திங்கள், 14 மே, 2018

வெற்றி 436

                       பல்லவி          
அலைவாழ்  குமரா  அடியேன்  அழைத்தேன் --என்
அருகில்  வருவாய்  உன்னருளினைப்  பெறவே  (அலை )
                       அனுபல்லவி
கலையாய்  கனியாய்  நற்கருணை  நிழலாய் --மனம்
கனிவாய்  கந்தா  கதியருள்  மன்னவா  (அலை )
                       சரணங்கள்
பழனியை  ஆளும்  பாங்குடை  முருகா -உன்னை
பணிந்தால்  தானே  நற்பதமே  பெறலாம்
இனிதாய்  செந்தமிழில்  இருப்பவன்  நீயே --இதை
நாம்  அறிந்தால்  ஏற்றங்கள்  வரலாம்  (அலை )

அரக்கர்  குலத்தினை  அழித்திட்ட  வல்லவா --உந்தன்
அடியார்  தமக்கே  அருள்  செய்  தலைவா
உருவாய்  குருவாய் உணர்வெனும்  பொருளாய் --எங்கும்
நிறைவாய்  தெரிவாய்  நெடு வேல்  முருகா  (அலை )

நாவினில்  இருப்பது  நாயகன்  மந்திரம் --என்றும்
நல்லதை  யளிப்பது  நம்பியின்  நற்குணம்
பாவினில்  உறைந்திடும்  எங்கள்  பரமன்  மகனே --உனை
பாடியே   துதித்தோம்  நற்பதங்கள்  பெறவே  (அலை )

சக்தியின்  மகனாம்  சரவணனென்னும்  வேலன் --வரும்
சங்கடங்கள்  தீர்ப்பான்  சமயத்தில்   குகனே
முக்தியை  யளிப்பது  முருகன்  அல்லவா --மன
மோகத்தை  நீக்கிடும்  மோஹனம்  சொல்லவா  (அலை )

காலம்    உந்தன்  கைகளில்  சுழலும் --உனது
கண்கள்  அசைவினில்  காவியம்  மலரும்
வேலினைக்  கொண்டே  வினைகள்  அழிப்பாய் --தன்னை
வேண்டுவோர்  தமக்கே  என்றும்  வெற்றியே  கொடுப்பாய்  (அலை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக