புதன், 9 மே, 2018

வடிவேல் 426

                         பல்லவி
வடிவேல்  முருகன்  வருவார்  என்று --நல் 
வரமே  வாழ்வில்  தருவார்  இன்று  (வடிவேல் )
                          அனுபல்லவி
அடியே  தோழி  அவர்  வரவில்லையே -இந்த
அபலை  எனக்கு  காதல்  தொல்லையே (வடிவேல் )
                           சரணங்கள்
கனியின்  இனிப்பும்  கசப்பாய்ப்  போச்சோ --இளம்
கன்னி  நிலமையும்   இங்கே  கானல் நீரோ
இனியும்  அவரே   இவண்  வருவாரா --ஏழை
என்ன தான்   நான்  செய்வேன்  கூறடி  தோழி  (வடிவேல் )

சிரிக்கச்  சிரிக்க   சிறையில்  இட்டார் --என்
சிந்தை  அணுக்களை  சிலிர்க்க  வைத்தார்
மணக்கும்  முல்லை  மலராய்  சிரித்தேன் --இன்று
மண்ணில்  மறையும்  சருகாய்  ஆனேன்  (வடிவேல் )

தனியாய்  அணைத்திட்ட  என்தலைவன்  எங்கே --தினமும்
தாளாது  தவிக்கும்  பெண்ணும்  இங்கே
முனிவர்  போற்றும்  முத்தமிழ்ச்   செல்வன்  --என்
மோகம்  தீர்த்திடும்  நாளினி  வருமோ ?(வடிவேல் )

கொடுத்து  எடுத்து  குலவியே  கிடந்தோம் --என்னுள்
கொள்ளை  இன்பம்  வழிந்ததை  உணர்ந்தேன்
தடுக்க    நினைக்கும்   தர்மன்  யாரோ --இன்றே
தயை  கூர்ந்து   இதனை  நீயும்  அறிந்திடுவாயே  (வடிவேல் )

காதல்  என்றால்  உலகில்  கண்ணீர்   தானோ --மனதில்
கவலைகள்  சூழ்ந்திட  கலங்குதல்  முறையோ ?
வேதம்  பயின்ற   வித்தகர்   சொல்வீர் --இனியே
விரைந்து  அவரை  என்னிடம்  சேர்ப்பீர்  (வடிவேல் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக