சிந்தையில் கந்தனை வந்தனை செய்வாய் --அவர்
முந்தைய வினைகளை முழுவதும் அழிப்பார்
சொந்தமும் அவரே நல்ல சுகங்களைத் தருவார் --எந்த
நாளும் நினைத்திட வருமே இன்பங்கள் கோடி
அன்பிற் கிறங்கி நம் ஆறுமுகம் வருவார் --வாசல்
வந்தவர்க் கருள்பவர் வள்ளி மயில் வேலன்
தென்னவர் மனதில் தெய்வமாய் இருப்பார் ==அந்த
தேவி மீனாட்சி தந்த திருமகனாம் சிவபாலன்
வேலினைக் கண்டால் உலகில் வினைகள் பறக்கும் --நம்
வெற்றி வேலனைத் தொழுதால் வெற்றி பல கிடைக்கும்
காலங்கள் தாண்டி வாழும் தமிழ்க் காவியம் ஆனவர் --இங்கு
கந்தன் என்னும் சொல்லே நம்மைக் காத்திடும் கவசமே
நாளுமே நினைத்தால் செல்வ நாயகன் வருவார் --உள்ள
நல்லவர் நடுவில் நல்ல நண்பனாய்த் தெரிவார்
ஆண்டியும் அவரே நமக்கு அரசனும் குகனே --தனது
அன்பினால் உலகை நன்கு ஆள்பவர் அவரே
கந்தனை நினைத்து வந்த கவலைகள் மறப்பாய் --உந்தன்
சிந்தையில் வைத்து செந்தில் வேலனைப் பணிவாய்
வந்தனை செய்தவர் வாழ்வினில் பெறுவது வெற்றியே --அவரை
வணங்கிட வளங்கள் வந்திடும் உன்னைச் சுற்றியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக