சனி, 12 ஜூலை, 2014

பார்த்தசாரதி 267.

நினைந்தவர்   நெஞ்சினில்   நீயிருப்பாய் -கண்ணா
 நித்தமும்    தொழுதோர்   சுகம்   பெறுவார்
 வாழ்விலே   வரம் தரும்   வானமுதே -உன்னை
 வணங்கிடும்   அடியார்   நலம் பெறுவார்

 பிருந்தாவனத்தில்   ஆடித்  திரிந்த   பெருமானே -உமது
 பெருமையை    சொல்லுதல்   பெரும் பயனே
 மறந்தவர்    எவ்விதம்    இதம்   பெறுவார் -நிதம்
 மதித்தவர்   என்றுமே   பலம்   அடைவார்

 சத்திய நெறி   காத்திட   வந்தவன்  நீ -அன்று
 சமரிலே   கொடியவரைக்  கொன்றவன் நீ
 உத்தமி  தேவகியின்   புத்திரன் நீ -ஏழு
 உலகத்தை   ஆளும்   உத்தமன் நீ

 கம்சனை  வதைத்து  மக்களை   காத்ததும்  நீ -கொடிய
 காளிங்கன்   சிரசினில்  ஆடியதும்  நீ
 நம்பியவருக்கு   அருளும்   நாரணன்  நீ -பாரத
 நாட்டினர்   மனதில்   நம்பிக்கை  நீ

 கோபியர்   மனம்   கொஞ்சும்   கோபாலா --செய்த
 குறும்புகள்   சொல்லுதல்  உலகினில்   திருநாளே
 பாவிகள்   அழிந்திட   மண்ணில்   வந்தாய் -நல்
 பார்த்தனுக்கு  பாரதப்   போரிலே   சாரதி  நீ

 தினமுனைப்   பணிவேன்  திருமாலே -தூய
 திருவடி   நினைவேன்  பெருமாளே
 கனவிலும்  மறவேன்   வருநாளே -தெய்வ
 கருணையைப்  பாடுவேன்  தமிழாலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக