புதன், 16 ஜூலை, 2014

நிலவுப் பெண் 278.

நிலவுப்    பெண்   வருகிறாள் -நமக்கு
 நிறைந்த    இன்பம்   தருகிறாள்
 உலவும்    காற்றே    வாகனம் -அவள்
 உலகம்    சுற்றும்    மோகனம்

 கால்கள்    இன்றியே    நடக்கிறாள் -என்றும்
 கல்லையும்    முள்ளையும்   கடக்கிறாள்
 ஆட்கள்    இல்லாதக்    காட்டினிலும் -இன்னும்
 அழகாய்    ஆட்சி    செய்கிறாள்

 பிள்ளைகளுக்கு    இரவில்    துணையாவாள் -நாம்
 பேசும்    தமிழிலும்    வாழ்கிறாள்
 கள்ளம்    அறியாத    நல்லவளாய் -நீள
 கடலினைத்    தாண்டியும்    செல்கிறாள்

 வானத்து    வெளியில்    வசிக்கிறாள் எங்கும்
 வசந்தத்தை    அள்ளியே    தருகிறாள்
 மோனத்    தவத்து    முனிவரிடையே -மாய
 மோகனப்    புன்னகை    புரிகிறாள்

 கவிஞர்கள்    வாக்கினில்    குடி புகுந்தாள் --நல்ல
 காவிய    ஓவியப்    பொருளானாள்
 புவியை    மறந்திடும்    காதலர்க்கு -செல்ல
 புன்னகைத்     தூதுகள்    செய்கிறாள்

 பௌர்ணமி    நாளில்    பரவசமாய் -இங்கு
 பகலில்    மட்டும்    தெரியாமல்
 உலகினில்    வாழ்வது    நிலவல்லவா -அதனை
 உள்ளத்தில்    நினைப்பது    சுகமல்லவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக