வெள்ளி, 25 மே, 2018

வள்ளிநாயகன் 456

 கதிர் வேல்   முருகன்  கருணை  புரிவான் --அவனை
கருத்தாய்  துதித்தால்  கவலைகள்  மறையும்
மயிலில்  வருவான்  நம் மனதில்  நுழைவான் --அங்கே
மகிழ்வாய்  தங்கியே  புது மலராய்  சிரிப்பான்

தமிழாய்  ஒலித்திடும்  நம் தலைவன்  அவனே --நற்
தணிகை  மலைவாழ்   தங்கமும்  குகனே
அமிழ்தாய்  இனிப்பான  அடியார்  தமக்கே  --அவனது
அடிகளைப்  பற்றினால்  அடையலாம்  முக்தியே

செவ்வாய்  திறந்திட  செல்வம்  பொழியும் --அவன்
திருவேல்  நம்மையே  தினமும்  காக்கும்
அவ்வைக்  கிழவிக்கு  அளித்தது  நாவற்பழம் --என்றும்
அன்பால்  நினைத்தால்  அருள்வது ஞானப்பழம்

இனிமேல்  பிறவிகள்  எடுத்திட  வேண்டாம் --நம்
இறைவன்  முருகன்  நமைத் தடுத்தே  காப்பான்
துணிவாய்  அவனைத்  தொடர்ந்தால்  இன்பம் --இனி
தூரமாய்  ஓடிடும்  தொல்லையும்  துன்பமும்

நாவால்  சொன்னால்  நாளையும்   நமக்கே --அவனை
நம்பியே  இருந்தால்   நற்பலன்  கிடைக்கும்
பாவினில்  உறைவான்  நம் பக்கம்  இருப்பான் --தூய
பாதங்கள்  பணிந்தால்  நற்பதங்கள்  கொடுப்பான்

வேலும்  மயிலும்   விரைந்தே  வருக --எங்கள்
வினைகள்  மறைக  வெற்றிகள்  தொடர்க
நாளும்  பொழுதும்   நம்பியின்  நினைவே --உலகில் 
நங்கை  வள்ளியின் நாயகன்  ஷண்முகனே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக