திங்கள், 4 நவம்பர், 2013

அழகோவியம் -206 .

மலைமீதில்  வசிக்கின்ற  மாதவா -உன்னை
 மனதார   நினைத்தாலே  வளம்  சேருமே
 அலைபாயும்  கடல்மீது  வாழ்கிறாய் -நினது
 அடியார்கள்  மனவீட்டில்  ஆள்கிறாய்

 நிலையாக  நிற்பது     எழில் கோலமே -தினம்
 நெஞ்சாரத்   துதித்தாலே  சுகமாகுமே
 கலையாவும்  குடிகொண்ட  அழகோவியம் -உன்னை
 கண்டாலே  உருவாகும்  பலகாவியம்

 திருமகள்  உறைமார்பும்  உனதல்லவா -திவ்ய
 திருநாமம்  வெற்றிக்கு  வழியல்லவா
 ஒருநாளும்  மறவாமல்  உனைப் பாடுவோம் -உனது
 ஒப்பற்ற   புகழ் சொல்லி   நாம் ஆடுவோம்

 அவதாரம்  பலதந்த   அருளாளன் நீ -என்றும்
 அடியாரைக்   காக்கின்ற  அமுதமும நீ
 புவனங்கள்    உன்சொல்லுக்  கிசைவாகுமே -இங்கு
 புண்ணியம்  உன்வாசலில்  தவமாகுமே

 காக்கின்ற   உனைத்தேடிக்  கரையேறலாம் -உன்
 கண்பட்டால்  பாவங்கள்  கரைந்தோடலாம்
 பாரதப்  போர்  வென்ற  பரந்தாமனே -உலகில்
 பக்தரைக்   காப்பதுன்  திருநாமமே

 திருமாலே  பெருமாளே  நீ தேனானவன் -மண்ணில்
 திக்கற்ற    பல பேருக்குத்   தாயானவன்
 வரவேண்டும்  புவிமீதில்   திருநாளிலே -எங்கும்
 வழிந்தோடும்  இன்பங்கள்  அப்போதிலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக