ஞாயிறு, 6 மே, 2018

ஈஸ்வரி 420

 சமயபுரம்  மாரி  எங்கள்  சங்கரியே   வாருமம்மா --நாங்க
  அபய  கரம்  நீட்டுகிறோம்  ஆதரிக்க  வேண்டுகிறோம்
வேப்பிலையைக்  கையில்  ஏந்தி  விரைந்து நீ  வருவாயம்மா --வரும்
வினைகளைத்  தீர்த்திடவே  வேதவல்லி  வாருமம்மா  (சமயபுரம் )

மண்ணில்  மாரி  பொழிவதற்கு  மனமிரங்கி  வாருமம்மா --ஏழை
மக்கள்  நலம் பெறுவதற்கு  மாதா நீ   வரவேணும்
உந்தன்  மனமிளகி  உதவி  செய்ய  வந்திடம்மா -எங்க
உத்தமி  பத்தினியே  உமையெனும்  திரு மகளே  (சமயபுரம் )

வாசலில்  நிற்கிறோம்  வந்துவிட  மனமில்லையோ --என்றும்
வல்லமை  கொண்டவளே  வாழ்வரசி  பொன்மகளே
மோசமெனும்  செயல்களை  முன்வந்து  அழிப்பவளே --நீ
ஏழை   மானம்   காப்பதனால்  எங்கள்  குல நாயகியே  (சமயபுரம் )

வேம்பு  மரத்தடியில்  வித்தைகள்  காட்டுபவளே --இங்கே
ஓங்கார  நாயகியே  உலகளந்தோன்  சோதரியே
பாம்பு  குடை  பிடிக்க  பவனியாய்  வருபவளே --அன்பு
பார்வதியே  மலை மகளே  பரசிவன்  துணைவியே  (சமயபுரம் )

யாரும்  கடன்  வைத்தாலும்   மாரி  கடன்  கூடாது --இதனை
மறந்து  போனவர்க்கு  மலையளவு  வரும்  தீது
ஊரும்  உலகமும்  உன்னருளால்  செழிக்குமம்மா --நீயும்
ஒய்யார  நடை  நடந்து  உயிர்கள்  காத்திட  வாருமம்மா  (சமயபுரம்)

சித்திரை  முதல்  செவ்வாயில் உனது  சிங்காரத்  தேர்  வருமே --உலகில்
பத்தரை  மாற்றுப்  பசுந்தங்கம்   நீயல்லவோ
இத்தரையில்   வாழும்  எங்களைக்  காத்திடம்மா --அந்த
ஈசனார்  மனங்குளிர  ஈஸ்வரியே  வாருமம்மா  (சமயபுரம் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக