செவ்வாய், 15 மே, 2018

மன்னன்439

 கண்ணில்  தோன்றும்   உயிர்கள்  யாவும் --அந்த
கண்ணன்  செய்திடும்  வேலையே
மண்ணில்  மழையாய்  வருவான்  அவனே --இதனை
எண்ணிப்  பார்த்து   ஏற்றம்  கொண்டிடு  தோழனே

வானம் கடல்    பூமி  யாவும்  வள்ளல்  தந்த  சீதனம் --இதை
வழங்கியே  நம்மை  வாழ வைக்கும்  அவனது  நற்குணம்
தோன்றிடும்  துன்பங்கள்  போக்கிட  தோழனாக  வருபவன் --வரும்
தொல்லை  நீக்கி  வாழ்வில்  இன்பத்தை  யள்ளிக்  கொடுப்பவன்

அலறித்  தவிக்கும்  ஏழையர்க்கு  அடைக்கலமாய்  ஆனவன் --நமக்கு
அன்பு பாசம்  நன்றி யென  அனைத்தும்  சொல்லிக்  கொடுப்பவன்
புலரும்  பொழுதாய்  பூத்த மலராய்  புத்துணர்ச்சி  தருபவன் --இங்கு
பொறுமையோடு  வாழ்பவர்க்கு  பொங்கி  செல்வங்கள்  வழியுமே

கண்ணில்  கருணை  கருத்தில்  தெளிவு  கடவுள்  நமக்கு  தந்தது --இதனை
கருத்தில்  கொண்டால்  காலம்  நமக்கு  நல்லது
மண்ணில்  உள்ள  அனைவரும்  மாயவனாரின்  பிள்ளைகள் --இனி
மனதில்  கொண்டால்  இன்னும்  மகிழ்ச்சி  பெருகிடும்  மக்களே

ஏங்கியே  சோம்பி   இருந்து  விட்டால்   போதுமா --நீ
எடுத்த  பணியை  சிறப்பாய்  முடித்திட  வேண்டாமா ?
தூங்கிக்  கிடந்த  நிலையினை  மாற்ற  துணிந்து  எழுக --உனக்கு
தூண்டா  விளக்காய்  வழியைக்  காட்ட வருவானே  துணைவனாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக