திங்கள், 7 மே, 2018

முத்திரை 423

                      பல்லவி
மஞ்சள்  வெய்யலிலே  மாலைப்  பொழுதினிலே --அன்று
கொஞ்சிட  வந்த  கோவலன்  யாரடி (மஞ்சள் )
                       அனுபல்லவி
தஞ்சமென்றவன்  என்னைத்  தழுவியே  அணைத்தான் --இந்த
தையல்  மீது  உள்ள  தாகத்தையும்  தணித்தான்  (மஞ்சள்)

                        சரணங்கள்
அஞ்சன  வண்ணன்  ஆருயிர்க்  கண்ணனோ --என்றும்
அடியவர்  மனம்  குளிரும்   ஆறுமுக  வேலவனோ
வெஞ்சமர்  களத்தினில்  விளையாடும்  வீரனோ --எங்கும்
வெற்றி  பல குவிக்கும்  வேங்கையின்  மை ந்தனோ (மஞ்சள் )

கையில்  என்னை  எடுத்தான்  கனி யமுதம்  கொடுத்தான் -இரு
கண்களால்   வளைத்து  என்னிடம்  காமரசம்  படித்தான்
பொய்யினில்   பிறந்த  புலவனோ  நானறியேன் --இந்த
பூங்கொடி  மீதினிலே  காதல்  போரினைத்  தொடுத்த   (மஞ்சள் )

வில்லாலடி  பட்டது  போல  வேதனை  மீறுதடி -காதல்
வேட்கை  எனை  வருத்த  வேறெங்கோ  சென்றானடி
பொல்லாத  ஆசைகள்  புதிதாய்க்  கிளம்புதடி -என்னை
புரிந்தவன்  அவனை  எண்ணி  புகலிடம்  தேடுதடி  (மஞ்சள் )

இரவென்றும்  பகலென்றும்  இருப்பது  மறந்ததடி --இன்று
என்னவன்  வரவில்லையென  ஏக்கம்  பிறக்குதடி
உறவினை  நாடியே  உள்ளம்  அலையுதடி --அந்த
உத்தமன் அழகன்  ராஜ முத்திரை   பதித்தானடி (மஞ்சள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக