கனியில் ஊ றும் சுவையும் நீயே --என்
கருத்தில் மிளிரும் தெளிவும் நீயே
பனியில் மலரும் பூவும் நீயே --நினது
பாத மலர் பணிந்தேன் சரணம்
சிரித்துச் சிவந்த அழகு முகமும் --எங்கள்
சீவன் வாழும் நல் வழியைச் சொல்லும்
பறித்த மலரைப் போலப் புதுமை --நீ
பக்கம் வந்தால் எங்கும் செழுமை
இரவு பகலாய் எண்ணித் துதிப்பேன் --நீ
இருக்கும் கோயில் வாசல் மிதிப்பேன்
கறந்த பாலைப் போல இனிமை --எங்கள்
கருணா மூர்த்தி உந்தன் பெருமை
அழைத்தால் அங்கே உடனே வருவாய் --அவர்க்கு
அபயம் அளித்துக் காவல் காப்பாய்
பிழைகள் பொறுக்கும் பெம்மான் நீயே --உன்னை
புரிந்து கொண்டால் பொழுதும் இனிதே
எண்ண எண்ண இன்பம் தோன்றும் --நல்ல
ஈகைக் குணமே உயர்வை அளிக்கும்
கண்ணா உன்னையும் என்றும் மறவேன் --நீ
காட்டும் வழியில் இன்றே நடப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக