வேலோடு வருவாயா வேல் அய்யா ---வந்த
வினை தீர்க்க வருவாயா சொல்லையா
பாலோடு பழம் யாவும் உனக்காகவே ---சூழும்
பழி தீர்க்க வர வேண்டும் எனக்காகவே
குற வள்ளி தினை காக்க வனம் ஏகினாள் ---நீ
குன்றாத காதல் கொண்டு அவளின் துணையாகினாய்
மறவாத உன்னடியார்கள் மனம் வாழ்கிறாய் ---புள்ளி
மயிலேறி வலம் வந்து இந்த நிலம் ஆள்கிறாய்
தமிழாகி உலவுகின்ற எங்கள் சரவணனே ---பார்வதி
தாயின் திருக் கரத்தாலே வேல் வாங்கினாய்
அமிழ்தமாம் உந்தன் திருமேனி அழகானது ---உன்
அடியார்கள் தம் வாழ்வு என்றும் நலமானது
பகை வெல்ல திருக் குமரா நீயும் படை தாங்கினாய் ---வரும்
பகை வர்கள் மருண்டோட கணை ஏந்தினாய்
நகை சிந்தும் உன் எழில் முகம் நலம் சேர்க்குமே ---தெய்வ
நாயகா உன்குரலோசை எவர்க்கும் பலம் நல்குமே
முருகா என்றோத விதி மாறுமே ---வரும்
மோகங்கள் நம்மை விட்டுப் பறந்தோடுமே
ஒருக்காலும் மறவாதீர் மயில் வேலனை ---அவனை
உளமாற துதித்தாலே பொருள் வளம் சூழுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக