செவ்வாய், 29 மே, 2018

கருணாநிதி 460

                            பல்லவி
கருணாகரா   இறைவா   கயிலை  மலை  வாசா --நீ
கனிந்தருள்  புரிகுவாய்   காப்பதுன்  குணமே (கருணா )
                            அனுபல்லவி
சிறுவன்  நான்  செய்த  சிறு  பிழையெல்லாம் --இனி
பெரு மனத்துடனே  பொறுத்தருள்  செய்குவாய் (கருணா )
                             சரணங்கள்
அடியவர்  தொழுதிடும்   அன்பெனும்  நேசா --உன்
அன்பினைப்  போற்றுதல்  ஆனந்த  விசுவாசமே
முடிதனில்  கங்கை  மோட்சமருள்  செங்கை --என்றும்
முழுநிலவாய்த்  திகழும்  எங்கள்  மூர்த்தமும்  நீயே  (கருணா )

கையினில்  சூலம்  உனது  கண்களில்  பாசம் --உன்
மெய்யடி   தொழுதால்  மேம்படும்  தேசம்
பெய்திடும்  மழையின்  பிறப்பிடம்  உன்  சடையே --இந்த
மேதினி  செழித்திட   மண்ணில்  வான் மழை  பொழிவாய்  (கருணா )

கருணாநிதியே  எங்கள்   கண்கண்ட  தெய்வமே --உனது
கழலடி   தொழுதே  வந்த  கவலையை  மறப்போம்
அருணோதயம்  போல்   ஆகிடும்   எம்  வாழ்வு --ஐயன்
நினைத்தால்  இங்கு  அகலுமே  தாழ்வு          (கருணா )

மலையினில்  வாசம்  மக்களின்  நேசம் --கடும்
புலியின்  தோலினை  புனிதமாய்  அணிந்தாய்
நிலைத்திடும்  செல்வம்  எமக்கு   நீயே  அன்றோ --மனதில்
நிம்மதி  என்பதும்   நினைத்  தொழல்   என்றும்  (கருணா )






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக