ஞாயிறு, 27 மே, 2018

நியாயம் 457

 கலையின் வடிவமே   என் கண்ணன்  என்பேன் --அவன்
காதல்  கலையினில்  மன்னன்  என்பேன்
நிலையில்லாத  மனதினை  எனக்குத்  தந்தான் --தன்னை
நினைக்கவிட்டு  எங்கோ  பிரிந்து  சென்றான்

காலை  மாலை  என்று  கணக்கேயில்லை --இளம்
கன்னி  மனதில்  அவனது  ராஸலீலை
பாலினைக்  குடிக்கும்  பூனையைப்  போலே --அவன்
பறந்து  எங்கோ  எனோ  சென்று விட்டான்

கண்கள்  மயங்கி  எனக்கு  காதல்  சுரம் -எந்தன்
கண்ணா  உனைக்  கண்டாலே  ஆசை  வரும்
பெண்களின்  மனதும்  இன்னும்  புரியலையோ --நான்
புலம்புவது  உனது  காதில்  கேட்கலையோ

உணவும்  நீரும்  மறந்து  போனேன் --உனது
நினைவில்  தினம்  வெதும்பிப்  போனேன்
கனவாய்   என்வாழ்வும்   மாறிப்  போச்சே --என்மேல்
கருணை  காட்டிட  நல்ல  மனம்  இல்லையோ

கண்களை  மூடினால்  கனவுகள்  வருமே --உனது
காதல்  பாடம்  மட்டும்  நினைவு  தருமே
என்னில்  பாதியும்  நீயே  அன்றோ -இதனை
மறந்து  என்னையே  தவிக்க  வைத்தாய்

ஐந்து  காலங்கள்  உனக்குப்  பூஜை --என்
அன்பே  எனக்கு  உன்மேல்  ஆசை
நைந்து  நைந்து  நானும்  நூலாகினேன் --இது
நியாயம்  தானா  கண்ணா  நீயே  சொல்லு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக