ஞாயிறு, 6 மே, 2018

வேலன் 417

 கந்தா  வேலா  கடம்பா  வருவாய் -செங்
கதிர்  வேலா  கருத்தினில்  நிறைந்தாய்
செந்தமிழ்  காத்திடும்  செவ்வேள்  நீயே -என்
சிரமதை   தாழ்த்தி  உந்தன்  பத மலர்  பிடித்தேன் (கந்தா )

வேலினை  நினைத்திட  வெற்றிகள்  குவியும் -உன்னை
வேண்டுவோர்  மனதில்  அன்பு வெள்ளமே  நிறையும்
நாளை என்பதே  நல்லதின்  தொடக்கம் -இங்கே
நாயகன்  நீ  வர  எல்லாம்  நல்லதாய்  நடக்கும்  (கந்தா )

குன்றில்   ஆடிடும்  குருபரக்  குமரனே -எங்கள்
குறைகள்  தீரவே  நீயும்  மயிலினில்  வருவாய்
என்றும்  நிலைப்பது  இறைவன்  துணையே -இதனை
ஏற்றவர்  பெறுவது  எல்லா  நலமே   (கந்தா )

வாவென  அழைத்தால்  வந்திடும்  முருகா -எங்கள்
வள்ளி  மணாளனே  வல்லமை  அருள்வாய்
வயலூர்  பதிதனில்   வலம்  வரும்  முருகா -வள்ளல்
அருணகிரி  பாடிட  தமிழ் வரிகளைச்  சொன்னாய்  (கந்தா )

செந்தூர்ப்  பதி  திகழ்  செந்தில்  வேலா --பரம
சிவனார்  பெற்ற  சீலனும்  நீயே
முந்தைய  வினைகளை  முற்றிலும்  நீக்கி -எங்கள்
மூடத்தை ப்   போக்கி  மோட்சமும்  அருள்வாய்  (கந்தா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக