வியாழன், 12 செப்டம்பர், 2013

thozhi-166

ஒருநாள்  வந்தான்  இரவில் -என்
 உடலில்  கலந்தான்  உறவில்
 மறுநாள் வருவானென நினைத்தேன் -ஏனோ
 வரவே  இல்லையே  தோழி

 சிலநாள்  தனியே  அழுதேன் -அவனை
 சிந்தையில்  வைத்தே  தொழுதேன்
 திருநாள்  மறத்தல்  சரியா -எனக்கு
 தேறுதல்  சொல்வாய்  தோழி

 ஈருடல்  ஒன்றென  ஆனோம் -அந்த
 இன்பத்தில்  எங்கயோ  போனோம்
 போனவர்  வந்திட  இல்லை -நான்
 புழுதியில்   கிடக்கின்ற  முல்லை

 கண்களில்  மழைநீர்  கொட்டும் -அவன்
 காதலில்  என்மனம்  வாட்டும்
 பெண்களில்  நானொரு  பேதை -தினம்
 புலம்பித்  தவிப்பது  காதை

 உடலை  ஒருநாள் துறப்பேன் -அந்த
 உத்தமனை  எப்படி  மறப்பேன்
 வயலைக் காப்பது  மேகம் -ஏனோ
 வாட்டத்தில் உருகுதே  தேகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக