ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மாதவன் 590

 கண்ணில்    மின்னும்    வண்ணக்     கண்ணனே  ---நீ
 கன்னியர்     மனதை      வெல்லும்    மன்னனே
 உன்னில்    என்னைக்    கண்டு   கொள்ளும்   முன்னமே ---நான்
 உழன்று    தவித்தது    உண்மை     எந்தன்    அண்ணலே

 வெண்ணெய்     திருடும்     அந்த    வேளையில்  --உன்னை
 வேகமாய்     அன்னை     கடிந்த     போதிலும்
 மண்ணினைத்      தின்று   அன்று   மாயம்     காட்டினாய்  --இங்கே
 மனமயக்கம்      நீக்கி      எமக்கு     அருள்      கூட்டினாய்

 மலையைக்     குடை யாய்ப்     பிடித்த     மாயமே  ---உன்னை
 மனதில்     நினைத்தவர்   பெறுவது        நல் உபாயமே
 கலைகளில்    சிறந்தவன்     கண்ணன்    அல்லவா  --நீயும்
 காதல்     புரிந்த   பல கதைகள்    நானும்     சொல்லவா

 ஏழைகள்      மனதில்    என்றும்      உள்ளவன்    --உலகில்
 ஏங்கியே     அழுதவர்க்   கருள்புரியும்     நல்லவன்
 தாழை      மடலாய்   மணம்    பறப்பும்     மாதவன்  --உந்தன்
 தாளினைப்     பணிந்தால்    பயங்கள்     விலகி    யோடுமே

 கண்ணன்   பெயரைச்   சொல்லி    நாமும்    ஆடுவோம்  --அவன்
 கருணையை     தினமும்    போற்றிப்      பாடுவோம்
 மண்ணகம்    காத்து     நிற்கும்      மகிமையே    -- நம்
 மக்கள்     மனதில்      என்றும்     உள்ளதும்    உண்மையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக