ஞாயிறு, 20 அக்டோபர், 2013

gangaik karai -177.

கண்ணிலே  தெரிவதென்ன  கண்ணம்மா -அந்தக்
 கண்ணனின்  திருமேனி  கண்ணம்மா
 பெண்ணிலே  பேரழகி  தானம்மா -வாய்
 பேசாத  பொற்சிலை  நீயம்மா

 நிலவுவரும் நேரத்திலே  கண்ணம்மா -உனது
 நெஞ்சம்  விம்மிப்  பொங்குவதேன் கண்ணம்மா
 கனவில் வந்தசுகம்  கண்ணம்மா -இனி
 காலத்திலும்  நிலைத்திருக்கும்  கண்ணம்மா

 புல்லாங்குழல் இசைத்தால் கண்ணம்மா -ஏனோ
 பொழுதெலாம்  மயங்குகிறாய்  கண்ணம்மா அள்ளக்
 குறையாதவன்  தான் கண்ணம்மா -தினம்
 அவனை நினைத்து  ஏங்குகிறாய்  கண்ணம்மா

 கங்கைகரைத்  தோட்டத்திலே  கண்ணம்மா -அன்று
 கண்ணனின்  மடிபுகுந்தாய்  கண்ணம்மா
 தங்கமெனத்  ஜோளிக்கிறானே  கண்ணம்மா -அவனைத்
 தழுவியணைத்து  மகிழ்ந்திடடி  கண்ணம்மா

 மாடுமேய்க்க  வந்தவன்  கண்ணம்மா -இள
 மனதில்வந்து  மேய்கிறானே  கண்ணம்மா
 கூடு விட்டு  கூடுபாய்ந்தான்  கண்ணம்மா -இந்தக்
 கொள்ளையை  எங்கு சொல்வேன்  கண்ணம்மா

 இரவுக் காலப்  பொழுதினிலே  கண்ணம்மா -இன்னும்
 எத்தனை  நாள்  காத்திருப்பாய்  கண்ணம்மா
 உறவுக்காக  துடிதுடிக்கும்  கண்ணம்மா -உடனே
 உன்னையாள  வந்திடுவான்  பாரம்மா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக