செவ்வாய், 1 மே, 2018

விநாயகன் 402

 தொந்தி  வயிற்றோனே  தொப்பைக் கணபதியே --இன்று
வந்தனை  சொல்லி  வாழ்த்தி ப்  பாடுகிறோம்
மந்த நிலை  அகற்றி  இங்கு  மகிழ்ச்சி  பொங்க வேணும் --நாங்க
சொந்த  சனம்  கூடியிக்கே  துதி  செய்தோம்  கேளுமய்யா  (தொந்தி )

ஆற்றங்கரை யருகே  அழகான  மரத்தடியில் --நன்கு
வீற்றிருக்கும்  எங்கள்  குல  வெற்றி  விநாயகரே
சோற்றுப்  பஞ்சம்  பெருகியே  சோதனை  யாச்சு தய்யா --ஒரு
நாற்று ம்  நடவாமல்  நாங்க  படும்  துன்பம்  கோடியய்யா  (தொந்தி )

தம்பியின்  மணமுடிக்க  தாவி வந்த  நல்லவரே -உலகில்
தருக்கர்  பகையொழிக்க  தாரணியில்  வந்தவரே
நம்பியுனை  வேண்டுகிறோம்  நன்மைகள்  செய்திடய்யா --நாளும்
நானூறு  பூசை   போட்டு  நல்லபடி  கும்பிடுவோம் (தொந்தி )

சூறைத்  தேங்காய்கள்  ஜோராக உடைத்திடுவோம் --இந்த
பாரைச்   செழிக்க  வைக்க  பாங்குடனே  வரவேணும்
ஊரை க்  காப்பதற்கு  உம்மை  விட்டால்  யாருமில்லை --அந்த
உத்தமி   பார்வதியின்  உள்ளம்  கவர்ந்தவனே  (தொந்தி )

பொரி  கடலை  அப்பம்  பல  பூக்கள்  வகையுடனே --இனிப்பு
பொங்கலிட்டு  வேண்டுகிறோம்  பூபாலன்  மருமகனே
பானை வயிரினுக்கு  பால்  பாயசம்  தந்திடுவோம் =இந்த
பாரெல்லாம்  வளம் கொழிக்க  பரவசமாய்  வந்திடய்யா (தொந்தி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக