வியாழன், 31 மே, 2018

ஆனந்தவேலன் 463

                             பல்லவி
நினைவாலே  உனக்கு  நித்தம்  பூசை  செய்தேன் --என்றும்
துணையாக  வருவாய்  தூயனே  வேலா    (நினைவாலே )
                            அனுபல்லவி
கலை மேவும்  எழிலே  கண் கவர்  அழகா --உனது
காலடி   ஒன்றே  எங்கள்  கவலைக்கு  மருந்தே  (நினைவாலே )
                             சரணங்கள்
இயல்   இசை  நாடக   இலக்கிய  முதல்வா --ஏழைகள்
துயர்  களைய   இன்றேனும்  நீ வா   வா
கயல்  விழி  வள்ளியின்  காதல்  மணவாளா --நீயும்
கற்பக  மயிலேறி   அற்புதம்  தந்திட  வா     வா (நினைவாலே )

சங்கடம்  தீர்த்திட  எங்கள்  சரவணா  வருவாய் --இங்கு
சகல  நன்மைகளும்  அடியவர்  பெறுவார்
பங்கயச்  செல்வி   பார்வதியின்  மகனே --உன்னை
பணிந்திடில்   பாபங்கள்  பறந்திடும்  குகனே   (நினைவாலே )

செந்தமிழ்  வேலனே  எங்கள்  சிவனாரின்  பாலனே --செய்த
சிறு பிழை  பொறுத்திடுக  சீர்மிகு   சீலா
தந்தையும்  நீயே  உலகில்  தாய்மையும்  நீயே --தமிழ்
மறை  யோதிடும்   ஞான  தத்துவப்  பொருளே

சிந்தையில்  வைத்தே  உனது  சிறப்புகள்  சொல்வோம் --என்றும்
சென்னிமலை  வாழும்  செங்கதிர்  வேலா
வந்தனை  செய்வோர்  வளம்பெறல்  உண்மை --அருளினை
வாரியே   வழங்கிடும்  வள்ளல்   நீயே  முருகா (நினைவாலே )

தமிழினில்  பாடிட   பல தகுதிகள்  வேண்டும் --உன்
தாளடி  தொழுதால்   சகலமும்   சேரும்
அமிழ்தென  இனித்திடும்  ஆனந்த  வேலா --எங்கள்
ஐயனே  உன்னையே  அனுதினம்  தொழுவோம்  (நினைவாலே )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக