ஞாயிறு, 6 மே, 2018

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 418

 அடிவெள்ளியில்  தொழுவார்  ஆயிரம்  கோடி --எங்கள்
அகிலாண்டேஸ்வரி  அன்னையே  அழகே  வருவாய்
நாடி   வருபவருக்கு  நல்லருள்  பொழிபவளே -நாங்கள்
உன்னாலே  நன்மைகள்  பெற  வேண்டுமம்மா  (அகிலாண்டேஸ்வரி )

மா விளக்கேற் றியல்லோ  மங்கையர்கள்  பாடுவார் --உனது
மகிமை தனைச்  சொல்லி  வந்துள்ள  மக்களும்  ஆடுவார்
கோவிலைச்  சுற்றியே   குலவை  இடுவார்கள் --நீயும்
கோலவிழி  திறந்தால்   குளிர்ந்திடும்  பூமியன்றோ  (அகிலாண்டேஸ்வரி )

உச்சிப்  பகலில்  இங்கே  உமாபதி  பூசை --எங்கள்
உமையே  உன்னாலே  உயர்ந்திடவே  ஆசை
கச்சை  யணிந்திட்ட  கற்பகமே  தாயே --உந்தன்
காலடி  தொழுதேன்  காத்தருள்  செய்திடம்மா  (அகிலாண்டேஸ்வரி)

மஞ்சள்  குங்குமத்தின்  மகத்துவம்   நீயல்லவா --அந்த
மலையரசன்  பெற்றெடுத்த  மாமணி  திரு விளக்கே
நெஞ்சமதில்  நினைத்தே   நின்னைப்  பணிகின்றேன் --நீயும்
நேரினில்  வந்தே   நிம்மதி   யருள்வாயே  (அகிலாண்டேஸ்வரி )

மங்கலம்  பெருகிடவே  நம்மனைகளில்  வருவாள் --அந்த
மகாதேவன்  மனதில்  உறையும்  மாதரசித்   தாயே
எங்கிலும்   வளங்கள்  பொங்கிட  வேண்டுமம்மா --எங்கள்
இறைவியே  ஈஸ்வரியே  இவண்  நீ   வருவாயம்மா  (அகிலாண்டேஸ்வரி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக