ஞாயிறு, 30 ஜூன், 2013

varalaaru

கூரான  விழியை  காட்டி -நிதம்
 கொல்லாதே  என்னை  என்பேன்
 வேறேதோ  சொல்ல  வந்தால் -உனது
 விழியாலே என்னை  வெல்வாய்

 தேனூறும்  இதழைக் கொண்டு -இங்கு
 தினந்தோறும்  தொல்லை  செய்வாய்
 வானூறும்  மதியை  போல -ஏன்
 வந்துவந்து  நீதான் போகின்றாயே

 ஆராரோ  என்னை  வெல்ல -நன்கு
 அலைந்தார்கள்  அந்த  நாளில்
 சீர்செய்த  உடலை  வைத்து -எனது
 சிந்தையை  கலங்க  வைத்தாய்

 தப்பு   எதுவும்  செய்ததில்லை -பெற்ற
 தாய்   சொல்லை  மறக்கவில்லை
 உப்பு  இல்லா  பண்டமாக -என்னை
 ஊரிலே  அலைய  விட்டாய்

 வில்லான  புருவம்  பெற்று -எழுதிய
 விதியினை  மாற   வைத்தாய்
 கல்லாத  மூடன்  போல -உலகில்
 கண்ணீரில்  திரிய வைத்தாய்

 இதயத்தில் கோவில் அமைத்தேன் -அதில்
 இனியநீ  தெய்வம்  ஆனாய்
 உதயத்தில்  எழுந்து  நானும் -அன்பால்
 உந்தனுக்கு  பூஜை  செய்வேன்

 வாழ்கின்ற நாட்கள்  முழுதும் -உனது
 வரலாறு  பாடி  வைப்பேன்
 வேல்  கொண்ட முருகன் -அருளால்
 வெற்றியை  நான் ருசிப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக