சனி, 19 மே, 2018

திருமணம் 446

 நீராடும்  பொழுதில்  நிலைமாறிப்  போனேன் --உன்
நினைவாலே  நானும்  தடம்  மாறிப்  போனேன்
வேரோடு  சாய்த்தாய்  உன் விழியாலே  வென்றாய் --இதை
விளக்கமாய்  நானென்ன   வெளியிலே  சொல்ல

பேரோடு  புகழும்  பல  பின்னணிகள்  இருந்தும் --என்னை
ஊரார்கள்  இகழும்  உன்மத்தன்  ஆனேன்
கூறாக்கி  எனையேன் கொல்கிறாய்  பெண்ணே --இங்கு
குலவிட  வந்ததில்  கோபம்  தானோ  கண்ணே

சிரித்தாலே   போதும்  பல ஜீவன்கள்  பறிபோகும் --என்
சிங்காரச்  சிலையே  சீற்றமினி  வேண்டாம்
எரிக்கின்ற நிலவும்  என்று  இளமையாகும் --என்று 
ஏந்திழையின்  மனமோ  இயல்பாக  மாறும்

விழி வீசிக்    கொல்லுதல்  வேலையோ  பொன்னே --உன்
விரல்  பட்டால்  போதும்   வேதனைகள்  தீரும்
பழி சொல்லல்  தகுமோ  தங்கப்  பதுமையே  சொல்லு --தினம்
பாத மலர்  பணிவேன்  என்பரிசாகக்  கொள்ளு

தனியாக  போனால்  தாங்காது  மனசு --உனக்கு
துணையாக  வந்து  தோழனாய்க்  காப்பேன்
இனியேனும்  நெஞ்சினில்  இரக்கமும்  வருமோ --என்
எழில் ராணி  உனை  யெண்ணி  ஏங்குதல்  முறையோ

மலர் சூட்டி    மங்கையுனை  மணந்திடவும்  வேண்டும் --உனது
மடியினில்  சாய்ந்து  நல்ல சுகம்  நான்  காணவேண்டும்
புலர்கின்ற  பொழுதும்  இனிப்  புதுமையாய்த்  தோன்றும் --நீயும்
புரிந்து   கொண்டாலே  எனக்கும்  புதுவாழ்வு  மலரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக