வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பன்னீர் 555

மாலையும்    நீயே    மங்கலம்   நீயே   --இங்கு
மங்கையர்    வணங்கும்   தங்கமும்   நீயே
சோலையில்   ஆடிடும்   சுந்தரம்   நீயே   --நம்
சொக்கத்    தமிழின்    சொர்ணமும்   நீயே

அம்பிகை    நீயும்    அருள்    புரிவாயே  --உன்
ஆலயம்    வந்தோம்    நீயும்   அகம்   மகிழ்வாயே
நம்பிக்கை  தந்து  நீ   நலிவைப்    போக்கிடுவாயே  --உலக
நாயகி     நீயே    நால் வகை   நலம்   அருள்வாயே

சிங்கத்தில்    வருகின்ற   செல்வியும்    நீயே  --எங்கும்
சீதள    நிலவாய்த்    திகழ்பவள்    நீயே
எங்களின்    குறைகள்   இனிதே    தீர்ப்பாய்  --வாடும்
ஏழையைக்    காக்கும்    நல்ல    சீலமும்    நீயே

சங்கரன்   மனைவி    நம்  சரவணன்    அன்னை  --உலகில்
சாற்றிடும்    வேதத்தின்    தத்துவம்   தாயே
எங்கிலும்    நிறைந்த    ஈஸ்வரி    நீயே   --இங்கு
இக பர    சுகமதை     எங்களுக்  கருளிடுவாயே

கண்ணீர்    துடைத்து    காத்திட    வருவாய் ---உந்தன்
காலடி    தொழுதோம்    கதிபெறச்    செய்வாய்
பன்னீர்    மணக்கும்    பங்கயச்    செல்வி   --உன்
பாதம்    பணிந்தோம்    பலன்    தருவாயே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக