வியாழன், 24 மே, 2018

பிரியம் 453

 கவலையின்றி  காலம்  சென்றது  தோழியே --அந்த
கள்வன்  வந்த  போதிலே  கலக்கமானேன்  மனதிலே
புயலைப்  போலவே  எனது  நெஞ்சில்  புகுந்தவன்  யாரடி --அதனை
தெரிந்து  கொண்டு  என்னிடம்  இன்றே  சொல்லு  தோழியே

நிலவும்  வாழ்வும்  வெறுத்துப்  போனேன் --அவனை
நினைத்து  நினைத்து  மனம்  உருகலானேன்
பலம்  அனைத்தும்  இழந்து  போனேன் --இளம்
பருவ  தாகம்   தன்னில்   வீழ்ந்தேன்

எண்ண  ஓட்டம்  குறைந்து  போச்சு --இன்னும்
இதயத்  துடிப்பு   அதிகம்  ஆச்சு
மன்னவனை  நினைச்சு  மயக்கமாச்சு --என்று
வருவானென  ஏக்கமும் கூடிப்போச்சு

வெளியில்  சொல்ல  எனக்கு  வழியுமில்லை --வந்த
விரக  தாபம்  இன்னும்  தீரவில்லை
விழியில்  புகுந்து  அவனே  விஷமம்  செய்தான் --என்னை
வேதனைத்  தீயினில்   வெம்பிட  வைத்தான்

கண்களில்  கண்ணீர்  வற்றிப்  போச்சு --இன்னும்
அவனது  காதலெனையும்   வதைக்க  லாச்சு
பெண்ணாய்ப்  பிறந்தேன்  என்ன செய்வேன் --பிரிய
தோழி  எனக்குச்  சொல்லேன்  ஒரு நல்ல  செய்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக