வியாழன், 17 ஜூலை, 2014

விடுகதைகள் 281.

கவியினில்    ஆடும்
 கன்னியர்    நாடும்
 மழலையர்  விரும்பும்
 மன்னவன்  யாரோ
      நிலவு

 வானம்    தொட்டு
 பூமி    வரைக்கும்
 கானம்    பாடிடும்
 கந்தர்வன்   யாரோ
     மழை

 கண்ணைப்    பறிப்பான்
 காதைக்    கிழிப்பான்
 பின்னல்   நடையில்
 பின்னியே   எடுப்பான்
     இடி மின்னல்

 கோட்டையில்    இருப்பான்
 குறும்புகள்    செய்வான்
 சேட்டைகள்    புரிவான்
 சிண்டுகள்    முடிவான்
      நாக்கு

 பகலில்    வருவான்
 பாசம்     பொழிவான்
 இரவில்    தெரியான்
 அவன் பேர்   என்ன
      சூரியன்

 கரைகள்    உடையான்
 கண்ணியம்    மிக்கான்
 கருணையில்    மன்னன்
 கழனிகள்    காப்பான்
     ஆற்று நீர்

 வளைவான்    நெளிவான்
 வளமை    குறையான்
 இரவாய் பகலாய்
 என்றும்    உழைப்பான்
       இருப்புப்  பாதை

 கானம்    இசைப்பான்
 கைகளில்    தவழ்வான்
 மோனத்    தவத்தில்
 மூழ்கிக்    கிடப்பான்
     வீணை

 பெண்கள்    பின்னால்
 பெருமையாய்    தொடர்வான்
 கவிஞர்கள்    பாடிடும்
 கருப்பொருள்    ஆவான்
       பின்னல் ஜடை

 நடந்தே    வருவான்
 நாலிடம்    அறிவான்
 கடந்தே    செல்வான்
 கள்வனும்    யாரோ
       கால்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக