சனி, 5 ஜூலை, 2014

வரம் 256.

கனவினில்    கண்டது    யாவும் -இனி
 எனக்கு    கைவரக்   கூடுமோ
 காதலி   நான்வாழக்   கையைக்  கொடு -உனது
 கருணை   மழையிலே   நனையவிடு

 அன்னமே  எனக்கொரு   ஆணையிடு -இந்த
 அடிமைக்கு  அனுதினம்  வேலைகொடு
 முன்னமே  யாசித்தேன்  பிச்சையிடு -இல்லையேல்
 மோகத்தை  இன்றைக்கே  தீர்த்துவிடு

 கரிய   கூந்தலால்   கட்டிவிடு -எனது
 கற்பனைக்  குதிரையைத்  தட்டிக்  கொடு
 அறிந்திட   முடியாத  ஆழக் கடல் -நான்
 ஆயிரம்   எழுதினேன்   அன்புமடல்

 சிரித்து    எந்தனை ச்  சிறையிலிட்டாய் -இந்த
 சிறுவனை   ஏனின்னும்  அலையவிட்டாய்
 உரித்த    பழச்சுளை   நீயல்லவா -நல்
 உயிரில்   கலப்பவன்   நானல்லவா

 வெறுத்து  ஒதுக்குதல்   நீதியல்ல -நானும்
 வெம்பித்  தவிக்கிற   சாதியல்ல
 பொறுத்து  உனக்காகப்  பார்க்கிறேன் -உன்னை
 புரிந்தவன்   அதனாலே   கேட்கிறேன்

 மஞ்சம்  அழைக்குது   மறுக்காதே -பிரிய
 மணவாளன்  துடிக்கிறேன்  மிரளாதே
 நெஞ்சில்  எனக்கொரு  இடமளிப்பாய் -நாளும்
 நினைத்து  வாழ்ந்திட   வரமளிப்பாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக