திங்கள், 28 மே, 2018

வேலவன் 458

 நினைவாலே  உனக்கு  ஒரு  கோவில்  அமைத்தேன் --என்
நெஞ்சினை   அதற்கு  காவல்   வைத்தேன்
கணமேனும்  உன்னை  நான்  மறக்கவில்லை --இனி
கந்தனே   நீயும்  என்பால்   கருணை  புரிவாய்   (நினைவாலே )

அழகான  மனைவிகளோடு  ஆனந்தக்  குடும்பம் --என்
அண்ணலே  உன்னையன்றி  யாரிடம்  சொல்வேன்
பழமாக  நின்றது  தென்  பழநியில்   அன்றோ --அந்த
பரமனார்   பெற்ற  பசுந்  தங்கம்  நீ   யல்லவோ  (நினைவாலே )

கந்தா உன்  பார்வை  பட்டால்  கடும்  வினை  பறந்தோடும் --தினம்
சிந்தையில்  நினைத்தாலோ   சிறப்பான   வாழ்வமையும்
வந்திடும்  துன்பங்கள்  நீ  வந்திடில்  நில்லாது --எம்
வாழ்வினில்  உன் அருளே   வல்லமை  எனும்  பேறு  (நினைவாலே )

வீரமாய்ப்  போரிட்டு  வெஞ்சமரில்  ஜெயித்தாய்  --எம்மை
விழிப்புடன்  காவல்  செய்து   வெற்றிகளை  யருள்வாய்
கோரிடும்  அடியவர்  குறைகளையும்   தீர்ப்பாய் --எங்கள்
கொற்றவன்  நீயேயென  குகனுனைப்  பணிவோம்  (நினைவாலே )

சங்கத்  தமிழ்  வளர்த்த  ஷண்முகனும்  நீயே --வந்த
சங்கடங்கள்  போக்கியே  நல்ல  சாந்தியினை  தருவாய்
பொங்கிடும்  அழகினில்  சரவணபொய்கையிலே  மலர்ந்தாய் --எங்கள்
புண்ணியனே   வேலவனே  போற்றுகிறோம்  தினமே  (நினைவாலே )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக