வியாழன், 11 ஜூலை, 2019

காமன் 695

நெஞ்சில்        உள்ளவர்    ---எனோ
நில்லா து     எங்கோ     சென்றாரே
கொஞ்சும்    பூங்கிளி     இன்றே    ---நீ
கூட்டி      வாயேன்     என்னிடம்

அன்பைத்    தந்தவர்    அலட்சியம்   செய்ததேன்    ---என்
கண்ணில்     கலந்தவர்    காத   தூரம்    போனதேன்
உன்னையன்றி    இதனை     உரைப்பது   யாரிடம்   ---இங்கே
பெண்மை    தவிக்குதே     பேதமை     சூழ்ந்ததே

சிரிக்கும்      அழகிலே   என்சித்தம்     இழந்தேனே   ---கண்
சிந்திடும்      முத்துக்கள்  அவர்     சிந்தையை    உருக்காதோ
எரித்திடும்     நிலவே    எனோ  என்னைக்     கொல்கிறாய்   ---மீண்டும்
என்னவர்      வருவாரென    ஏங்கி     நிற்றல்      சரிதானா

இரவா       பகலா      எனக்கு      ஒன்றும்      புரியல்லயே   ---என்
இருவிழிகள்      மூடி      எத்தனையோ       நாளாச்சு
உறவு     கொண்ட      உத்தமன்  இங்கு     ஓடி    வரக்    கூடாதா    ---என்
உள்ளம்    நொந்து      வாடுதல்     உலகில்     என்ன    நீதியோ

சென்றவர்       என்னிடம்    திரும்பிட        வேண்டும்    ---இந்த
சேயிழை     கண்களில்     தேன்மழை     வேண்டும்
கன்றிய       என்னுடல்      களிப்புற     வேண்டும்    ---அந்த
காமனின்     அருளால்   எனது      காதல்    வெல்ல    வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக