செவ்வாய், 15 ஜூலை, 2014

கோபாலன் 273.

மலர்கள்   அழைத்தன    மகிழ்வாலே -நானும்
 மயங்கியே   சென்றேன்   நறு மணத்தாலே
 இதயம்   கனிந்தது      எதனாலே -அதை
 எப்படிச்    சொல்வேன்   மொழியாலே

 கண்ணன்    பிறந்தான்    சிறையினிலே -அவன்
 கம்சனைக்  கொன்றான்    ஒருநாளில்
 உலகினைக்   காத்திட   வதம்  செய்தான் -அந்த
 உத்தமன்   சொல்வழி    நடப்போமே

 ஏழையின்    நெஞ்சத்தில்   இருக்கின்றான் -நமக்கு
 இன்பத்தை    அள்ளியே    தருகின்றான்
 ராதையின்   மனதில்   வசிக்கின்றான் -உலகில்
 நால்வகை   வேதமாய்    தெரிகின்றான்

 நினைந்து   நினைந்து   தொழுதாலே -என்றும்
 நித்தமும்   வருவான்   நம் இல்லத்திலே
 கன்னியர்   மானத்தின்    காப்பாளன் -அந்த
 கண்ணனின்    மறு பெயர்     கோபாலன்

 திருநாள்    வருவது    அவனாலே -என்
 தேகம்    துடிப்பது   உணர்வாலே
 வரும்நாள்   வாசல்    வழிபார்ப்பேன் -அவன்
 வந்ததும்    என்னுடன்    இணை சேர்ப்பேன்

 வெள்ளம்    வழியும்   என் வீட்டினிலே -ஏனோ
 விடியும்    பொழுதும்     கூட்டினிலே
 உள்ளம்    சிலிர்க்குமே   பாட்டினிலே -கண்ணன்
 உறவினைச்   சொன்னேன்    ஏட்டினிலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக