செய்திடில்  வெற்றியே
 கடலிலும்  நல்முத்து  காணலாம் -உங்கள்
 இருகைகளை  நம்பியே வாழலாம்

 நாட்டைக்  காப்பதே  நல்லது -எங்கும்
 நல்லவை  என்றுமே வெல்வது
 வீட்டையும்  கவனித்து  வாழுங்கள் -என்றும்
 வென்றவர் சொல்வதைக்  கொள்ளுங்கள்

 தெய்வம்  உண்டென்று  நம்புங்கள் -அதுவே
 சிறந்த  வாழ்வென உணருங்கள்
 உய்யவே  உழைத்தால்  உயரலாம் -இனி
 உத்தமன்  எனும் பெயர்  சேரலாம்

 தாய்  தந்தையை  மதியுங்கள் -நம்
 தமிழின்  சிறப்பினை  அறியுங்கள்
 நோய்  நொடியின்றி  வாழுங்கள் -நல்ல
 நுண்ணறிவால்  உலகினை  ஆளுங்கள் 

seedeivith thaayae 173.

எனை   பெற்ற  தாயே -உன்
 எழிலான  சேய்  நான்
 துணை ஏதும்  இன்றி -ஏனோ
 நீயன்று  தனியாகப்  போனாய்  
   

 மணமாலை  சூடி மகிழ்ந்தாயே -அம்மா
 மக்களால் உனக்கு மகிழ்வில்லை
 கணமேனும் உறக்கம் கடுகளவுமில்லை -தினமும்
 கடினமாய் உழைத்து தேய்ந்தவள் நீயே

 கணவனின் பெருமை காத்தவள் நீயே -சிறு
 களங்கமில்லா   கற்பகத்  தாயே
 குணமெனும்  தேர்   அமர்ந்த   குணவதி  நீயே -நம்
 குளம் காக்க வருக குவலயத்தில் அம்மா

 இறையருள்  மிக்க  எழில்ரசி  நீயே -இந்த
 சிறுவனின்  இன்னுயிர்த்  தாயே
கறைபடா  மேனி  கற்பரசி  நீயே -தமிழ்
 காவியம்  பாடிட  கருப்பொருள்  தாயே

 வருவாயென  வாசலில்  நின்றேன் -பல
 வருடங்கள்  போயும்  வரவில்லை நீயே
 திருமுகம் காணவே  தொழுகிறேன் நானே -என்
 தேனான செல்வமே திரும்பி நீ வருக

 வந்தாலே  வாழ்வு  வளமாகுமே -எனது
 வாழ்விலே  மகிழ்வு  வழிந்தோடுமே
 சிந்தனை  எல்லாம் ஜெயமாகுமே -எங்கள்
 சீதேவித்  தாயே சீக்கிரம்  நீவாம்மா

சனி, 21 செப்டம்பர், 2013

kalavaada-172.

களவாட வந்தான் -அவனைக்
 கைதாக்கிக்  கொண்டேன்
 உளம் மாறியதாலே -நான்
 ஒன்றாகக்  கலந்தேன்

 நெருப்பாக  நின்றான் -நானோ
 நீராகிக் கொண்டேன்
 பொறுப்பாக  வாழ்ந்திட -நல்ல
 புத்திபல  சொன்னேன்

 சீரான  உருவம் -அழகு
 சிலையாக  வடிவம்
 கூரான  மீசை -தினம்
 கொஞ்சிடவே  ஆசை

 சிங்கமாய்  சிரித்தான் -ஏனோ
 சிறுபிள்ளை  ஆனேன்
 அங்கங்கே  சிலிர்ப்பு -அடியே
 யாரிதற்கு  பொறுப்பு

 தேனான  இளமை -அது
 திகட்டாத  புதுமை
 நானாக  இல்லை -அங்கு
 நாமென்று  ஆனோம்

 களவாட  வந்தான் -அவனே
 கணவனாக   ஆனான்
 உளமாற  சொன்னேன் -என்றும்
 உண்மை  இது உண்மை 

வியாழன், 19 செப்டம்பர், 2013

mothalum kaadhalum-171.

நிலவாகும் எந்தன் நெஞ்சம்
 நினைவாலே என்மனம்  கொஞ்சும்
 கனவாகுமோ  காதல் மஞ்சம்
 காலடி  என்னுடல்  தஞ்சம்

 அவள்::
 மாயங்கள்  செய்திடும்  மன்னவனோ
 மையலைக்  கொண்டிட்டமாலவனொ
 காதல்  என்பது  பேதமையே
 கற்று  உணர்தல்  நிமதியே
 அவன்:
 நீயின்றி  எப்படி  பிழைப்பேன்
 நித்தமும்  பெயரிட்டு  அழைப்பேன்
 வாழ்வது  எந்நாளும்  உன்னோடு
 வந்திடு  அன்பே  என்னோடு
 அவள்
 பொறுப்பின்றி  பேசுதல்  முறையோ
 பின்னாலே  வருவது  சரியோ
 எண்ணத்தை  இன்றேனும்  மாற்று
 இல்லையேல்  ஆடுவேன்  கூத்து
 அவன்
 அலையின்றி கடலிங்கு  இல்லை
 அழகின்றி  வாழ்வது  தொல்லை
 வயலுக்கு மழைபோல  தேகம்
 வாழ்க்கையில்  வந்ததே  மோகம்
 அவள்
 உன்னைக்  கண்டாலே  வெறுப்பு
 உளறலுக்கு  நான்தானா  பொறுப்பு
 கண்ணைக்  கவருமா  காதல்
 காலத்திற்கும்  உன்னாலே  மோதல்
 அவன்
 என்ன  தவறுகள்  செய்தேன்
 இதயத்தில்  ஓரிடம்  கொடுத்தேன்
 அன்னம் மறந்து  நாளாச்சு
 அழகியே  உனக்கு  நானாச்சு
 இருவரும்
 நிலவுக்கு  ஒளியாக  இருப்போம்
 நினைத்ததும்  எங்கேயோ  பறப்போம்
 களவுக்கும்  பேர்போன  காதல்
 கருத்தினில்  நமக்கேது  மோதல்

புதன், 18 செப்டம்பர், 2013

kalai vaani-170.

கலை  யாவும்  கண்டேன்
 களிப்பே  நான்  கொண்டேன்
 உலகு  ஆளும்  தேவி
 உந்தனைப் பாட  வந்தேன்

 வரம்  வேண்டி  நின்றோர்
 உனது  வாசலில்  நிற்ப்பார்
 நிறம் பார்த்து  நீயும்
 நினைப்பது  இல்லை  தாயே

 அகிலத்தை  காக்கும்  அன்னையும் நீயே
 ஆடுவோர்   ஆடலை  அழிப்பதும் நீயே
 புவனமே  போற்றும்  புனிதவதி நீயே
 பொங்கிடும்  கடலின்  சந்கொலியும் நீயே

 சங்கரி சக்தி  சாஸ்வதம் நீயே
 சமரிலே  வென்ற  சாமுண்டி நீயே
 எங்களின்  இதயம்  என்றுமே நீயே
 எளியோரைக்   காக்கும் ஈஸ்வரியும் நீயே

 திங்களும் மதியும்  திசைகளும் நீயே
 தேனாறு  பாயும்  வரலாறும் நீயே
 பெண்களைப் போற்றும் பெருங்கருணை நீயே
 பேதமை நீக்கிடும்  பெரும் சக்தி நீயே

 மலர்     தூவி  துதிப்பேன்
 மனதில்  தினம் நினைப்பேன்
 கலை சார்ந்த  வாழ்வினை
 கனிந்து அருள்க  அம்மா 

திங்கள், 16 செப்டம்பர், 2013

idhayam-169

கவிஎன்ன  சொல்லும்
 கதையென்ன கேட்கும்
 கண்ணுறங்கும்  நிலையிலே

 காதல்  கதை பேசுமா
 கண்ணில்  வலை வீசுமா
 கற்பனையில்  வாழும் நிலையிலே

 உறவென்ன சொல்லும்
 உணர்வென்ன  செய்யும்
 உள்ளத்து  ஆசைவலையிலே

 நிலையென்று நினைக்கும்
 நிஜமென்று  நம்பும்
 நிம்மதியில்லாப்  பொழுதிலே

 அழுதாலும்  ரசிக்கும்
 அன்பானால்  இழுக்கும்
 அநியாயக்காரர்  மனதிலே

 கொடுப்பாரை  ஏசும்
 குணம்கெட்டு  திரியும்
 கொள்கையில்லா  வாழ்விலே

 இழந்தாலும்  சிரிக்கும்
 இருப்போரை  துதிக்கும்
 இதயமேயிலார் வழியிலே 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

siru pillai-168.

மானாடும்  சோலை -வண்ண
மலராடும்  வேளை
 மீனாடும்  கண்ணாள் -புது
 மின்னலாய்  வந்தாள்

 ஏனென்று  கேட்டேன் -அவள்
 எள்ளியே  சிரித்தாள்
 நானென்று  சொன்னேன் -சற்று
 நளினமாய்  முறைத்தாள்

 ஈரெட்டு  வயது -நல்ல
 இளமையில்  மனது
 கால் தொட்டு  கூந்தல் -இரு
 கண்களில்  மையல்

 பேரென்ன  என்றேன் -தன
 பின்னலை  இழுத்தாள்
 ஊரென்ன  என்றேன் -ஏனோ
 உற்றென்னைப்  பார்த்தாள்

 தங்கத்தில்  அங்கம் -அது
 தணலாக  மின்னும்
 சிங்கமாய்  சிலிர்ப்பு -நம்
 செந்தமிழ்  வனப்பு

 முத்தாக  சிரிப்பு -வான்
 முழுமதியின்  வார்ப்பு
 பித்தாகிப்  போனேன் -சிறு
 பிள்ளை  போலானேன்

 கொத்தாகப்  பறித்தாள் -என்னை
 கொலை செய்து  விட்டாள்
 செத்தாலும்  மறவேன் -அவள்
 சீரடியை  தொடர்வேன் 

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

kaadhal paravaikal-167.

காற்றில்  சிறகடிக்கும் -இளம்
 காதல் பறவைகளே
 பார்க்கும்  என்மனநிலையை -என்
 பதியிடம்  சொல்வீரோ

 கன்னம்  கருப்பழகன் -நல
 காதல்  விழியழகன்
 பெண்கள் மயங்கிடும் -தூய
 பேரழகு  செல்வமவன்

 நிமிர்ந்த  நடையழகன் -அவன்
 நேச  மொழியழகன்
 உயர்ந்த  வடிவழகன் -என்
 உள்ளத்தை  யள்ளியவன்

 கட்டி  அணைக்கையிலே -மூன்று
 காலமும்  மறந்துவிடும்
 வெட்ட  வெளியினிலும் -அந்த
 விசயமும் நடந்துவிடும்

 சிந்தை   அணுவினிலே -அவனின்
 சில்மிஷம்  கலந்துவிடும்
 பந்தென  அவனகையில் -நான்
 படும் துயர்  யாரறிவார்

 காண  முடியாமல் -அவனிடம்
 கற்றதை  சொல்லாமல்
 வீணே  புலம்புகிறேன் -இந்த
விவரத்தை  சொல்வீரோ

 உடலும்  இளைத்ததம்மா -இருக்கும்
 உள்ளம்  களைத்ததம்மா
 கடலில்  துரும்பானேன் -அவனைக்
 கண்டாலே சொல்லிடுங்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

thozhi-166

ஒருநாள்  வந்தான்  இரவில் -என்
 உடலில்  கலந்தான்  உறவில்
 மறுநாள் வருவானென நினைத்தேன் -ஏனோ
 வரவே  இல்லையே  தோழி

 சிலநாள்  தனியே  அழுதேன் -அவனை
 சிந்தையில்  வைத்தே  தொழுதேன்
 திருநாள்  மறத்தல்  சரியா -எனக்கு
 தேறுதல்  சொல்வாய்  தோழி

 ஈருடல்  ஒன்றென  ஆனோம் -அந்த
 இன்பத்தில்  எங்கயோ  போனோம்
 போனவர்  வந்திட  இல்லை -நான்
 புழுதியில்   கிடக்கின்ற  முல்லை

 கண்களில்  மழைநீர்  கொட்டும் -அவன்
 காதலில்  என்மனம்  வாட்டும்
 பெண்களில்  நானொரு  பேதை -தினம்
 புலம்பித்  தவிப்பது  காதை

 உடலை  ஒருநாள் துறப்பேன் -அந்த
 உத்தமனை  எப்படி  மறப்பேன்
 வயலைக் காப்பது  மேகம் -ஏனோ
 வாட்டத்தில் உருகுதே  தேகம் 

புதன், 11 செப்டம்பர், 2013

gunaseelan-165

மனநிலை  குறைந்த  மாந்தர் -நல்ல
 மகிழ்வினைப்  பெறுதல் வேண்டி
 குணமெனும் சீலன் கோவிலை -தம்
 குடும்பத்தோடு சேர்தல்  நலமாம்

 அலைகடலில்  தூங்கும் மாலன்-நல
 அன்பர்க்கு அருளும் சீலன்
 கலைமிகு  வண்ணம் கொண்டான் -அவனை
 கவி  பாடி வாழ்த்தல்  சுகமே

 நின்றிடும்  கோலம்  கண்டோம் -உடனே
 நிலைத்திடும் பேறு  கொண்டோம்
 அன்பனை  தொழுது  நின்றால் -இனி
 அவனருள் பெறுதல்  எளிதே

 அள்ளியே  தரும்  வள்ளல் -விட்டு
 அகலுமே  நமது  அல்லல்
 சொல்லியா  புரிய வேண்டும் -அவரது
 சுந்தரப்  பெருமை கோடி

 நாடியே  வந்த பேர்கள் -என்றும்
 நலமது அடைவார்  திண்ணம்
 வாடிய மனிதர் காக்க -இங்கே
 வந்திட்ட  கருணை  அன்றோ

 திருமலை செல்ல  முடியா -நெஞ்சில்
 தீதிலா  மாந்தர்  எல்லாம்
 குணமெனும் சீலன் பாதம் -பற்றி
 கும்பிட்டு  மகிழ்தல்  உண்டு 

sagiyae-164

கண்ணன்  வருவானோடி -சகியே
 காரிருளில்  தன்னிலெனைக்
 கட்டியே அணைத்து -என்
 கனியமுதம்  பருகிய   (கண்ணன் )

 உணவு  பிடிக்கவில்லை -சகியே
 உறக்கம் சிறிதுமில்லை
 கிறக்கம்  பிடித்ததடி -மனசில்
 கிலேசம்  வளர்ந்ததடி  (கண்ணன்)

 கைவளை  கழன்றதடி -சகியே
 கண்கள்  சிவந்ததடி
 மேனி வலிக்குதடி -எனது
 வேதனை  அறிவாயோடி(கண்ணன்)

 நட்ட  நடுஇரவில் -அந்த
 நம்பி  கலந்தானேடி
 வெட்க  மிகுந்ததடி -இதை
 வெளியில்  சொல்லாதேடி  (கண்ணன்)

 சொல்லத்  தெரியவில்லை -சகியே
 சுந்தர  முகமழகு
 அள்ளி  அணைத்தானே -என்னை
 அன்பினில்  நனைத்தானே (கண்ணன்)

 தந்தை  அடிப்பாரோ -சகியே
 தாயும்  துடிபபாளோ
 சிந்தையில்  புகுந்தானே -ஏனோ
 ஜீவனை  வென்றானே  (கண்ணன்)

 தவிக்க  விடுவானோ -சகியே
 தழுவிட  வருவானோ
 துடிக்கும்  மனநிலையை -அவனிடம்
 தூது  நீசொல்லாயோ  (கண்ணன்)

  

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

kannan

வானில்  எங்கும்  பறந்தேன் -இந்த
 வாழ்க்கை  முழுதும்  திரிந்தேன்
 காணும்  பொருளில் எல்லாம் -என்
 கண்ணன் உன்னையே கண்டேன்

 நீல  மேக  வர்ணம் -உன்
 நிறத்தை  எனக்கு  காட்டும்
 கோலக் குயிலின்  ஓசை -எனக்கு
 குழலின் இனிமை  ஊட்டும்

 மின்னும்  அழகு  மேனி -புது
 மோக  வலையைப்  பின்னும்
 கன்னக்  குழியின்  சிரிப்பு -வந்த
கவலை  போக்கி இழுக்கும்

 கங்கைக்  கரை யோரம் -அவன்
 காதல்  லீலை  தொடரும்
 மங்கை  மனதில் காதல் -என்றும்
 மயக்கம் நிறையப்  படரும்

 காலில்  சலங்கை  ஓசை -பெண்கள்
 கண்டால் மனதில்  ஆசை
 பாழும்  வெட்கம்  தடுக்கும் -ஆனால்
 பாசம் இன்னும் பேருக்கும்

 கண்ணன் பெயரைச்  சொல்ல -நெஞ்சில்
 கவிதை  நிறையப்  பிறக்கும்
 மண்ணை  தின்ற  மாயன் -அன்று
 மாடு  மேய்த்த  ஆயன்

 காக்கும்  கடவுள்  கண்ணன் -அன்பு
 காதல் கலையில் மன்னன்
 நீக்கமற எங்கும்  நிறைந்தான் -அவனை
 நினைந்து  பாடி  மகிழ்வேன் 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

azhakoviyam162

அலையான  கூந்தல்  கருநீலமோ -உன்
 அழகான  கண்கள்  கவிபாடுமோ
 சிலையான  பொன்மேனி  கலைக்கூடமோ -நீ
 சிரிக்கின்ற  போதிலே முத்தாடுமோ

 வளைவான அங்கங்கள்  பந்தாடுமோ -அருகே
 வந்தாலே என்னுள்ளம்  பித்தாகுமோ
 குழைவான  அதரங்கள்  பழ்தோட்டமோ -உன்
 குலுங்கிடும் அழகு  ஒருசதிராட்டமோ

 வளையாடும்  கையோசை  வளையாபதி -நீயோ
 வந்தாலே  பெறலாமே  மனநிம்மதி
 கலையோடும்  கருவிழிகள்  மீந்தானடி -உனைக்
 கண்டாலே  இனிக்கின்ற  தேன்தானடி

 நிலவுக்கு குளிர்ச்சியே  நீதானடி -தினம்
 நினைத்தாலே  வருவது  மலர்ச்சிதானடி
 கலவிக்கு  வழிகாட்டும்  கண்ஜாடையே -நாளும்
 கலைவெள்ளம் வழிந்தோடும் சிர்ரோடையே

 அழகுக்கு  அழகூட்டும்  அழகோவியம் -தெருவில்
 அசைந்தாடி  வருகின்ற எழிலோவியம்
 பருவத்தில்  உலகாளும் மலர்க்கூட்டமே -தமிழில்
 பாடியே  ரசிப்பதில்  என்நாட்டமே 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

vayaloor murugan-161.

வயலூர்  எங்கும்  பெருங்கூட்டம் -அந்த
 வள்ளல் முருகன் திருக்கூட்டம்
 பயமே  இல்லை  பணிந்தாலே -நல்ல
 பலனே உண்டு  நினைந்தாலே

 கருணை பொழியும்  கந்தனவன் -மனக்
 கவலை  தீர்க்கும்  சொந்தமவன்
 அருணகிரி போற்றும் அன்பனவன் -நம்
 ஆதிசிவன் பெற்ற  திருமுருகன்  

 பசுமை  சூழ்ந்திடும்  வயல் நடுவே -கேட்கும்
 வரம்தர  முருகன்  இருக்கின்றான்
 சுமைதனை  இறக்கிட  வாருங்கள் -மனத்
 தூய்மையில்  அவனைப்  பாருங்கள்

 பார்த்திடப்  பரவசம்  தலைக்கேறும் -வந்த
 பஞ்சமும்  நோயும்  பறந்தோடும்
 பிரார்த்தனை  அனைத்தும்  நிறைவேறும் --சிவன்
 பிள்ளையால்  அன்றோ தெளிவாகும்

 வயலூர்  முருகன்  வடிவேலன் -நம்மை
 வந்தே  காக்கும்  குணசீலன்
 துணையாய்  இருப்பான்  நம்மோடு -இனி
 துதிப்போம்  இன்றே  அன்போடு

 அள்ளித்  தருவது  வள்ளல் குணம் -நம்மை
 அனைத்துக்  காப்பது அன்புமனம்
 சொல்லித் தருவது புரிகிறதா -ஒரு
 சொர்க்கம்  இருப்பது தெரிகிறதா

 நாளும் இங்கே  வாருங்கள் -உமக்கு
 நல்லது நடந்தால்  கூறுங்கள்
 வேலும்  கோளும்  பலமளிக்கும் -நெஞ்சில்
 வெற்றி  வேலனே குடீருப்பான் 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

vetri-160

இறைவன்  ஒருநாள்
 என்னிடம் வருவார்
 இர்ருப்பவர்  காத்திட
 இனியவை கேட்பேன்

 பெண்களைப்  போற்றும்
 பெருமை கேட்பேன்
 கண்களில்  மேலாம்
 கருணை  கேட்பேன்

 மண்ணகம்  வாழ்ந்திட
 மகிமை  கேட்பேன்
 மாதங்கள்  முழுதும்
 மழைவரக் கேட்பேன்

 வீரம் கேட்பேன்
 வெற்றியைக்  கேட்பேன்
 சோரம்  போகா
 சொல்வளம் கேட்பேன்

 மதியினால்  ஆளும்
 மாயம்  கேட்பேன்
 விதியை வென்றிட
 விவரம்  கேட்பேன்

 பிள்ளைகள்  கேட்பேன்
 பெரும்புகழ்  கேட்பேன்
 எல்லையில்  அமைதி
  இருந்திடக்  கேட்பேன்

 பிறவா  வரமது
 பெற்றிடக்  கேட்பேன்
 மறவாது நினைத்திடும்
 மங்களம்  கேட்பேன்

kannammaa

உன்னையே  ரதிஎன்று
உருகுகின்ரேனடி  கண்ணம்மா
 என்னிலேபாதி  என்ரும்நீயடி

 கார்கால  நிலவினிலே
 காற்று வாங்கப்  போகயிலே
 தூறலாக  வந்தவளே கண்ணம்மா

 இரவு பகல் நேரத்திலே
 இளமை பாட்டு படிக்கையிலே
உலகம்நமக்கு மறந்து போகும்  கண்ணம்மா

 துடிஇடையில் சேலை செய்த
 சுகத்தை  கூட பெறவில்லையே
 துடிக்கும் என்மனசைக்  கேளு  கண்ணம்மா

 அன்னம் போல நடக்கயிலே
 ஆவி பறி  போகுதடி
 எண்ணமெல்லாம்  நீயல்லவோ  கண்ணம்மா

 என்னை  உனக்கு புரியல்லியா
 எதுவும் இன்னும் தெர்யல்லியா
 கண்ணிலே  வலை விரித்தாய்  கண்ணம்மா

 பின்னல் ஜடை  ஆடுகையில்
 பேரழகு  குலுங்கும்போது
 என்னை நானே மறந்தேனே கண்ணம்மா

 ஒன்று படும் காலம் வரும்
 உலகம் நம்மை  சேரவிடும்
 நன்றி சொல்வோம்  அப்போது  கண்ணம்மா

 பிள்ளை குட்டி அதிகம் வேண்டும்
 பெருமையான வாழ்வு வேண்டும்
 நல்லவராய்  வாழவேண்டும் கண்ணம்மா 

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ulagamkaa

காலமெனும்  காட்டாறு -நம்
 கண்ணெதிரில்  ஓடுதடா
 சீலமிகும் மனிதரெல்லாம் -தெருவில்
 சிலையாக  நிற்பாரடா

 ஆளைசுரண்டிப்  பிழைப்பதுவும் -சிலர்
 ஆளடிமை  செய்வதுவும்
 வேலையில்லா  வீணர் செய்யும் -தினம்
 விஷமமான  வேலையடா

 சோலைகளும்  பறவைகளும் -இங்கு
 சொல்லுகிற  சேதி என்ன
 நாலைஇந்த  உலகம் -என்றும்
 நமதுகையில்  தானே என்று

 வானத்தாய்  வடிக்கின்ற -அந்த
 வற்றாத  கண்ணீரோ
 தானமாக  பூமயிலே -நமக்கு
 தண்ணீராய்  கொட்டுதடா

 கொட்டுகிற  மழையினுக்கு -வானில்
 குளிர்நிளவு  குடையாகும்
 எட்டுகிற உயரம்வரை -நாம்
 எட்டிப்பிடிக்க  வேண்டாமோ

 வம்புபேசி  கதையளக்க -இந்த
 வாழ்நாளே போதுமாடா
 அன்பினாலே  ஆள்வதற்கு -இனி
 யாருமென்ன  வேண்டாமோ

 குடிசைகளும்  கோபுரமாய் -நமது
 குவலயத்தில்  மாறாதோ
 மடமைகளும்  மமதைகளும் -என்று
 மாயமாகிப்  போகாதோ

 இருப்பதைக்  கொடுத்துவிடு -மனதில்
 இரக்கத்தை  வளர்த்துவிடு
 உறக்கத்தை  மறந்துவிடு -நீயிந்த
 உலகத்தை  வென்றுவிடு 

சனி, 10 ஆகஸ்ட், 2013

mogam

பூவார்  சோலையில்
 புதுமலர்  கண்டேன்
 பொன்னெழில்  மேனியில்
 புதுமை  கொண்டேன்

 நாவார்   தமிழில்
 நயம்பட உரைத்தேன்
 நாயகி  நீயென
 நானும் நினைத்தேன்

 காரெழில்  கூந்தலில்
 கவனம் இழந்தேன்
 கண்மணி உன்னிடம்
 காதல்   அறிந்தேன்

 நிலவில் இரவில்
 நிம்மதி  மறந்தேன்
 நேரிழை உன்னால்
 நினைவும் துறந்தேன்

 பேச்சினை விட்டேன்
பிரியம்  வளர்த்தேன்
 மூச்சினை  மட்டும்
 மோகம் கொண்டேன்

இணையடி  நிழலில்
 எனது  மனமே
 துணையென  வந்திடில்
 தொடருமே இன்பம்

 இன்பங்கள்  கோடி
 இருவரும் தேடி
 அன்பெனும் வழியில்
 அமைதியைக்  காண்போம் 

pillaiyaarpatti karpaka vinaayakar

அற்புத  அழகு -நம்
 அகத்தினில்  தெளிவு
 கற்பகத்  திருவடி -மலர்
 பற்றிட  இனிது

 குடவரைக் கோவில் -நம்
 கொற்றவன் அருளால்
 சிற்பிகள்  அன்று -இங்கு
 செய்தனர்  நன்று

 அற்புத  மூர்த்தி -நாம்
 அடையலாம்  கீர்த்தி
 கற்பகத்  திருவினைக் -கண்ணால்
 கண்டிட  நேர்த்தி

 தொப்பைக்  கணபதி -தினம்
 தொழுதிட  அமைதி
 அப்பம் ஆவலுடன் -இங்கே
 அனைவரும் தொழுவார்

 சதுர்த்தி  நாளில் -நான்கு
 சக்கரத்  தேரில்
 சுற்றியே  வருவார் -நமக்கு
 சுகமெலாம் தருவார்

 வல்லமை பெற்றிட -இந்த
 வல்லபை பணிவோம்
 அல்லல்  நீங்கிடும் -என்றும்
 அகவொளி  கூடிடும்

manithaa

கண்களை  மூடி
 கடவுளை  தேடு
 கலக்கம் நீங்கி
 கற்பகம் தோன்றும்

 அற்புத அமைதி
 அகத்தினில்  கூடும்
 யாவும் சிவமென
 அகவொளி  கூடும்

 சஞ்சலம்  தீரும்
 சாந்தம்  சேரும்
 பஞ்சென  துயரம்
 பறந்தே  ஓடும்

 எல்லாம்  இனிக்கும்
 இனிப்பும் கசக்கும்
பொல்லா  எண்ணம்
 நில்லாது  போகும்

 நிலையாய் வாழ்வு
 நிலைத்திட  வேண்டி
 அலையும் மனதினை
 அடக்குதல் வேண்டும்

 கலையாய் மிளிரும்
 கடவுளை பணிவாய்
 அலைவாழ்  கடலிலும்
 ஆண்டவன் தெரிவான்

 தெரியும் அவனது
 திருவடி நாடு
 புரியும் உண்மை
 புறப்படு  மனிதா 

pottri pottri

எல்லா   உலகமும்
 இர்ருப்பாய்  போற்றி
 எம்மைக்  காக்கும்
 இறைவா  போற்றி

 போற்றிப்  பாடும்
 புதல்வன்  நானே
 பூமியை  ஆளும்
 புனிதரே  போற்றி

 போற்றி  துதிப்பார்
 பெருமையை  தானே
 எங்கிலும்  அமைதி
 இறைவனே  தருவாய்

 திருவாய்  தேனாய்
 திகழும் உருவே
 தேனார்  தமிழில்
 தினமுனை  தொழுவோம்

 வானோர்   மதியில்
 வடிவம்  நீயே
 வற்றாக்  கருணை
 வளமே  போற்றி

 எண்ணும்  எழுத்தும்
 இசையும்  நீயே
 எல்லாக் காலமும்
 இருப்பவன் நீயே

 பூக்கும் மலரின்
 புன்னகை  நீயே
 புண்ணியம்  யாவும்
 தருபவன்  நீயே

 யாக்கை  என்பது
 உனது  உடமை
 யாவும்  நீயே
 நலம் அருள்வாயே

 அருளின் உருவே
 அமைதி நிழலே
 இருளைப்  போக்கும்
 இனியா  போற்றி

 நாயேன் சிறியேன்
 நன்னிலை  அறியேன்
 தாயாய்  நீயே
 தாங்கிட வேண்டும்

 அருள்நிலை உலகில்
 அனைவரும் பெற்று
 பொருளுடன்  கூடிய
 புகழினைப் பெறுக

 எழுகதிர்  செல்வா
 எங்களின்  தலைவா
 இன்னுயிர்  கக்கும்
 இறைவனே  போற்றி

 போற்றி போற்றி
 புனிதனை  போற்றி
 எனது  எண்ணம்
 எடுத்து  உரைத்தேன்

 பார்க்கும்  யாவரும்
 பயன்பெற வேண்டும்
 பாட்டுடை  தலைவா
 உன்பாதம்  போற்றி 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

pillaiyaarpatti pillaiyaar

காணிக்கை  அளிப்போரும்
 கைகூப்பி  தொழுவோரும்
 மாணிக்க  விநாயகா
உன் மகிமை  என்னசொல்வேன்

உலகம்  காப்பதற்கு
 உச்சிப்பிள்ளை  நீயல்லவா
 பெயர்பெற்று  விளங்கும்
 பெருமானே  சரணமையா

 உடைபடும் தேங்காயும்
 உன்னத  மாலைகளும்
 நடைதனில் கிடப்பதனை
 நாங்கள்  அறிவோமே

 திருவரங்கத்து  பெருமாள்
 திருவுளம்  அறிந்ததினால்
 சிறுவனாய்  வந்து நீயும்
 சீரான  உதவி  செய்தாய்

 அரங்கன்  துயில்கொள்ள
 அழகான பாம்பணையும்
 ஆராரோ  பாடுகிறாள்
 அழகுமகள்  காவிரியாள்

 காவிரியும்  கொள்ளிடமும்
 கலக்கும்  திருவிடத்தில்
 அரங்கன்  கண்மலரும்
 அழகுதனை  என்னசொல்ல

 மாமன் துயிளிருக்க
 மருமகன்  மலையிருக்க
 சேமம்  பலபெற்று
 சிறப்பொடு  வாழ்வோமே

kanna

கண்ணா வருவாய்
 கவிதை  தருவேன்
 உன்னால்  தானே
 உன்னதம்  அடைவேன்

 எண்ணால் எழுத்தால்
 இருப்பவன்  நீயே
 மண்ணைத்  தின்றே
 மகிமைகள் செய்தாய்

 அலைமேல்  துயிலும்
 அழகன்  நீயே
 மலைமேல் நிற்கும்
 மாலவன்  நீயே

 கீதைப்  பொருளின்
 சாரம்  நீயே
 வேதம்  நான்கிலும்
 விளக்கமும்  நீயே

 கோபியர்  கூட்டம்
 கொஞ்சிடும் கோபாலா
 பாவியை  வதைக்கும்
 பரம்பொருள்  நீயே

 வருவாய்  வருவாய்
 வருவாய்  கண்ணா
 வளமே  வாழ்வில்
 நிறைவாய்  கண்ணா

 தினமும் உன்னையே
 தொழுவேன்  கண்ணா
 தேனின்  சுவையாய்
 திகழும்  கண்ணா

 உளநாள்  வரைக்கும்
 உனைநான் பணிவேன்
 உன்னடி  நிழலில்
 என்னைநீ  காப்பாய்

 வந்தவர்  உலகில்
 வரிசைகள்  கோடி
 வள்ளல்  சேவடி
 வருவேன்  நாடி 

murugaa


 வருவாய்  முருகா
 மனைவியர்  உடனே
 தருவாய்  முருகா
 சகலமும்  நலமும்

 அழகா  முருகா
 அம்ழ்தெனும்  தமிழே
 பழமுதிர் சோலை
 பதிவாழ்  அரசே

 செந்தூர் தனிலே
 செந்திலாய்நின்றாய்
 சேவல்  கொடியுடன்
 ஜகமே  வென்றாய்

 வயலூர்  தனிலே
 வாழும்  குமரா
 பயமே  வருமா
 பணிவார்  தமக்கே

 தணிகை மலையில்
 தர்மம்  காத்தாய்
 தாரணி  போற்றும்
 தகவினை  கொண்டாய்

 பழனி  மலையில்
 பழமாய்  நின்றாய்
 பக்தரைக்  காத்திடும்
 பக்குவம்  ஆனாய்

 கந்தா  கடம்பா
 கதிர்வேல்  முருகா
 சிந்தையில்  வாழும்
 செல்வக்  குமரா

 தமிழில் பாடியே
 தாளடி  பணிந்தேன்
 தனயனைக் காத்திட
 தமிழாய் வருவாய்

 உந்தனைப்  பாடிட
 என்னநான்  செய்தேன்
 எந்தனை  ஆளும்
 எழிலுடை  வேலா 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

punnai nalloor maari

தென்னை  வளம்  சூழ்ந்திருக்கும் -நல்ல
 தெம்மாங்கு  பாட்டு  கேட்கும்
 அன்னை முகம்  அருள்சுரக்கும் -எங்கள்
 அழகு புன்னை  மாரி யம்மா

 ஓங்கார  ஒலி  முழங்க -எங்கும்
 உடுக்கை  சப்தம்  தாளமிட
 பாங்காக  கொலு விருக்கும் -அந்த
பரம  சிவன்  நாயகியே

 தெண்டனிட்டு  வணங்கி  நிற்போம் -தினம்
 திருவிளக்கு  பூசை  செய்வோம்
 மண்டலத்தை  ஆண்டு நிற்கும் -சிறு
 மாயக்  கண்ணன் சோதரியே

 வேப்பிலையை  கையில் வைத்து -உலகில்
 விந்தை  பலவும்  செய்பவளே
 தப்பு  செய்த  கொடியவரை -நாளும்
 தண்டிக்க  வந்த  காளி நீயே

 கர்பத்தைக்  காத்து  நிற்கும் -தூய
 கர்ப்ப  ரட்சகி  தாயே
 அற்புதங்கள் நிகழ்த்தி  ஆளும் -இனிய
 ஆலவாய்  அழகி  நீயே

 பிள்ளை   அழைத்த  குரல் -ஏனோ
 பெருந்  தேவிநீ   கேட்கலையோ
 எல்லை  இல்லா  கருணையோடு -இன்றே
 எமைக்  காக்க  வாருமம்மா

seemaatti

இரவு  முழுதும்  விழித்தேன் -என்
 இமையில்  வைத்து  ரசித்தேன்
 உறவு வேண்டி  துடித்தேன் -நான்
 உன்னைத் தேடியே பிடித்தேன்

 பட்டப்  பகலில்  தூக்கம் -அந்த
 பாவை  பற்றியே நோக்கம்
 வெட்ட  வெளியில்  நடக்கும் -அதனை
வெளியே  சொல்லிட  தயக்கம்

 கண்கள்  தேடும் தினமும் -புதிய
 கவலை  கொள்ளுமே  மனமும்
 உன்னிடம்  உள்ளது  நற்குணமும் -நான்
 நீயின்றி இருப்பேனோ  ஒருகணமும்

 நீயல்லால் எனக்கில்லை  வாழ்வு -என்
 நிம்மதி  நீயின்றி  தாழ்வு
பாயென்ரு  சொன்னாலோ படுக்கை -என்
 பத்தினி  கையில்  நான் உடுக்கை

 நில்லென்று சொன்னாலும்  நிற்பேன் -நீ
 நிலவினைக்  கேட்டாலும்  கொடுப்பேன்
 தள்ளேன்று  சொன்னாலோ  தகிப்பேன் -உன்னை
 தலைமேலே  வைத்தே  துதிப்பேன்


 யாரெதிர்  சொன்னாலும் கேளேன் -இந்த
 இளமை  போனாலும் வாழேன்
கூரிய  வேல்விழி  காட்டி -என்னைக்
 கொல்லாதே  அழ்குச்  சீமாட்டி


manakkuranku

திருநாள்  தன்னில்  உனைக்  கண்டேன் -உன்
 திருமுக  அழகில்  மனம் கொண்டேன்
 வருநாள்  எதுவென  தினம் நொந்தேன் -என்
 வாழ்வே  நீயென  திடம் வைத்தேன்

 வில்லேனத்  தெரிவது  உன் புருவம் -பலர்
 வியந்து  பார்ப்பது  உன்  உருவம்
 துள்ளும்  அழகு  திகழ்  பருவம் -பிறர்
 துடிப்பதை  ரசிப்பது உன் கருவம்

 நாலடி  நடந்திடக்  கால்  வலிக்கும் -நீ
 நாவினால்  பேசினால் வாய்  மணக்கும்
நூலெனும்  இடையோ தினம் கணக்கும் -நாவில்
 நின்பெயர்  சொல்லிட  தேன்  சுரக்கும்

கைப்பிடி  உள்ளது  உனது இடை -எனது
கவனம்  இழப்பது  நினது சடை -
விற்பனை  செய்திட  வைத்த கடை - இனி
விலகி  ஓடுதே  எனது படை

அம்பினால்  துளைத்தது  எனது  உடல் -நீ
 ஆழம்  கண்டிடா  அழகுக் கடல்
 வெம்பித்  துடிப்பது  எனது மனம் -வீணே
 விலகி  ஓடுதல்  என்ன குணம்

 நானோ  தெருவில்  தினம் அலைந்தேன் -என்
 நாயகி  உன்னிடம் ஏன் தொலைந்தேன்
 மானே  மரகதமே  மனம்  இரங்கு -உனது
 மடியைத் தேடுது  என் மனக்குரங்கு

mannavaa

உலகம்  என்பது  உனதல்லவா -என்
 உள்ளம்  உனதுகோயில்லல்லவா
 நிலவும்  காற்றும்  நீயல்லவா -உன்னை
 நினைக்க  இன்பம்  வருமல்லவா

 கடலில்  அலையும்  நீயல்லவா -இங்கு
 கன்னித் தமிழின்  தாயல்லவா
 உடலில் உயிரும்  போலல்லவா -என்றும்
 உலகில்  தெரியும் நிஜமல்லவா

 வாழும்  காலம் நீயல்லவா -நமக்கு
 வாழ்வு தரும் பொருள்ளல்லவா
 தாழ்வும் உயர்வும்  வருமல்லவா -மண்ணில்
 தர்மம்  காக்கும் நிலையல்லவா

 கற்பு  என்பது  பெண்ணல்லவா -எங்கும்
 காலம் நேரம்  சரியல்லவா
 அற்புதம்  என்பது உணர்வல்லவா -நல்ல
 அழகன்  என்பதும் உண்மையல்லவா

 ஆசை என்பது தீதல்லவா -மன
 அமைதி  என்பது நிறையல்லவா
 வேஷம்  போடுதல்  தவறல்லவா -இனி
 விவரம்  அறிதல்  நலமல்லவா

 கருணை என்பது  நீயல்லவா -அந்த
 கண்ணன் பெயரும் உனதல்லவா
எண்ணித  துதிப்பது  நானல்லவா -நான்
 எல்லாம்  பெற்றிட  வா மன்னவா 

padumai

நிலவை  வானம்  வெறுக்குமோ -நம்
 நிழலை  பூமி மறுக்குமோ
 கடலை  அலைகள் வெறுக்குமோ -நல்ல
 கவிதை  என்றும் கசக்குமோ

 கண்கள்  காதல்  வெறுக்குமோ -விழி
 காணும்  காட்சி  மாறுமோ
 பெண்கள்  ஆசை  குறையுமோ -உலகில்
 பெருமை  சிறுமை ஆகுமோ

 அழகு  என்பது  நிலைக்குமோ -உண்மை
 அன்பு என்பது  குறையுமோ
 பழக  நட்பு  தவறுமோ -நல்ல
 பாதை எதுவெனப்  புரியுமோ

 நீர்   நிலையாய்  நிற்குமோ -கொண்ட
 நேசம்  மோசம் செய்யுமோ
 வேர்  மரமாய்  ஆகுமோ -நிலைத்த
 வெற்றி  தோல்வி  காணுமோ

 மேகம்  பூமியை  தொடுமோ -விரிந்த
 வானம்  என்றும்  சுருங்குமோ
 காகம்  கருமை மாறுமோ -வெறும்
 கானல் கைகளில்  சேருமோ

 முதுமை  இளமை  ஆகுமோ -வரும்
 மோகம் முழுமை  கொள்ளுமோ
 பதுமை  படைகளை  கொல்லுமோ -அறிவுப்
 பசியை  சோம்பலும் வெல்லுமோ 

tamil

தாயாம்  தமிழைப்  பாடுவேன் -என் 
 தலைவன்  நீயென  ஆடுவேன் 
 வாயால்  நல்லன பேசுவேன் -கொடிய 
 வன்முறை தவறெனக் கூறுவேன் 
 
 உறவின் பெருமை  சொல்லுவேன் -உயர் 
 குணம்  அனைத்தையும் அள்ளுவேன் 
 திறமையால்  பெரும் பணம்  ஈட்டுவேன் -உன் 
 திருவடி மேலெனக் காட்டுவேன் 
 
 நிலவில் மாந்தர்  நடப்பதும் -நாம் 
 நினைக்கையில்  விண்ணில்  பறப்பதும் -இங்கு 
 வளர்ச்சி  தந்திட்ட  மலர்ச்சியே -இதை 
 எண்ணிட  வருவது மகிழ்ச்சியே 

paravai

அறிவால்  உன்னைக் கண்டேன் -தமிழ்
 அமுதாம்  தேனை  உண்டேன்
 சிறகால் வானம்  செல்வேன் -பின்
 சிலநாள்  திரும்பி  வருவேன்

 கடலைக்  கடந்து பறப்பேன் -வந்த
 கவலை  யாவும் மறப்பேன்
 உடலை உடமை  துறப்பேன் -தூய
 உன்னடி மலராய்  கிடப்பேன்

 பறவை போலவே திரிந்தேன் -வரும்
 பசி  தூக்கமும்  மறந்தேன்
 உறவை  பகையை  பிரிந்தேன் -என்றும்
 உன்புகழ்  பாடவே  நினைந்தேன்

 நன்றி  மறந்தோர் நடுவே -நான்
 நலமாய்  நற்பணி  புரிவேன்
 அன்றும் இன்றும்  என்றுமே -நல்ல
 அன்புதான் உலகினை  ஆளுமே

 பெண்ணின் உயர்வினைப்  போற்றுவேன் -அவர்கள்
 பெருமையால்  வாழ்ந்திட  தூண்டுவேன்
 கண்ணாம்  கற்பென  சாற்றுவேன் -வரும்
 காலங்கள்  நமதென  மாற்றுவேன் 

naayagi kalaiezhil

நலம்  தரும்  நாயகியே  அம்மா -நான்
 உன்னை பாடிட  வரம் தருவாய் அம்மா
 இதம் பெரும் சுகமெலாம் உன்னருளே -நீ
 எளியரைக்  காத்திட  வரம் அருள்வாய்

 மலையத்துவசன்  பெற்ற எங்கள் மகராசியே -எங்கள்
 மாநகர்  மதுரையில்  உந்தன் அரசாட்சியே
 கலைமிகு  காஞ்சி  ஆளும் காமாட்சி-தமிழ்
 கவிதைப்  பொருளில்  வாழும்  காந்திமதி

 சமயபுரம்  கோயில்  கொண்ட மகமாயி -நீ
 அபயகரம்  தந்து  காக்கும்  அருள்மாரி
 இமயவான்  பெற்ற எங்கள் இளவரசி -அந்த
 எல்லா  உலகம் முழுவதுன்  அருளாசி

 பாவினில்  பாடி  வைத்தேன்  பத்ரகாளி -கொடும்
 பாவிகளை  அழிப்பதில்  நீயோ  படுசூலி
 அண்டத்தை  ஆட்டி வைக்கும்  ஆதிசக்தி -அந்த
 ஆலமுண்ட சிவனாரின்  பாதி  நீயே

 சீர்நடை நடந்து  வரும் சீமாட்டி -எமது
 ஜீவன் கடைத்தேற  வரும் வழிகாட்டி
 பேருடன் வாழ்வு தரும் பெருமாட்டி -இந்த
 பிள்ளையை  வாழ  வைப்பாய் அருள்கூட்டி

 என்ன தவம் செய்த  தாலே -இந்த
 மண்ணில் நாம் பிறந்து வந்தோம்
 கண்ணனுக்கு பின்னே  பிறந்த கற்பகமே -அடியேன்
 கவிதையில்  நின்னைப்  பாட அற்புதமே

சனி, 13 ஜூலை, 2013

thiruvadi

அறிவால்  உலகம்
 அறிந்தேன்  இந்நாள்
 ஐயா  நீதான்
அணைப்பாய்  எனையே

 விதியே  என்று
 வினையால்  வந்தேன்
 கதியே  பெறவே
 கவிதை வடித்தேன்

 துதியே செய்வேன்
 தூயா  உன்னையே
 நிதியே  அருள்வாய்
 நேரில்  வருவாய்

 தமிழால் வளர்ந்தேன்
 தாயால் செழித்தேன்
 அமிழ்தாம் உன்னையே
 அன்பால் பணிவேன்

 நன்றி  நினைத்தேன்
 நாயாய் உழைத்தேன்
 அன்றும் என்றும்
 உன்னருளால்  வாழ்வேன்




பேரும்  புகழும்
 பிரிவும் சுகமும்
 சீராய்  எனக்கு
 தந்தாய்  நீயே

 பெண்ணால் பிறந்தேன்
 பெருமை அடைந்தேன்
 உன்னால்  அன்றோ
 உலகில் மலர்ந்தேன்

 கண்ணா உன்னிடம்
 கருணை இலையோ
 என்னைக் காக்க
 என்றுநீ  வருவாய்

 அந்நாள்  காண
 ஆசை மிகுதே
 அருளே  திருவே
 அடியேன் சரணம்

 கண்ணன்  திருவடி
 காக்கும் மறுபடி
 அதனைப்  பற்றியே
 அனைத்தும் பெறுவேன் 

sinthanai

காலம்  மாறிப் போனாலும் -அந்தக்
 கடவுள்  என்னை அழைத்தாலும்
ஞாலம்  என்பது உள்ளவரை -நானும்
 தமிழால் நிலைத்து நிற்ப்பேன்


 இரவும்  பகலும்  எனக்கில்லை -வரும்
 இன்ப  துன்பம்  இல்லாநிலை
 உறவும் பகையும் செல்லாது -உலகில்
 உண்மை  என்றுமே  மாறாது

 மாறும்  உலகம்  மாறிடவே -நம்
 மக்கள்  சிந்தனை செய்வாரே
 ஏற்றம்  இன்னும் பெறுவதற்கே -அவர்கள்
 இரவு  பகலாய்  உழைப்பார்கள்

 உழைப்பின் பலனை அடைவாரே -நாளும்
 உயரிய  நிலையினை பெறுவாரே
 கலக்கம்  இன்றியே மகிழ்வாரே -அந்த
 கண்ணனின் அருளால் உயர்வாரே

 பெண்ணின்  பெருமை அறிவாரே -வாழ
 பிழைகள்  எதுவும் செய்யாரே
 மண்ணின் குணத்தை  மதிப்பாரே -தாயை
 மதித்து  என்றும் நடப்பாரே

 நன்றி  என்பதை  மறவாரே -இங்கு
 நமக்கு  நாமென நினைப்பாரே
 ஒன்று  பட்டே  நிற்பாரே -என்றும்
 உண்மை வழியினில் நடப்பாரே

தமிழின்  பெருமை அறிவார்கள் -வெறும்
 தலைக்கனம் எதுவும் கொள்ளார்கள்
பொய்  என்பதே  தெரியார்கள் -இன்னும்
 பெரிய  புகழினைப் பெறுவார்கள்

suthanthiram

அந்தர   வானில்  பறந்து -வந்து
 அமெரிக்க  மண்ணை மிதித்துவிட்டேன்
 சுந்தர  மிகுந்த  சோலைகளே -நல்ல
 சுத்தமாய் இருக்கின்ற சாலைகளே

 ஆண்டது  ஆங்கில  அரசாங்கம் -அதனை
 அடியோடு  எதிர்த்தது  மக்கள் படை
 மீண்டது சுதந்திரம் நாட்டினிலே -இதனை
 மேதினி அறிந்தது விரைவினிலே

 ஆணும் பெண்ணும் சமஉரிமை -இதை
 அறிந்து நடப்பது  நம்பெருமை
 தேனினுமினிய   மொழி பேசி -பலர்
 சேர்ந்து  வாழ்தலை கண்டேனே

 எந்த  துறையிலும்  முதலிடமே -உள்ள
 எல்லா  ஆற்றலும் இவ்விடமே
 சொந்தம் போலவே நம்மிடமே -தினம்
 சோதரராய்  வாழ்வதும் இவர் குணமே

 வானம்  அறிந்தது  இவராற்றல் -சிலர்
 வைது  தீர்ப்பது   பெரும் கூச்சல்
ஞானம்  இன்னும் பெறுவதற்கே -நமது
 நாட்டிற்கு இன்னமும்  வருகின்றாரே

 இவரைப் போலவே நாமுயர்வோம் -நம்
 இந்தியா  வளர்ந்திட உழைத்திடுவோம்
உள்ளதை  நாட்டிற்கு ஈந்திடுவோம் -உலகில்
 உன்னத நிலையினை பெற்றிடுவோம் 

வியாழன், 4 ஜூலை, 2013

Enthiya naadu

வாழ்க  வாழ்க  வாழ்க  வாழ்கவே -நம்
 வள்ளலார் பிறந்த பழம் பெரு நாடு
 சூழம்  நல்வளங்கள்  துலங்கும்  நாடு -இனிய
 சுதந்திரம் கண்ட  இந்திய  நாடு

 அன்பும் அறிவும்  நிறைந்த  நாடு -தூய
 அருளிலே உலகை ஆளும் நாடு
 அண்ணல்  காந்தி  பிறந்த நாடு மனித
 ஆற்றலும் உஊக்கமும் வளர்த்த  நாடு

 துன்பம் நீங்கிட தொழில்கள் ஓங்கிட -கை
 தொட்டது  யாவும் துலங்கும்  நாடு
 மண்ணில் பொன்னை  விளைக்கும்  நாடு -நல
 மங்கையர் கற்பினை  மதிக்கும்  நாடு

 சிங்க  மறவர்  சிலிர்க்கும்  நாடு -தமிழ்
 செம்மொழி பெருமை  செறிந்த  நாடு
 மங்கல  நதிவளம்  பொங்கிடும்  நாடு -இந்த
 மாபெரும்  நாடிதை  மதித்து  நீபாடு

  இறையின் பெருமை  அறிந்திட்ட  நாடு -என்றும்
 ஈகையில் எவரையும்  இணைக்கும்  நாடு
 குறையை  நிறையென  கொள்ளும்  நாடு -இங்கு
 கொடிய   பசிப்பிணி   தீர்த்திடும்  நாடு

 புத்த்ர்  பிறந்த  புண்ணிய  நாடு -நமது
 போதி  தர்மர்  வாழ்ந்த  வீடு
 சத்திய  நெறி  சார்ந்த  நாடு --மனதில்
 சமத்துவ  எண்ணம்  மலர்ந்த  நாடு

 எங்கும் எதிலும்  எமது  நாடு -இன்னும்
 ஏற்றம்  பெற்றிட  இனியென  தேடு
 பொங்கும்  கடல்கள்  சூழும்  நாடு -பல
 புதுமையில்  உலகையே  வெல்லும்  நாடு 

sorkkam

அலையாடும்   நீரில் -சிறு
 படகு   ஓடும்
 அழகான  பெண்மேல் -நம்
 விழிகள்  தேடுமே

 கலையான  கல்கூட -பின்பு
 சிலை  ஊகுமே ஆகுமே
 காதல்  பெயரும் -உலகில் -
 என்றும்  நிலையாகுமே

 வரவென்று  வந்தால் -இங்கு
 அதுவும்  செலவாகுமே
 வாழ்கவென சொன்னால் -நம்
 வளம்   கூடுமே

 நிலையாக  எதுவும் -மண்ணில்
 நிஜம்  ஆகலாம்
 நேரில்  தெரியும் -நீர்
 குமிழ்கள்  மறைவாகலாம்

 ஆணென்று  வந்தால் -அங்கு
 பெண்  தோன்றுமே
 தானென்று  ஆடினால் -முடிவில்
 தலை  தாழுமே

 கற்பென்று  சொன்னால் -நெஞ்சில்
 களி   கூடுமே
 காணாத சொர்க்கம் -நமக்கு
 கைவரக்  கூடுமே

 இருளென்று  வந்தால் -நல்ல
 ஒளி     பரவுமே
 இறைவனென்று துதித்தால் -உரிய
 வழி     காணலாம் 

ஞாயிறு, 30 ஜூன், 2013

varalaaru

கூரான  விழியை  காட்டி -நிதம்
 கொல்லாதே  என்னை  என்பேன்
 வேறேதோ  சொல்ல  வந்தால் -உனது
 விழியாலே என்னை  வெல்வாய்

 தேனூறும்  இதழைக் கொண்டு -இங்கு
 தினந்தோறும்  தொல்லை  செய்வாய்
 வானூறும்  மதியை  போல -ஏன்
 வந்துவந்து  நீதான் போகின்றாயே

 ஆராரோ  என்னை  வெல்ல -நன்கு
 அலைந்தார்கள்  அந்த  நாளில்
 சீர்செய்த  உடலை  வைத்து -எனது
 சிந்தையை  கலங்க  வைத்தாய்

 தப்பு   எதுவும்  செய்ததில்லை -பெற்ற
 தாய்   சொல்லை  மறக்கவில்லை
 உப்பு  இல்லா  பண்டமாக -என்னை
 ஊரிலே  அலைய  விட்டாய்

 வில்லான  புருவம்  பெற்று -எழுதிய
 விதியினை  மாற   வைத்தாய்
 கல்லாத  மூடன்  போல -உலகில்
 கண்ணீரில்  திரிய வைத்தாய்

 இதயத்தில் கோவில் அமைத்தேன் -அதில்
 இனியநீ  தெய்வம்  ஆனாய்
 உதயத்தில்  எழுந்து  நானும் -அன்பால்
 உந்தனுக்கு  பூஜை  செய்வேன்

 வாழ்கின்ற நாட்கள்  முழுதும் -உனது
 வரலாறு  பாடி  வைப்பேன்
 வேல்  கொண்ட முருகன் -அருளால்
 வெற்றியை  நான் ருசிப்பேன் 

புதன், 26 ஜூன், 2013

paranthaaman

எனக்கென்ன  என்றே  நானும் -உன்னால்
 இருந்தேனே  அந்த  நாளில்
 இறைவா  உன்கருணை  தன்னால் -இங்கு
 நானும்  பிறந்தேன்  அன்றோ

 சீரான அழ்கினைச்  சிறிதேனும் ரசித்தேனில்லை -உன்
 திருவடி தன்னை  தினந்தோறும்  மறந்ந்தேனில்லை
 கூரான  சொல்லை  கொண்டு -பல
 குடும்பத்தை  கெடுத்தேன்  இல்லை

 வேறான  மாந்தர்  வாழ -நாளும்
 விவரங்கள்  பலவும்  சொல்வேன்
 பாராளும்  எங்கள் பரந்தாமனே -என்றும்
 பணிவேனே  உந்தன்  பாதம்

 பொல்லாத  எண்ணம்  கொண்டோர் -இந்த
 பூமியில்  நிறைய  உண்டு
 நல்லோர்கள்  நலமாய்  வாழ -நீ
 நாளையே  வருவாய்  இங்கே  

 ஆதாயம்  பெறவும்  வேண்டி -வீணே
 அநியாயம்  நிறைய  செய்வார்
 தீதான  செயலை  செய்தோர் -உலகில்
 திறமையாய்  வாழ்தல்  கண்டேன்

 காலத்தின் கோலம்  போக்க -ஒருநாள்
 கண்ணா நீ  மீண்டும் வேண்டும்
 அலையாடும்  கடலில்  துரும்பென என்னை
 ஆட்டி  வைத்து  சிரிக்கின்றாயே