செவ்வாய், 22 மே, 2018

சுடர் விடும் ஜோதி 451

                        பல்லவி
புவனம்  முழுதும்  ஆளும்   ஈஸ்வரி --எங்கள்
புதுகை  நகர்  காக்கும்  அன்னையே  எமை   ஆதரி  (புவனம் )
                        அனுபல்லவி
சாந்தானந்தர்  போற்றிய  சர்வேஸ்வரி -இங்கு
சகலமும்  நீயே   சற்குண  வல்லியே  அம்மா  (புவனம் )
                         சரணங்கள்
உலகினைக்  காத்திட  நீயும்  உருவாகினாய் --மண்ணில்
உள்ளோர்கள்   நலம்  காண  அருளாகினாய்
புலர்கின்ற   பொழுதெல்லாம்  உன்னால்  அன்றோ --எங்கள்
புவனேஸ்வரி  தாயே   பொன்  மனச்  செல்வியே  (புவனம் )

வரம் பெற  வேண்டியே  உன் வாசல்  வந்தோம் --நீயே
வழி  காட்ட  வேண்டுமென  வணங்கித்  தொழுதோம்
குறை தீர  திருமகளே   மனம்  கனிவாயம்மா --பல
குடும்பங்கள்    சுகம் காண  இனி  அருள்வாயம்மா  (புவனம் )

திருமாலும்  உன்னுடன்  இருக்கும்  உடன் பிறப்பு --உந்தன்
செவ்வாயும்   அருள்  சுரக்கும்  தனிச்  சிறப்பு
ஒருக்காலும்  உந்தனை  என்றும்  மறவோமம்மா --எங்கள்
உயிர் வாழ்தல்  உத்தமியே  நிந்தன்  அருளாளம்மா  (புவனம் )

இல்லையெனும்  நிலை நீக்க  நீயே  வருவாய்  --இந்த
ஏழையர்  வளம்  பெற  எண்ணம்  கொள்வாய்
தொல்லைகள்  சூழாமல்  தோகையே  காத்திடம்மா --என்றும்
தூயவளே   தேவியே  சுடர் விடும்  ஜோதியே  (புவனம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக