திங்கள், 21 மே, 2018

ஆனந்தம் 447

 மறையே  புகழும்  மாதவச்  செல்வி --தமிழ்
மண்டலம்  போற்றிடும்  மங்கள மகளே
குறைகள்  களைந்திடும்  கொற்றவியே  வருவாய் --உந்தன்
கோவிலில்  நின்றே   கூட்டமாய்த்  தொழுவோம்

நீராய்  நிலமாய்  நெருப்பாய்  இருப்பாய் --ஏழை
நெஞ்சில்  என்றும்  குடியாய்   வசிப்பாய்
பாரோர்  வணங்கிடும்  பங்கஜ மலரே  --உன்னை
பக்தியுடன்  அழைததோம்   நற்பதங்கள்  தருவாய்

கைகளில்  சூலம்  உன் கண்களில்  வீரம் --எங்கள்
கவலைகள்  போக்கிட  காளியே  வருவாய்
பொய்களை  சுமந்தோர்  பொசுங்கியே  போவார் --அந்த
புல்லர்களை  அழித்திட   புறப்படு  புயலாய்

நிலைக்கிற  மகிழ்வும்  நீங்காத  செல்வமும் --நினை
தொழுதிடில்  எமக்கு  நிச்சயம்  கிடைக்கும்
கலைகளின்  அரசியே  எங்கள்  கந்தனின்  தாயே --செய்த
பிழைகளைப்  பொறுத்து  நீ  பேரருள்  புரிவாய்

வாழ்வு  உன்னால்  வளம்  பெற  வேண்டும் --மண்ணில்
வற்றாத  நதிகளை  நீயும்  தந்திட  வேண்டும்
ஆழ்கடல்  முத்தே   அன்பெனும்  தாயே  --உன்னை
அனுதினம்  வணங்கியே  நல்  ஆனந்தம்  பெறுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக