வியாழன், 7 நவம்பர், 2013

காதல்மலர் -210.

அலையாடும்  கடல்  மீது  சிறு படகாகினேன் -உன்
 அருள்வெள்ளம்  எனில் பாய்ந்து  தடுமாறினேன்
 கலையாத    மெருகொடும்   எழில்வன்னமே -நினைக்
 கண்டாலும்   எனிலூறும்  புது  வெள்ளமே

 நிலையாக  புதுவாழ்வு  நிதம்  காணலாம் -பிறர்
 நினையாத  செல்வங்கள்  நாம்  சேர்க்கலாம்
 விலைகேட்டு  வந்தோர்கள்  விரைந்து ஓடுவார் -இந்த
 விவரம்  அறிந்தாரோ  தடம்  மாறுவார்

 அழகிற்கே  அழகென்று  பெயர்  பெற்றவள் -நீ
 அமுதூட்டி  நலம்  சேர்க்கும்  விருந்தானவள்
 களைப்பினை  மாற்றும்  நல்ல  மருந்தானவள் -நான்
 கவிபாடத்  தமிழினில்  வெல்லப் பொருளானவள்

 பார்க்கின்ற  மனிதர்க்கு  கடும்பசி  ஊட்டுவாள் -காதல்
 பசியாற  வந்தோர்க்கு  துயர்   கூட்டுவாள்
 போர்க்கருவி  போலாகும்   பொன்மேடையே -இந்தப்
 புவிவெல்ல  நீ காட்டு  உந்தன்  கண்ஜாடையே

 வாழ்நாளும்  உன்கூட  நான்  வரவேண்டுமே -அந்த
 வற்றாத  தேனாறு   நிதம்  வேண்டுமே
 ஒருநாளில்  எனைத்  தேடி  நீயும்   வரலாகுமா -உன்
 இதயத்தில்   என்காதல்   மலர்  பூக்குமா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக