சனி, 12 மே, 2018

மருவூர் அரசி 433

                     பல்லவி
மருவூரில்  அரசாளும்  எங்கள்  மகராசியே --மண்ணில்
மனிதர்கள்   வாழ்வது  உங்கள்  அருளாசியே  (மருவூரில் )
                     அனுபல்லவி
உருகாத  மனமெலாம்   உருகிடச்   செய்வாய் --எங்கள்
உயிரானாய்  உணர்வானாய்  உத்தமி  சக்தியே  (மருவூரில் )
                      சரணங்கள்
பங்காரு   நெஞ்சமதில்   நீயும்  பதிவாகினாய் --வணங்கும்
பக்தர்கள்   இல்லத்தில்   என்றும்   நிதியாகினாய்
ஓங்கார  நாதத்தில்   உருவான  தேவியே --நாங்கள்
உன்முகம்  பார்த்திடில்  பறந்திடும்  துயர்களே   (மருவூரில் )

வேப்பிலை  துணையாலே   வினைகளை  மாற்றுவாய்  --நீயோ
வேதத்தின்  நிறைவாகி   என்றும்  மறையாகினாய்
காத்திட  வந்திடும்   எங்கள்  காருண்யச்  செல்வியே  --இங்கே
கற்பகமே  அற்புதமே   கனிந்தருள் புரிவாயே  (மருவூரில் )

உன்வாசல்  ஏழைக்கு   எந்நாளும்  படைவீடு  --நீதான்
உலகாளும்   உமையென்பது  தமிழர்கள்  ஏடு
கண் திறந்து  பார்த்திடில்  கவலைகள்  நீங்கும் --இந்த
கலிகாலம்  காண்கின்ற  எங்கள்  காமதேனுவே  (மருவூரில் )

செவ்வாடை  பக்தர்கள்  தினமும்  கூடுவார் --தேவி
உந்தன்  திருப்புகழ்  பாடி திருவருள்  நாடுவார்
பெய்யாத  மழை  சரிவரப்  பெய்திடச்  செய்குவாய் --எம்
பெருமாட்டி  நீ  விழி காட்டி   நல்லருள்  கூட்டுவாய்  (மருவூரில் )

தீராத  பிணி  களெல்லாம்  சிதறியே  ஓடும் --தேவி
உன்னருளாலே  வாழ்வில்   திருப்பமும்  கூடும்
மாறாத  மனம் கூட  ஒருநாள்  மாறியே  தீரும்  --எங்கள்
மாதரசி  உன்னருளாலே எங்கிலும்  மகிழ்ச்சியே  பொங்கும்  (மருவூரில் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக