வியாழன், 17 மே, 2018

தேவி 442

 கடலில்  ஆடிடும்  கப்பலைப்  போல --என்
காதலி  நீயெனை  ஆடிட   வைத்தாய்
உடல்  மட்டும்  என்னிடம்  இருக்க  --நீயென்
உயிரை  எதற்கு  எடுத்துச்  சென்றாய்

நீயும்  நானும்  நிலைப்  போமென்றே -தினம்
 மனதினில்  நினைத்து  வாழ்ந்தேன்
காயும்  நிலவும்  வீணாய்ப்  போச்சே --எனது
கண்களில்  கண்ணீரும்  வழிந்திடலாச்சே

எதனை  நினைத்தடி  என்மேல்  கோபம் --பொங்கும்
இதய  நிலவே  நானும் தான்  பாவம்
உதவி  செய்திட   உன்மனம்  தொல்லையோ --நான்
உயர்ந்திட  ஒருவழி  எனக்கு  இல்லையோ

கூட்டை  மறந்த  பறவை  யானேன் --உன்
கொள்ளை  அழகினில்  மயக்க  மானேன்
வேட்டை  என்னையே  ஆடலாமோ --இந்த
வேதனை  நானும் கொண்டி டலாமோ

வாடிக்  கிடக்கும்  பயிர்கள்  கூட --அந்த
வானத்து  மழையால்  வாழ்வு  பெறுமே
தேடி  அலைந்து  திரியும்  எனக்கு --இந்த
தேவியின்  அருளும் கிடைத்திட  வில்லையே

இரவும்  பகலும்   பிரிந்திட  மாட்டேன் --உன்னை
இன்பமாக  வாழ்ந்திட  வைப்பேன்
உறவின்  தொடக்கம்  இந்த  மாலை --நம்மை
உலகம்   அறிந்திடும்   நல்ல  நாளை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக